அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நாகரிக அரசியலுக்கு சரியானது இல்லை என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் குற்றம்சாட்டியுள்ளார்.
அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் அந்த கால கட்டத்தில் கசையால் தங்களை தாங்களே அடித்துக்கொண்டவர்களுக்கு நாம் கல்வி அறிவு கொடுத்துள்ளோம். அவர்கள் படித்து முன்னேறி விட்டனர்.தற்போது அண்ணாமலை சவுக்கால் தன்னைத்தானே அடித்துக்கொள்ளும்போது என்ன சொல்கிறார். இது திமுக ஆட்சியை கண்டித்து கவுக்கால் அடித்துக்கொள்வதாக கூறுகிறார். அதேபோல், அவர் மாநில அரசுக்கு போதிய பணம் தராத மத்திய அரசை கண்டித்தும் போராட்டம் நடத்தலாம் அல்லவா?. அண்ணாமலையின் பிரச்சினை என்ன என்றால் அவர் பயன்படுத்தும் உத்திகள் அனைத்தும் தமிழ் மண்ணுக்கு அந்நியமானது. தமிழ்நாட்டில் வழிபாட்டு ரீதியாக மக்கள் உடலை வறுத்திக்கொள்ளுவது என்பது நடைமுறையில் உள்ளது. ஆனால் அரசியல் தலைவர்கள் தங்களை தாங்களே வற்புறுத்திக் கொள்கிற மிகப்பெரிய போராட்ட வடிவம் எதுவென்றால் உண்ணா விரதம் ஆகும். தனக்குத்தானே துன்பத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் ஆட்சியாளர்களின் கவனத்தை கவருதல். சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது.
எதிர்ப்பை நாம் வெளிக்காட்டும் விதம் நாகரிக சமுதாயத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டு அரசியலுக்கு ஏற்பவே உங்களது போராட்ட முறை அமைந்திருக்க வேண்டும். சவுக்கால் அடித்துக்கொள்வதன் முலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். மன்மோகன் சிங் மறைவு காரணமாக இந்தியாவில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அவரது மறைவை அடுத்து பாஜக உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் துக்கம் அனுசரிக்கின்றன. அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவர் தானே. சவுக்கால் அடித்துக்கொள்வது இந்த துக்க அனுசரிப்பின் ஓரு பகுதிதான் என அண்ணாமலை நினைத்துக்கொண்டால் அது குறித்து தவறு இல்லை. அவர் துக்க நிகழ்வின் ஒரு பகுதி அல்ல என நினைக்கிறாரா?. சாட்டையால் அடித்துக்கொண்டதன் மூலம் அண்ணாமலை என்ன செய்ய விரும்புகிறார் என்றால் கவன ஈர்ப்பு. யாருடைய கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறாரா அல்லது அகில இந்திய தலைவர்களின் கவனத்தை ஈர்த்து பாஜக மாநிலத் தலைவராக பதவிக்காலம் நீட்டிக்க விரும்புகிறாரா. இன்னொரு 3 வருடம் இருந்தாலும் அதுக்கு பிறகு கட்சியின் தலைவராக இருக்க முடியாது.
பாஜக தலைவர் அண்ணாமலையின் இந்த செயல் காரணமாக பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உளவியல் ரீதியாக சங்கடம் ஏற்படுமா இல்லையா?. ஒரு பெண் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும். ஆனால் அண்ணாமலை அந்த பெண்ணுக்கும், அவரை சார்ந்தோருக்கும் உளவியல் ரீதியாக சிக்கலை ஏற்படுத்துகிறார். இந்த விவகாரத்தை அரசியலாக்கி குளிர் காய்வதன் முலம் என்ன நிவாரணம் அந்த பெண்ணுக்கு கிடைத்துள்ளது. இன்று சவுக்கடி நாளை முருகனிடம் முறையிட போகிறோம் என அண்ணாமலை சொல்கிறார். என்ன விதமான அரசியல் இது. லண்டன் போய் படித்துவிட்டு வந்தது இதற்குதானா என ஆச்சரியமாக உள்ளது. நாம் வந்த அரசியல் பாரம்பரியம் வேறு. தலைவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக்கொள்வார்கள். ஆனால் எல்லை மீறாமல் இருக்கும். மேடைகளில் பேச சில மூன்றாம் தர பேச்சாளர்கள் அனைத்துக்கட்சியிலும் இருப்பார்கள். நாளை அண்ணாமலையை முதலமைச்சர் ஆக்கப்போகிறோம் என்று சொல்லி தானே பாஜக கோஷமிட போகிறது. முதலமைச்சர், அரை நிர்வாணத்துடன் தன்னைத்தானே சவுக்கால் அடித்துக்கொள்ளும் காட்சியை எத்தனை ஆண்டுகள் அழியாமல் இருக்கும். ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பாக நீங்கள் யோசித்து செயல்பட வேண்டாமா?. இது நகைப்புக்குரியதாக உள்ளதா? அல்லது நயத்தகு நாயகமாக உள்ளதா?.
