உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையை கொள்கை அளவில் ஏற்றது மத்திய அரசு! விதிகளை வகுக்க 6 வார காலம் அவகாசம் வழங்கி தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு!
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக ரயில்களில் பயணம் செய்யும் நபர்களுக்குக் கட்டணச் சலுகை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் முன்வைத்த முக்கியப் பரிந்துரையை ஒன்றிய அரசு கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கான புதிய கொள்கை விதிகள் மற்றும் நடைமுறைகளை இறுதி செய்வதற்கு ஒன்றிய அரசுக்கு 6 வார காலம் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரை & ஒன்றிய அரசின் முடிவு
ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் நபர்கள், தங்களின் தொடர் சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ரயில்களில் பயணம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ரயில் பயணத்தில் சிறப்புச் சலுகைகள் மற்றும் கட்டணக் கழிவு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தது. இவ்வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டோரின் சிகிச்சைக்கான ரயில் பயணத்தில் கட்டணச் சலுகை வழங்குவது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையை ஒன்றிய அரசு கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
விதிகளை வகுக்க 6 வார அவகாசம்!
ஒன்றிய அரசின் இந்த முடிவைப் பதிவு செய்துகொண்ட தலைமை நீதிபதி அமர்வு, இக்கட்டணச் சலுகைக்கான புதிய கொள்கையின் சட்ட விதிகள், தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகளை முழுமையாக இறுதி செய்ய ஒன்றிய அரசுக்கு 6 வார காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த அதிரடி நடவடிக்கை மற்றும் மத்திய அரசின் நேர்மறையான முடிவின் மூலம், நாடு முழுவதும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் சிகிச்சைக்கான பயணங்களில் பெரும் நிதியுதவியையும் நிவாரணத்தையும் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சபாநாயகரின் தேநீர் விருந்தை புறக்கணித்தது ‘INDIA’ கூட்டணி: பிரதமர், உள்துறை அமைச்சருக்கு எதிர்ப்பு!
