செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு, புதிதாக பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாகவோ, தங்களுடைய தேவைக்காகவோ முதலமைச்சர் அமைச்சரவை மாற்றம் குறித்த முடிவினை எடுக்கவில்லை. இது நீதிமன்றத்தில் இருக்கிற சிக்கலாகும். கவர்னர் ரவி முகத்தில் முழிக்காமல் இந்த 10 மாதத்தை எப்படியாவது கடந்து விடலாம் என்று இருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால் செந்தில் பாலாஜிக்கு முன்னதாகவே பொன்முடி விவகாரம் வெடித்து கிளம்பி விட்டது. அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் செந்தில் பாலாஜி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சட்டச் சிக்கல்கள் உள்ளன. அவருக்கு எதிராக ஒரு குருப் தொடர்ந்து மனுத்தாக்கல் செய்து கொண்டே இருக்கிறது. சாட்சிகளை கலைக்கிறார். அவர் அமைச்சராக இருந்தால் வழக்கு நியாயமாக நடைபெறாது என்று எல்லாம் சொல்கிறார்கள். அவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோடிக்கணக்கில் செலவு செய்துகொண்டு, எப்படியாவது அமைச்சர் பதவியில் இருந்து இறக்கியே ஆக வேண்டும் என்று செயல்பட்டு கொண்டிருக்கிறார். அதற்கு அதிமுக முழு ஒத்துழைப்பு வழங்குகிறது.
காரணம் செந்தில்பாலாஜி பணம் வாங்கிக்கொண்டு போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தரவில்லை என்ற புகார். செந்தில்பாலாஜி தரப்பில் தான் பணம் வாங்கவில்லை. வேறு யாரோ பணம் வாங்கி ஏமாற்றியுள்ளார்கள் என்று மறுத்துவந்தார். திமுகவுக்கு வந்த பின்னர், வழக்குகள் காரணமாக ஒரு கட்டத்தில் பணம் கொடுத்து ஏமாந்தவர்களுக்கு, செந்தில்பாலாஜி தான் பணத்தை வாங்க விட்டாலும் பணம் கொடுப்பதாக முன்வந்தார். அவர்களில் 2 பேரை அதிமுக பிடித்து வைத்துக்கொண்டு கூடுதலாக பணத்தை கொடுத்து வழக்கை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க செந்தில்பாலாஜியை குறிவைத்து வழக்கை நடத்துகிற ஒரு கோஷ்டியாகும். அப்போது உச்சநீதிமன்றம் ஜாமின் வேண்டுமா? அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா? என கேட்கிறது. அதனால் வேறு வழியில்லாமல் செந்தில்பாலாஜியே முன்வந்து பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.
இப்படி பட்ட சூழலில் திமுகவை போட்டு பார்த்தார்கள். முதலில் செந்தில்பாலாஜியை கையில் எடுத்து பார்த்தார்கள். வெளியில் வந்ததும் மற்றொரு ஷிண்டே போன்று மாற்ற முயற்சி செய்தார்கள். ஜாமின் கொடுக்கிறோம். ஆனால் நீங்கள் அமைச்சராகக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் திடீரென இப்போது வந்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய அவகாசம் கொடுக்கிறார்கள். செந்தில்பாலாஜி முதலமைச்சரிடம் சொல்லிவிட்டார். என்னால் நெருக்கடி வேண்டாம். நான் ராஜினாமா செய்கிறேன் என்று ராஜினாமா கடிதம் வழங்கிவிட்டதாக தகவல் வெளியாகிறது. அடுத்து பொன்முடி. அவர் பேசிய பேச்சு நமக்கு எல்லாம் தெரியும். 2 பேர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப் படுகிறார்கள். 2 பேர் உள்ளே வர வாய்ப்பு உள்ளது. அது விழுப்புரம் திமுக எம்எல்ஏ லக்ஷ்மணனுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகிறது. விழுப்புரம் மாவட்டத்திற்கு பிரதிநிதித்துவம் கொடுக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்.
அமைச்சரவை மாறுதலுக்கு தயாராகி கொண்டிருக்கிறது. சட்டமன்ற கூட்டத்தொடர் 29ஆம் தேதி முடிகிறது. அதற்கு மறுநாளோ, அடுத்த நாளோ மாறும். ஏப்ரல் 28ல் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வருகிறது. செந்தில் பாலாஜி தரப்பில் கண்டிப்பாக சொல்லியாக வேண்டும். அதனால் ஒரு வாரத்திற்குள் மாறுதல் இருக்கும். துரைமுருகனிடம் இருக்கும் சுரங்கத்துறை மாறுகிறது. செந்தில்பாலாஜி வசம் உள்ள துறைகள் யாருக்கு போகிறது என தெரியவில்லை. டாஸ்மாக்கை எடுத்துக்கொள்ள எந்த அமைச்சரும் முன்வரவில்லை. அந்த துறைக்கு மேலே அமலாக்கத்துறை என்கிற கத்தி தொங்கி கொண்டிருக்கிறது. எனவே எல்லோரும் அச்சப்படுகிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.