ஆட்சியில் ஒரு கட்சி இருக்கக்கூடாது என்பது எதிர்க்கட்சிகள் சொல்வதில் தவறு இல்லை. ஆனால் எதிர்ப்பை வெளிப்படுத்த உண்ணாவிரதம் உள்பட பல்வேறு வழிவகைகள் உள்ளன. அந்த கால கட்டத்தில் எம்.ஜி.ஆர். சத்துணவுக்கு அரசி கொடுக்காத இந்திரா காந்தி அம்மையாரை கண்டித்து உண்ணாவிரதம் இருந்துள்ளார். ஜெயலலிதா, கலைஞர் உண்ணாவிரதம் ஆகியோரும் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். தமிழ்நாட்டில் நூறாண்டு காலம் கடந்து திராவிட இயக்கங்களின் வளர்ச்சி பெற்றுள்ளது. இன்று திமுக திராவிட இயக்கத்தின் ஒரு பகுதிதானே தவிர அது முழுமையான திராவிட இயக்கம் அல்ல. பகுத்தறிவுக்கு புறம்பாக செய்யப்படுகிற எந்த ஒரு அரசியலும், இங்குள்ள வெகுஜன அபிப்பிராயத்திற்கு ஏற்றதாக இருக்காது. கடவுளை வணங்குவதும், வணங்காததும் அவரவர் தனிப்பட்ட விஷயங்கள். பெரியார் மட்டும் கடவுளை மறுத்தார். ஏனெனில் சாதி எதிர்ப்புக்கு கடவுள் அடித்தளமாக இருந்ததால் இறை வழிபாட்டை பெரியார் தவிர்த்தார். வாக்கு அரசியல் என்று வரும்போது அண்ணா அதை மாற்றிவிட்டார். அண்ணாமலை முருகன் கோவிலுக்கு சென்று முறையிடுவது என்பது அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால் பொது வெளியில் சாட்டையால் அடித்து எதிர்ப்பை பதிவுசெய்வது நாகரிக அரசியலுக்கு சரியானது இல்லை. அவர் படித்த லண்டன் பள்ளிக்கூடத்தில் அவருடன் படித்தவர் கூட இந்த வீடியோவை பாரத்தால் முகம் சுழிப்பார்கள்.
அண்ணாமலை செருப்பு அணிய மாட்டேன் என்று சொல்லிக்கொண்டு பத்திரிகையாளர் முன்பு செருப்பை கழற்றிவிட்டேன் என எடுத்து காண்பிப்பது தவறு. இதுபோன்று யாரும் செய்யமாட்டார்கள். மேலும் இது அர்த்தமற்ற செயலாகும். திமுக ஆட்சியை கண்டியுங்கள், ஆளுநரை சந்தித்து மனு அளியுங்கள். ஆனால் இதுபோன்ற மேம்போக்கு அரசியல் மிகப்பெரிய தவறு என்று நினைக்கிறேன். சாட்டையால் அடித்துக் கொள்வது, செருப்பை காட்டுவது, ஒருமையில் அழைப்பது இதுவெல்லாம் மிகப் பெரிய தவறு. ஓரு மூன்றரை ஆண்டுகளாக தமிழக அரசியலை ரொம்ப பின்னோக்கி கொண்டு சென்றிருப்பதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. மத்திய அமைச்சர் முருகனும், வேல் யாத்திரை சென்றது ரசிக்கும் விதமாக இல்லை. நடைபயணம் என்பதை வைகோ சரியாக பயன்படுத்தினார். அவர் நீதி கேட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். ஆனால் அண்ணாமலை பாத யாத்திரையாக அறுபடை வீடுகளுக்கு செல்வதாக அறிவித்துள்ளார். தமிழ்க்கடவுள் முருகனை சனதான தர்மம், தன்னுள் இழுத்தக் கொண்டது என்கிற ஒரு குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.
எனினும் சராசரி மனிதருக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது. சாதாரண வாக்காளர்கள் ஒரு அரசின் செயல்பாடுகளை அடிப்படையாக கொண்டே அந்த அரசாங்கத்த மதிப்பிடுகின்றனர். அவ்வாறு அண்ணாமலைக்கு செயல்பாடு என்பதற்கு மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளைததான் அவர் சொல்ல முடியும். ஆனால் மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டின் மீது மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் பாலியல் குற்றச்சாட்டு, யோகி ஆதித்யநாத் ஆட்சியில் தான் நடைபெற்றது. அந்த ஒரு குற்றச்சாட்டை வைத்து யோகியை நீங்கள் மதிப்பிட போகிறீர்களா. இது ஒரு கேள்வி. நாட்டில் நிர்பயா முதல் அனைத்து கட்சிகளின் ஆட்சியிலும் பாலியல் குற்றங்கள் நடைபெற்றுள்ளது. ஆனால் அண்ணாமலை அதை மட்டும் பயன்படுத்தி, தனது காட்சி அரசியலுக்கு பயன்படுத்துவது தவறு. விஜய் சினிமாவில் செய்கிறார், அவரை போலவே அண்ணாமலையும் காட்சி அரசியலில் ஈடுபட முயல்கிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.