உலகின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நாடான சீனாவில், மின் விநியோகக் கட்டமைப்பின் (Grid Capacity) போதாமை காரணமாக பெருமளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Clean Energy) வீணடிக்கப்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற பிற நாடுகளிலும் இதே போன்ற மின் கட்டமைப்பு நெருக்கடி எழுந்துள்ளது.


மெக்சிகோ நாட்டின் ஓராண்டு தேவைக்கு இணையான மின்சாரம் வீண்:
உலகளாவிய ஆற்றல் கண்காணிப்பகம் (GEM) மற்றும் ஆற்றல் மற்றும் தூய்மையான காற்று ஆராய்ச்சி மையம் (CREA) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஜனவரி முதல் ஜூன் வரை) சீனா சுமார் 360 டெராவாட்-மணிநேரம் (TWh) தூய்மையான மின்சாரத்தை விநியோகக் கட்டமைப்பில் இணைக்க முடியாமல் நிராகரித்துள்ளது. இது மெக்சிகோ நாட்டின் ஒட்டுமொத்த ஓராண்டு மின் தேவைக்குச் சமமான அளவாகும்.
சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், போதிய மின்கடத்தி உள்கட்டமைப்பு (Transmission Infrastructure) இல்லாததே இந்த வீணடிப்பிற்கு முதன்மைக் காரணமாகும். இதனால் சீனாவில் கடந்த ஆண்டை விட தூய்மை மின்சார நிராகரிப்பு 49 சதவீதம் அதிகரித்துள்ளது.
மீண்டும் அதிகரிக்கும் நிலக்கரி மின் உற்பத்தி:
கட்டமைப்பு வசதிகள் இல்லாமையினாலும், புதிய நிலக்கரி மின் நிலையங்களுடனான ஒப்பந்தங்கள் காரணமாகவும் இயற்கை வழியில் கிடைக்கும் காற்றாலை மற்றும் சூரிய மின்சாரம் வீணடிக்கப்படுகிறது. இதனால், சீனாவில் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி மீண்டும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இது உலகளாவிய கார்பன் குறைப்பு இலக்குகளுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
புதிய முதலீடுகளில் தொய்வு:
மின் விநியோகக் கட்டமைப்பு திறனைத் தாண்டி மின்சாரம் உற்பத்தியாவதால், சீனாவில் இந்த ஆண்டு புதிய சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான முதலீடுகள் சுமார் 66 சதவீதம் வரை சரிவைச் சந்தித்துள்ளன. இந்த கட்டமைப்புப் பிரச்சனை குறுகிய காலத்தில தீராது என்றும், நடப்பு தசாப்தத்தின் இறுதி வரை நீடிக்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
- சீனாவில் 6 மாதங்களில் 360 TWh தூய்மை மின்சாரம் விநியோகக் கட்டமைப்பு பற்றாக்குறையால் வீணடிப்பு.
- சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சாரத்தை ஏற்க முடியாத சூழலால் நிலக்கரி மின் உற்பத்தி அதிகரிக்கும் அபாயம்.
- மின்கடத்தி உள்கட்டமைப்பு பற்றாக்குறையால் ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளின் மின் அமைப்புகளும் திணறல்.
பெல்ஜியத்தின் மிகப்பெரிய காட்டுத்தீயை அணைக்க உதவும் மழை: தீயணைப்பு வீரர்களுக்கு புதிய நம்பிக்கை!
