அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 538 தொகுதிகளில் தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே சுமார் 6 லட்சம் வரை வித்தியாசம் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்க எனப்படும் ஏ.டி.ஆர் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏ.டி.ஆர் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிகையில், மக்களவை தேர்தலில் 362 தொகுதிகளில் மொத்தமாக பதிவான வாக்குகளை விட 5,54,598 வாக்குகள் குறைவாக எண்ணப்பட்டதாக கூறியுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், 5.54 லட்சம் வாக்குகள், அதிகாரிகளால் எண்ணப்படவில்லை ஏ.டி.ஆர் அமைப்பு தெரிவித்துள்ளது. இதேபோன்று 176 மக்களவை தொகுதிகளில், பதிவான வாக்குகளைவிட, 35 ஆயிரத்து, 93 வாக்குகள் அதிகமாக எண்ணப்பட்டதாகவும், அதேவேளையில் வாக்கு எண்ணிக்கையின் இறுதித் தரவுகளை தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் அம்ரேலி, அட்டிங்கல், லட்சத்தீவு மற்றும் டாமன் டையூ ஆகிய 4 தொகுதிகளில் மட்டுமே பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே எந்தவித வித்தியாசமும் ஏற்படவில்லை என்றும், மற்ற 538 தொகுதிகளில் பதிவான மற்றும் எண்ணப்பட்ட வாக்குகளில், வாக்கு வித்தியாசம் என்பது 5.89 லட்சம் வாக்குகள் வரை இருப்பதாக ஏ.டி.ஆர் என்ற அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் பதிவான வாக்குகளை விட குறைவாக வாக்குகள் எண்ணப்பட்ட தொகுதிகளில் தமிழகத்தின் திருவள்ளூர் தொகுதியும் இடம்பெற்றுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவை வேட்பாளர் பாலகணபதியை விட 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இத்தொகுதியில் 14,30,738 வாக்குகள் பதிவாகிய நிலையில், அதில் 14,13,947 வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டதாகவும், மொத்தமாக 16,791 வாக்குகள் எண்ணப்படவில்லை என்று ஏ.டி.ஆர் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இதேபோல் பதிவான வாக்குகளை விட அதிகமாக வாக்குகள் எண்ணப்பட்ட விவகாரத்தில், எண்ணிக்கையின் அடிப்படையில் அசாம் மாநிலத்தின் காரிம்கஞ்ச் தொகுதி முதலிடம் பிடித்துள்ளது. இங்கு பாஜக வேட்பாளர் காங்கிரஸ் வேட்பாளரை விட 18,360 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். காரிம்கஞ்ச் தொகுதியில் மொத்தமாக 11,36,538 வாக்குகள் பதிவாகிய நிலையில், எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையோ 11,40,349 ஆக உள்ளது. அதாவது, 3,811 வாக்குகள் கூடுதலாக எண்ணப்பட்டுள்ளதாக ஏடிஆர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் புள்ளி விபரங்களில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குககளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் வித்தியாசம் இருப்பதைக் காட்டுவதாக தெரிவித்துள்ள ஏடிஆர் நிறுவனர் ஜக்தீப் சோக்கர், இதற்கான காரணத்தை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை வெளியிடுவதில் மிதமிஞ்சிய தாமதம், பிரிக்கப்பட்ட தொகுதிகள் மற்றும் வாக்குச் சாவடி புள்ளி விவரங்கள் முழுமையான எண்ணிக்கையில் இல்லாதது போன்றவை தேர்தல் முடிவுகளின் மீது பொதுமக்களின் சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகவும் அவர தெரிவித்தார். கடந்த 2019 மக்களவை தேர்தலின்போதும் இதேபோன்ற நிகழ்வுகள் நடந்த நிலையில், அது தொடர்பாக ஏ.டி.ஆர் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், எனினும் அந்த மனு தொடர்பாக இதுவரை எந்த விசாரணையும் நடைபெறவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
2019 மக்களை தேர்தல் அத்துமீறல்கள், முறைகேடுகளை தீர்க்கவும், அதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவும் தேர்தல் ஆணையம் தவறிவிட்டதாகவும், 2024 மக்களவைத் தேர்தல் வாக்காளர்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது தீர்க்கப்பட வேண்டும்” என்றும் ஜக்தீப் சோக்கர் வலியுறுத்தியுள்ளார். எனினும் தேர்தல் முடிவுகளில் அதிகமாக எண்ணப்பட்ட வாக்குகளால் எத்தகைய முடிவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதை அந்த அமைப்பு விளக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த ஜூன் 3 ஆம் தேதி, வாக்காளர், வாக்குப்பதிவு விபரங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்த இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர்களின் வாக்குப்பதிவு விபரங்களை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் வாக்குகளின் எண்ணிக்கை தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தெரிவித்திருந்தது. ஆனால் ஒவ்வொரு தொகுதியிலும், வாக்காளர்கள் அளித்த வாக்குகளிலும், எண்ணிக்கையிலும் முரண்பாடுகள் உள்ளதா? என்பதை தேர்தல் ஆணையம் விரைவில் தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரான குரேஷி வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, மகாராஷ்ட்ராவை சேர்ந்த ஓட்டர் பார் டெமாக்ரசி என்ற அமைப்பு, 2024 மக்களவை தேர்தலில் ஆரம்ப மதிப்பீடுகளில் இருந்து இறுதி புள்ளிவிபரங்கள் வரை, ஒட்டுமொத்தமாக, 4.65 கோடி வாக்குகள் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. இந்த அதிகரிப்பு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 15 மாநிலங்களில் 79 இடங்களில் பலனளித்திருக்கலாம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணிக்கட்சிகளின் உதவியுடன் ஆட்சியை தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.