நடிகை ஸ்ரீலேகா மித்ரா அளித்த பாலியல் புகாரை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் மீது கொச்சி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
மலையாள திரைப்பட நடிகைகளின் பிரச்சினைகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி ஹேமா ஆணையம், நடிகைகளுக்கு முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம்சாட்டியிருந்தது. இந்நிலையில், நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சித்திக் மீது பாலியல் புகார் எழுந்ததை தொடர்ந்து அவர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல், வங்காள நடிகை ஸ்ரீலேகா மித்ரா அளித்த பாலியல் குற்றாட்டினை தொடர்ந்து, இயக்குனர் ரஞ்சித் திரைப்பட அகாடெமி தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.
இதனிடையே, ஹேமா ஆணைய பரிந்துரையை தொடர்ந்து நடிகைகள் ரேவதி சம்பத், மினு முனீர், திவ்யா கோபிநாத், கீதா விஜயன் உள்ளிட்ட பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்முறைகள் குறித்து தொலைக்காட்சிகள் மூலம் வெளிப்படையாக புகார் தெரிவித்துள்ளனர்.நடிகைகள், துணை நடிகைகள் சந்திக்கும் பிரச்னை குறித்து மலையாள திரைப்பட சங்கத்திடம் சில ஆண்டுகளுக்கு முன்பு புகார் தெரிவித்தும் அதன் மீது நடவடிக்கை இல்லை என்றும் பலர் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பிரபல மலையாள நடிகர்கள் முகேஷ், ஜெய சூர்யா உள்ளிட்டோர் மீது இன்று நடிகை மினு முனீர் புகார் தெரிவித்தார். இதேபோல், நடிகர் சங்கத்தின் இணை செயலாளர் நடிகர் பாபுராஜ், இயக்குனர் துளசிதாஸ், நடிகர் பாபுராஜ், மணியம் பிள்ளை ராஜு, இடைவேளை பாபு உள்ளிட்டோர் மீதும் புகார்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையே, மலையாள இயக்குனர் ரஞ்சித் மீது வங்காள நடிகை ஸ்ரீலேகா மித்ரா கொச்சி காவல்துறை ஆணையருக்கு இமெயில் மூலம் புகார் அனுப்பியுள்ளார். அவரது புகாரின அடிப்படையில் இயக்குனர் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக கொச்சி காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.