மனித வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவாக, உலகளவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக அமெரிக்கச் மக்கள்தொகை கணக்கெடுப்பு வாரியம் (US Census Bureau) வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
வரலாற்றுச் சாதனை மாற்றம்
உலக நாடுகளின் மக்கள்தொகை கட்டமைப்பில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய மக்கள்தொகை மாற்றம் (Demographic Shift) ஏற்பட்டு வருகிறது. அமெரிக்கச் மக்கள்தொகை கணக்கெடுப்பு வாரியம் நடத்திய விரிவான ஆய்வின் அடிப்படையில், தற்போது உலக மொத்த மக்கள் தொகையில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களின் பங்களிப்பு 10.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

2060-இல் உருவாகும் ‘முதியோர் சாம்ராஜ்யம்’
இப்போக்கு தொடரும் பட்சத்தில், வரும் 2060-ஆம் ஆண்டுவாக்கில் உலகளவில் முதியவர்களின் எண்ணிக்கை சுமார் 200 கோடியைத் (19.6%) தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை வெறும் 7 சதவீதமாகச் சரியக்கூடும் என அந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.
காரணங்களும் எதிர்காலச் சவால்களும்
மருத்துவத் துறையின் வளர்ச்சி, வாழ்நாளின் அதிகரிப்பு மற்றும் உலக நாடுகளிடையே குறைந்து வரும் பிறப்பு விகிதம் ஆகியவையே இந்த மாற்றத்திற்குக் முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. முதியோர் மக்கள்தொகை பெருகுவது சுகாதாரத் துறை, ஓய்வூதியத் திட்டங்கள் மற்றும் நாட்டின் பொருளாதார உழைப்பாளர் சக்தியில் (Workforce) மிகப்பெரிய தாக்கத்தையும் சவால்களையும் ஏற்படுத்தும் என்று சமூக மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
