Homeசெய்திகள்அரசியல்வேங்கை வயல் பிரச்சினை- 397 பேரிடம் விசாரணை நடத்தி உண்மை கண்டறியப்பட்டுள்ளது- ஆசிரியர் கி.வீரமணி

வேங்கை வயல் பிரச்சினை- 397 பேரிடம் விசாரணை நடத்தி உண்மை கண்டறியப்பட்டுள்ளது- ஆசிரியர் கி.வீரமணி

-

- Advertisement -

வேங்கை வயல் பிரச்சனையில் 397 பேரிடம் விசாரணை நடத்தி உண்மை கண்டறியப்பட்டுள்ளது. அமைதி பூங்காவான தமிழ்நாட்டை அமளியாக்க வேண்டாம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த மேல் நிலைக் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு 2022 டிசம்பரில் கலக்கப்பட்டதான கடைந்தெடுத்த இழிசெயல் தொடர்பாக தமிழ்நாடு அரசின் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், இந்தப் பிரச்சினையை மய்யமாக வைத்து வதந்திகளைப் பரப்பிட வேண்டாம் என்றும், மிகுந்த பொறுப்புணர்ச்சியுடனும் தமிழ்நாடு அரசு கீழ்க்கண்ட வேண்டுகோளை விடுத்துள்ளது.

வேங்கைவயல் சம்பவம்: வதந்திகளைப் பரப்பிட வேண்டாம்! தமிழ்நாடு அரசு வேண்டுகோள்!

‘‘புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக கடந்த 2022 டிசம்பர் மாதம் புகார்கள் எழுந்தன. இக்கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் சிலர் வாந்தி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், காவேரி நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர்மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறிப் பார்த்ததில், மேல்நிலை நீர்த்தேக்க நீரில் மலக்கழிவுகள் மிதப்பதாகவும் தெரிவித்ததைத் தொடர்ந்து, இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், வெள்ளானூர் காவல் நிலைய Cr.No.239/2022-இல் 26.12.2022 ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டின் தீவிரத்தையும், சமூக முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் இவ்வழக்கின் புலன் விசாரணையை 14.01.2023 அன்று தமிழ்நாடு குற்றப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றினார். அதைத் தொடர்ந்து, கூடுதல் காவல் துறை இயக்குநர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை அவர்கள் உத்தரவின் பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரியை புலனாய்வு அதிகாரியாக நியமித்து, புதுக்கோட்டை குற்ற எண்.01/2023-இல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின்போது, புகார்தாரர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டதோடு, ஏராளமான ஆவணங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதைத்தவிர, பல நபர்களின் அலைபேசி எண்கள் மற்றும் தொலைத்தொடர்பு தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. வேங்கைவயல், எறையூர் கிராம மக்களிடம் இதற்கான பல்வேறு காரணங்கள் குறித்தும் விரிவாக விசாரிக்கப்பட்டது. மேலும், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சில நபர்களிடமிருந்து உயிரியல் மாதிரிகள்எடுக்கப்பட்டு, விரிவான டி.என்.ஏ பகுப்பாய்வும் செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை மற்றும் பகுப்பாய்வுகளின் அடிப்படையில், பின்வரும் விவரங்கள் உறுதி செய்யப்பட்டன:

சம்பவம் நடப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, 02.10.2022 அன்று வேங்கைவயலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிபராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்காக முத்துக்காடு ஊராட்சித் தலைவர் பத்மா என்பவரின் கணவர் முத்தையா என்பவர் கிராம சபைக் கூட்டத்தின் போது, தமிழ்நாடு காவல் துறை ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றும் காவலர் முரளிராஜாவின் தந்தை ஜீவாநந்தம் என்பவரை அவமானப்படுத்தும் விதமாகத் திட்டியுள்ளார். இச்சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையில் முரளிராஜாவால் இச்செயல் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டது என்பது காவல் துறையின் விசாரணையின் மூலம் ஆதாரப்பூர்வமாக புலனாகியுள்ளது.

