விமான நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த பணியாளர்களை நியமித்து, அவர்களுக்கு முறையான சம்பளம் மற்றும் ஓய்வு அளிக்கிறபோது விபத்துக்கள் நிகழாமல் தடுக்கலாம் என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்து தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் நாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- ஜூன் 12ஆம் தேதி மதியம் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு ஏர்இந்தியா விமானம் 230 பயணிகள் உள்பட 242 பேருடன் புறப்பட்டது. விமானம் புறப்பட்டு ஒரு நிமிடத்திற்குள் அருகில் உள்ள கட்டிடத்தின் மீது விழுந்து வெடித்து சிதறியது. விமானத்தில் எரிபொருள் முழுமையாக நிரப்பட்டிருந்தால் வெடித்தபோது பிரம்மாண்டாமான விபத்து ஏற்பட்டது. அதில் ஒருவர் தான் உயிர் தப்பினார். விமானி கடைசியாக கட்டுப்பாட்டு அறைக்கு சொன்னது Mayday Mayday Mayday என்பதுதான். கருப்பு பெட்டியை கண்டுபிடித்தாலும் இதை தாண்டி கண்டுபிடிக்க எதுவும் இல்லை. ஏனென்றால் விமான பறக்கத்தொடங்கி ஒரு நிமிடத்திற்குள்ளாக மருத்துவக்கல்லூரி விடுதிக்கட்டிடத்திற்குள் விழுந்துள்ளது. அதில் மருத்துவ மாணவர்கள் உள்பட பலர் உயிரிழந்துள்ளனர். தொழில்நுட்ப ரீதியாக பேசுவதென்றால் அகமதாபாத் விமான நிலையம் பறவைகள் மோதல் சம்பவங்களுக்கு பெயர்போனதாகும். 2022-23ஆம் ஆண்டில் மட்டும் 38 பறவைகள் மோதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். ஏர்இந்தியா விமான இன்ஜின்கள் மீது பறவைகள் மோதியிருக்க வாய்ப்புகள் குறைவுதான்.
விமானம் பற்றி எரிவதை பார்க்கிறபோது அது மனித தவறாக இருக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் நிபுணர்கள் கருதுகிறார்கள். விமானம் பறக்கத் தொடங்கியபோது உயரே செல்ல முடியாததால்தான் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருந்தால் 2 இன்ஜின்களில் ஒன்று பழுதாகி இருந்தாலும் மற்றொரு இன்ஜின் செயல்பட்டிருக்கும். விமானத்தை தரையிறக்கி இருக்கலாம். ஆனால் இரண்டும் பழுதாகினால் ஒன்றும் செய்ய முடியாது. இதற்கான சாத்தியக்கூறுகளும் குறைவுதான். விசாரணைக்கு பின்னர்தான் உண்மை தெரியவரும். அடுத்தபடியாக விமானத்தில் மடிப்புகள் எனப்படும் ஃபிளாப்புகள் உள்ளன. இறக்கைகளுக்கு பின்புறம் இருக்கிற ஒரு நகரும் மேற்பரப்பு ஆகும். இவைதான் விமானத்தை உயரத்துக்கு தூக்குவதற்கும், எதிர்ப்பு விசைக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பிளாப்புகள் நீட்டப்படாமல், புறப்பட தேவையான அளவிற்கு விரிக்காமல் இருந்தால் கூட விபத்து நேரிட்டிருக்கலாம். இப்படி ஃபிளாப்புகள் நீட்டப்படாமல் இருந்ததால் இதுவரை 2 விபத்துக்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் ஏர்இந்தியாவுக்கு விபத்துக்கள் என்பது புதிது அல்ல. 1953 முதல் தற்போது வரை ஏர் இந்தியாவின் பல விமானங்கள் விபத்தில் சிக்கியுள்ளன.

உலகளவில் விமான தயாரிப்பில் ஈடுபடுவது போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் தான். இரண்டு நிறுவனங்களின் விமானங்களும் விபத்தில் சிக்கியுள்ளன. குறிப்பாக போயிங் நிறுவனத்தை எடுத்துக்கொண்டோம் என்றால், அந்த நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் வெளியே வந்து விசில்புளோயர்களாக மாறி சில விஷயங்களை வெளியிட்டுள்ளனர். அதை போயிங் நிறுவனம் மறுத்தாலும், அந்த நிறுவனத்தின் சில மாடல்கள் உலகம் முழுவதும் விபத்திற்குள்ளாகி உள்ளது. தற்போது விபத்தில் சிக்கிய ட்ரீம்லைனர் விமானம் கடந்த 15 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்திருக்கிறது. 1,100க்கும் மேற்பட்ட விமானங்கள் உலக அளவில் உள்ளன. இந்த வகை விமானம் விபத்திற்குள்ளாவது இதுதான் முதன் முறையாகும். போயிங் விமானம் விபத்திற்குள்ளானதால், அதன் போட்டியாளரான ஏர்பஸ் நிறுவனத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இதனால் போயிங் நிறுவனத்தை தூக்கி நிறுத்துவதற்கு டொனால்டு ட்ரம்ப் முயற்சிக்கிறார். மோடி அமெரிக்கா செல்வதற்காக முன்னதாகவே டாடா நிறுவனம், போயிங் விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டது. ஏர்பஸ் நிறுவன விமானங்கள் விபத்தில் சிக்கினால், விசாரணைக்கு அந்த நிறுவனம் ஒத்துழைப்பு வழங்கும். ஆனால் போயிங் நிறுவனம் ஒத்துழைப்பு அளிக்காது. ஏற்கனவே போயிங் நிறுவனத்தின் விமானங்கள் விபத்தில் சிக்கியதால், அவர்களின் பெயர் கெட்டுபோய் உள்ளது. விசாரணையில் உண்மை தெரியவந்ததால் அந்த நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்திக்கும். அதனால் ஒத்துழைப்பு அளிப்பது கிடையாது.
