தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு (SSLC Supplementary Exam) முடிவுகள் இன்று (05.08.2026) வெளியாகின்றன. இத்தகவலை அரசுத் தேர்வுத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


நடப்பு கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காகவும், தேர்வெழுத முடியாத மாணவர்களுக்காகவும் இந்தத் துணைத்தேர்வு கடந்த ஜூலை மாதம் மாநிலம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தி முடிக்கப்பட்டது. இத்தேர்வு முடிவுகளுக்காக ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.
மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யும் முறை:
தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை (Provisional Mark Sheet) இன்று பிற்பகல் முதல் அரசுத் தேர்வுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதமான www.dge.tn.gov.in என்ற முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மாணவர்கள் இணையதளத்திற்குச் சென்று தங்களது தேர்வெண் (Roll Number) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களது மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுத் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.
இந்தத் தற்காலிக மதிப்பெண் சான்றிதழைக் கொண்டு மாணவர்கள் மேல்நிலைக்கல்வி (11-ஆம் வகுப்பு) சேர்க்கை மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் (ITI/Diploma) சேருவதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
