தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான சூர்யா நடிப்பில் கடைசியாக ‘ரெட்ரோ’ திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதைத்தொடர்ந்து சூர்யா, ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ‘கருப்பு’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சூர்யா தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். அதன்படி வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனது 46வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 46 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதனை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதன் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மமிதா பைஜு, ராதிகா, ரவீனா டாண்டன், அனில் கபூர் ஆகியோர் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இது தவிர இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு ஐதராபாத் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய்க் கொண்டே போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது நடிகை ராதிகா இப்படத்தில் சூர்யாவின் அம்மாவாக நடிக்கிறாராம்.
படப்பிடிப்பு தொடங்கப்பட்ட சில நாட்களில் ராதிகாவிற்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அவருடைய காட்சிகளை படமாக்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் ராதிகா குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புக்கு வந்த நேரத்தில் அவருடைய அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லாமல் போக ராதிகாவால் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாம். இதனால் படப்பிடிப்பு தாமதமாகிக்கொண்டே போகிறது என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பை இரண்டு அல்லது மூன்று மாதத்தில் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் இவ்வாறு தொடர்ந்து சிக்கல் ஏற்படுவதால் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
- Advertisement -