 மேலும், இச்சம்பவத்தில் முரளிராஜா, சுதர்ஷன், முத்தையா, ஆர்.முத்துகிருஷ்ணன் மற்றும் பலரின் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு, தமிழ்நாடு தடயவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது, அவற்றில் இந்தச் சம்பவம் தொடர்பான பல புகைப்படங்களும், உரையாடல்களும் அழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்தத் தகவல்கள் அனைத்தும் தொழில்நுட்ப உதவியோடு மீட்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில், இச்சம்பவத்தில் அவர்களுக்குள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டது.

 இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் பெறப்பட்ட புகைப்படங்கள், செல்போன் உரையாடல்கள், வீடியோ ஆதாரங்கள், தடயவியல் அறிக்கை, மருத்துவ அறிக்கைகள், புலனாய்வு அதிகாரியால் செய்யப்பட்ட செயல்முறை விளக்கங்களின் முடிவுகள், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிக்கை, வல்லுநர்களின் கருத்துகள் மற்றும் சாட்சி களின் அறிக்கைகள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்ததின் அடிப்படையில், புலன் விசாரணை முடிக்கப்பட்டு

(i) முரளிராஜா, த/பெ. ஜீவாநந்தம், 32/23, வேங்கைவயல், (ii) சுதர்ஷன் 20/23, த/பெ. பாஸ்கரன், வேங்கைவயல் மற்றும் (iii) முத்துகிருஷ்ணன் 22/23, த/பெ. கருப்பையா, வேங்கைவயல் ஆகியோரின் மீது, 20.01.2025 அன்று நீதிமன்றத்தில் சிபிசிஅய்டி சார்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக தவறான தகவல்களை யாரும் பரப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.’’

397 பேர்களிடம் விசாரணை

இந்த நுட்பமான ‘எளிதில் தீப்பற்றும்’ பிரச்சினை மீது யாராக இருந்தாலும் தீரமாக சிந்தித்துப் பொறுப்புடன் கருத்துகளை வெளியிடுவது அவசியமாகும். அரசு வெளியிட்ட அறிக்கையில், எவ்வளவு அக்கறையுடன் அனைத்து வகைத் தொழில் நுட்பங்களையும், தடய அறிவியல்களையும் பயன்படுத்தி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தெளிவாகவே தெரிய வருகிறது.

397 பேர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 87 செல்போன் டவர்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. ஒரு லட்சம் செல்போன் பயன்பாட்டை ஆய்வு செய்து துப்புத் துலக்கப்பட்டுள்ளது. ஒரு காவல்துறை எதை எதை எல்லாம் அதிகபட்சம் செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் துல்லியமாக செய்திருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

‘திராவிட மாடல்’ அரசின் கொள்கை எத்தகையது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாகவும், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை சமத்துவ நாளாகவும் அறிவித்து செயல்படும் அரசு என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே!

அரசியல் குளிர் காய்வது சரியல்ல!

இதனை அரசியல் பிரச்சினையாக்கிக் குளிர் காய்வது என்பது சரியானதல்ல. குறிப்பாகக் கூட்டணி கட்சிகளுக்குப் பொறுப்பு அதிகமாகவே உண்டு. தி.மு.க. ஆட்சிக்கு எதிராகத் தூசு கிடைத்தாலும் தூணாகப் பெரிதுப்படுத்தும் பிஜேபி மற்றும் எதிர்க்கட்சிகளின் கூக்குரலைப் புரிந்து கொள்ள முடியும். தனிப்பட்ட பிரச்சினையை பொதுப் பிரச்சினையாக்கி ஜாதி முலாம் பூசுவது மிகப் பெரிய ஆபத்தாகும்.

விமர்சனம் செய்யலாம்; அப்படி விமர்சிக்கும் போது காவல் துறையின் செயல்பாட்டில் என்ன குறைபாடு என்பதைச் சுட்டிக் காட்டலாம். அதைப் புறந்தள்ளி பிரச்சிைனயை வேறு கண்ணோட்டத்தில் விமர்சிப்பது, அரசியல் லாபத்துக்காக பிஜேபி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாட்டும் குற்றச்சாட்டு நெருப்புக்குத் தெரிந்தோ தெரியாமலோ நெய் ஊற்றுவதாக அமைந்து விடாதா என்பதைச் சிந்திக்க வேண்டும். இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

MUST READ