நடிகர் சூர்யா புறநானூறு படத்திற்காக மீண்டும் சுதா கொங்கராவை அணுகியதாக சொல்லப்படுகிறது.
நடிகர் சூர்யா தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இதைத்தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். மேலும் வெற்றிமாறனின் வாடிவாசல் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 43 வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். அதன்படி படம் தொடர்பான அறிவிப்பும் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்த படம் இந்தி திணிப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட இருந்ததால் ஒரு சில அரசியல் காரணங்களை கருத்தில் கொண்டும் கர்ணா என்ற பாலிவுட் படத்தில் கவனம் செலுத்துவதற்காகவும் நடிகர் சூர்யா இந்த படத்திலிருந்து விலகி விட்டதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் சுதா கொங்கரா, புறநானூறு படத்தை எப்படியாவது எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரை சந்தித்து பேசிய நிலையில் தனுஷ் தனது லைன் அப் காரணமாக இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. பின்னர் சிவகார்த்திகேயன், சுதா கொங்கராவிற்கு ஓகே சொன்னதும் படப்பிடிப்புகள் தொடங்கப்படுவதற்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி புறநானூறு என்று சொல்லப்படும் SK 25 படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஜெயம் ரவி, அதர்வா, ஶ்ரீ லீலா ஆகியோர் நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நடிகர் சூர்யா, சுதா கொங்கராவை தொடர்பு கொண்டு மீண்டும் புறநானூறு படத்தை தொடங்குவது குறித்து பேசினாராம்.
அதாவது நடிகர் சூர்யா, ஏற்கனவே கர்ணா படத்திற்காக இந்தி திணிப்பை அடிப்படையாகக் கொண்ட புறநானூறு படத்தை நிராகரித்த நிலையில் தற்போது கர்ணா படமும் கைவிட்டதன் காரணமாக மீண்டும் சுதா கொங்கராவை அணுகியதாக சொல்லப்படுகிறது. ஆனால் சுதா கொங்கரா, சூர்யாவிடம் நோ சொல்லிவிட்டதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.