ஒரு விமானம் வானில் பறக்க வேண்டும் என்றால் பராமரிப்புக்குழுவினர் தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்வார்கள். விமானத்தின் வெளிப்புற பகுதிகளில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா? ஏதேனும் அந்நிய பொருட்கள் இருக்கிறதா? என்று ஆய்வுசெய்வார்கள். அடுத்தபடியாக இறக்கைகள், பிளாப்புகள் முறையாக செயல்படுகிறதா? என்று பார்ப்பார்கள். டயர், பிரேக், லேண்டிங் கியர் மற்றும் எரிபொருள் கசிவு உள்ளிட்டவை உள்ளதா? என ஆய்வு செய்வார்கள். பயணங்களுக்கு இடையில் விமானத்தில் சுறுக்கமான ஆய்வு மேற்கொள்வார்கள். பயணத்திற்கு முன்பாக விமானிகளும் ஆய்வு செய்வார்கள். கத்தார் ஏர்வேஸ், பின்ஏர்வேஸ், எமிரேட்ஸ் என உலகின் பல நாடுகளின் விமான நிறுவனங்கள் இதுவரை விபத்துக்களே இல்லாமல் சிறப்பாக செயலாற்றி வருகின்றன. அப்படி இருக்கிற சூழலில் ஏர்இந்தியா விமானங்கள் மட்டும் எப்படி அடிக்கடி விபத்துக்களில் சிக்குகின்றன என்கிற கேள்வி எழும். அனுபவம் இல்லாத அதானியிடம் விமான நிலையங்களை ஒப்படைக்கிறபோது பிரச்சினைகளை நீங்கள் எதிர்பார்க்க வேண்டும். ஒரு விமானத்தில் 240 பேர் பலியானது என்பது மிகப்பெரிய எண்ணிக்கையாகும். விமானத்தை பரிசோதனை செய்வதில் என்ன பிரச்சினை, அதானி விமான நிலையத்தை கையாளுகிறாரே அதில் என்ன பிரச்சினை? ஏற்கனவே சர்ச்சைக்குள்ளா போயிங் விமானம் விபத்தில் சிக்கியுயள்ளது. அதில் என்ன பிரச்சினை ? என்று விசாரிக்க வேண்டும். இதை எல்லாம் சேர்த்து பார்த்தால் தான் விசாரணையில் உண்மை தெரியவரும்.
இந்தியாவில் விமானப் போக்குவரத்தை நடுத்தர வர்க்கம் பயன்படுத்துகிற அளவிற்கு வளர்ந்துள்ளது. ஆனால் விமானங்களில் பணிபுரிவது என்பது நிரந்தரமற்ற வேலையாக உள்ளது. எமிரேட்ஸ், கத்தார் ஏர்வேஸ் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் ஊர்களுக்கு வழங்கும் சம்பளம், ஓய்வு போன்றவை தான் அவற்றின் தரத்தை தொடர காரணமாக உள்ளது. ஆனால் ஏர்இந்தியாவில் 100க்கும் மேற்பட்ட விமானங்களும், ஏராளமான விமானிகளும் உள்ளனர். அவர்களுக்கு எவ்வளவு ஓய்வு வழங்குகிறார்கள். இவற்றை எல்லாம் சர்வதேச தரத்துடன் ஒப்பிட்டு பார்த்தோம் என்றால் குறைவாகவே இருக்கும். விமான நிறுவனங்களில் நிரந்தர பணியாளர்களை நியமிப்பது. அனுபவம் வாய்ந்த ஊழியர்களை நியமித்து, அவர்களுக்கு நல்ல சம்பளம் கொடுப்பது போன்றவை அவசியமாகும். லாபத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்திருந்தால், இந்தியா போன்ற ஏழைநாடுகளில் பிரச்சினை வரும். ஏர் இந்தியா அரசாங்கத்திடம் இருந்ததால் வெளிநாடுகளில் போர் காரணமாக சிக்கிய இந்தியர்களை மீட்க முடிந்தது. அரசு லாப நோக்கம் இல்லாமல் செயல்பட்டதால் அது சாத்தியமானது. ஆனால் தற்போது அது சாத்தியமில்லாது. இவற்றை எல்லாம் பார்க்கிறபோது இங்கே தர பரிசோதனை எந்த அளவுக்கு சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது, இவ்வாறு அர் தெரிவித்தார்.