2029-ஆம் ஆண்டுக்குள் பாஜக கூட்டணி ஆளும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் (UCC) அமல்படுத்தப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி பாஜகவின் கூட்டணிக் கட்சிகளே எதிர்ப்புக் குரல் உயர்த்தி இருப்பது தேசிய அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமித்ஷாவின் அதிரடி அறிவிப்பு
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2029-ஆம் ஆண்டுக்குள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

கூட்டணிக் கட்சிகளே போர்க்கொடி: பீகாரில் பாஜகவுக்குச் சிக்கல்
அமித்ஷாவின் இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, பீகாரில் பாஜகவுடன் ஆட்சியில் இருக்கும் முதன்மைக் கூட்டணிக் கட்சிகளான ஜேடியூ (JDU) மற்றும் எல்ஜேபி (LJP) ஆகிய கட்சிகள் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
ஐக்கிய ஜனதா தளம் (JDU) எதிர்ப்பு: ஜேடியூ கட்சியின் மூத்த தலைவர் ஷியாம் ரஜக் இது பற்றிக் கூறுகையில், “பீகாரில் பொது சிவில் சட்டத்தை ஒருபோதும் நடைமுறைப்படுத்த விடமாட்டோம். இந்த விவகாரம் குறித்து அமைச்சர் அமித்ஷாவிடம் நேரடியாகப் பேசுவோம்” என அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
சிராக் பஸ்வான் கேள்வி: லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவரும் ஒன்றிய அமைச்சருமான சிராக் பஸ்வான், “நாட்டின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மை ஆகிய இரண்டும் மிக முக்கியம். இந்திய அரசியலமைப்புச் சட்டமே பழங்குடியின மக்களுக்குச் சிறப்பு விலக்குகளை வழங்கியுள்ளது” என்று கூறித் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
பீகாரில் தங்களின் சொந்தக் கூட்டணிக் கட்சிகளே பொது சிவில் சட்டத்திற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளது பாஜக தலைமையைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் தாக்கு
இவ்விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகத் தனது இந்துத்துவா வாக்கு வங்கியை வலுப்படுத்தவே பாஜக பொது சிவில் சட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. ஒரே மாதிரியான தன்மை என்பது சமத்துவத்திற்குச் சமமானதல்ல.
நாட்டில் நிலவும் வேலையின்மை, விலைவாசி உயர்வு, விவசாயத் துறை நெருக்கடி மற்றும் மாணவர்களின் வேலைவாய்ப்புப் பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே பாஜக இந்த மத அரசியல் ஆயுதத்தைப் பயன்படுத்துகிறது,” என்று கடுமையாக விமர்சித்துள்ளது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைத் தாண்டி, கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பையும் கடந்து பாஜக இந்த முடிவில் எப்படிச் செயல்படப் போகிறது என்பது வரும் நாட்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
