பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அத்துமீறும் சீனா
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா அத்துமீறி நுழைந்து சாலை அமைத்துள்ளதற்கு ஒன்றிய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய எல்லையில் சீனா அத்துமீறி பல்வேறு கட்டுமானங்களை செய்து வருவதால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய சீன வீரர்கள் இடையே நடைபெற்ற மோதல்களுக்கு பிறகு எல்லை பகுதிகளில் புதிய சாலை பாலம் அமைக்கும் பணிகளை சீனா மேற்கொண்டு வருவது செயற்கைக்கோள் படங்கள் மூலம் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
இந்த நிலையில் காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதியில் சீனா புதிய சாலை ஒன்றை அமைத்துள்ளது செயற்கைக்கோள் படங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சியாச்சின் பணி பாறையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கின் அடிவாரத்தில் அத்துமீறி நுழைந்து சீனா புதிய சாலை அமைத்துள்ளதை செயற்கைக்கோள் படங்கள் உறுதி செய்துள்ளனர்.
பாகிஸ்தானின் கில்கிட் – பால்டிஸ்தான் மாகாணத்தை சீனாவின் ஜின்ஜியாங் பகுதியுடன் இணைப்பதற்காகவே இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜெயஸ்வால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சீனாவின் சாலை கட்டுமான மேற்கொண்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் சாலைகள் மற்றும் பிற உட்கட்டமைப்புகளை நிர்மாணிப்பதன் மூலம் அப்பகுதியின் இந்தியாவுக்குள்ள உரிமையை மாற்ற சீனா சட்ட விரோதமாக முயற்சிகளை மேற்கொண்டு உள்ளதாக ஜெய்ஸ்வால் குற்றம் சாட்டியிருக்கிறார்.
ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் 1963 ஆம் ஆண்டு எல்லை ஒப்பந்தபடி பாகிஸ்தான் அதனை சீனாவிடம் ஒப்படைத்து விட்டது என்ற கூற்றை இந்தியா ஏற்காது என்றும் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரஞ்சித் ஜெயஸ்வான் கூறியுள்ளார்.