Homeசெய்திகள்கட்டுரைதொகுதி மறுசீரமைப்பு குறித்து பிரதமர் பேசாதது ஏன்? பாலசந்திரன் கேள்வி!

தொகுதி மறுசீரமைப்பு குறித்து பிரதமர் பேசாதது ஏன்? பாலசந்திரன் கேள்வி!

-

- Advertisement -

தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேச தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியும் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை என்றும், தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி இது குறித்து பேசாதது ஏன் என்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராமேஸ்வரம் புதிய ரயில் பால திறப்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி தமிழ்நாடு அரசின் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து தொலைக்காட்சி விவாதத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலசந்திரன் பேசியதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்கும் கேள்விகளுக்கு பிரதமர் மோடி நேரடியாக பதில் அளிப்பது கிடையாது. பிரதமர் பேசுவது என்பது பாதி உண்மையாகும். அப்படி பாதி உண்மை என்பது ஒரு பொய்யை விட மோசமானதாகும். 2014ஆம் ஆண்டில் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபோது சமையல் எண்ணெய் குறிப்பட்ட அளவில் இருந்தது. இன்றைக்கு அது இரண்டரை மடங்கு அதிகரித்து விட்டது. அன்றைக்கு ரூ.90க்கு வாங்கிய சமையல் எண்ணெய் விலை இன்றைக்கு ரூ.225க்கு வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். அப்போது இந்த கால கட்டத்தில் அனைவரது சம்பளமும் இரண்டரை மடங்கு உயர்ந்துள்ளதா? இதற்கு அவர்களால் பதில் அளிக்க மாட்டார்கள். உண்மையான வருமானம் எவ்வளவு? நீங்கள் எவ்வளவு செய்திருக்கிறீர்கள். எந்த எந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளீர்கள். இதெல்லாம் முக்கியமான கேள்விகளாகும்.

நீட் தேர்வை எதிர்க்கிறார்கள், தொகுதி மறுசீரமைப்பை எதிர்க்கிறார்கள் என்று பாஜக தமிழக அரசு மீது குற்றம்சாட்டுகிறார்கள். நீட்டை தமிழ்நாடு மட்டும்தான் எதிர்க்கிறதா? நீட் தேர்வு என்பது பணத்தை கொள்ளையடிப்பதற்கான ஒரு ஆயுதமாகும். இதனை தமிழ்நாடு மட்டும் சொல்லவில்லை. கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், ஆந்திரா போன்ற மாநிலங்களும் குற்றம்சாட்டுகின்றன.நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதாக ராஜஸ்தானில் உள்ள அமைப்புகளிடம் இருந்து பல நூறு கோடிகளை சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள சுகாதார கட்டமைப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. சாதாரண கல்வி ஒன்றை தவிர வேறு எந்த ஆயுதமும் இல்லாத மாணவர்கள் முன்பு மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்தார்கள். அவர்கள் மருத்துவர்கள் ஆன உடன் கிராமப்புறங்களில் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்று சொன்னால் சந்தோஷமாக சென்றார்கள். ஆனால் 40 லட்சம், 50 லட்சம் ரூபாய் கொடுத்துதான் படிப்பதற்கு எனக்கு வசதி உள்ளது என்று சொல்பவர்கள்  கிராமப்புறத்துக்கு செல்ல மாட்டார்கள். இது காமராஜர் காலத்தில் இருந்து கட்டமைக்கப்பட்ட இந்த சுகாதார அமைப்பு சீர்குலைந்துவிடும். நீட் தேர்வில் மெரிட் அடிப்படையில்  மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக கூறுவது பொய். திரும்ப திரும்ப இந்த பொய்யை சொல்கிறார்கள். அப்போது நீட் தேர்வை எதிர்ப்பதில் என்ன தவறு உள்ளது.

தொகுதி மறுவரைக்கு எதிராக ஒரே குரலில் ஒன்றிய பாஜக அரசின் செயலுக்கு எதிர்ப்பு – சா.மு.நாசர்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழ்நாடு அரசு இன்றே ஏன் அச்சப்படுகிறார்கள் என்று பாஜகவினர் கேட்கின்றனர். தொகுதி மறுசீரமைப்பு சட்டம் குறித்து தெரிந்துகொண்டே அவர்கள் பேசுகிறார்கள். தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட்ட பின்னர் அந்த ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து யாரும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்க முடியாது. அந்த ஆணையம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டால் அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் சென்று வழக்கு தொடர முடியாது. தொகுதி மறுவரையறை ஆணையம் தனது அறிக்கையை நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் வைக்கலாம். விவாதங்கள் நடைபெறலாம். ஆனால் அந்த அறிக்கையில் எந்த திருத்தமும் மேற்கொள்ள நாடாளுமன்றத்திற்கோ, சட்டமன்றத்திதற்கோ அதிகாரம் கிடையாது. ஏன் இன்றைக்கே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சினையை எழுப்புகிறார் என்றால், அந்த காலத்தில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்ததார்கள். அப்படி செய்தால் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென்னக மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, வாஜ்பாய் ஆகியோர் 1971 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் இருக்கட்டும் என்று சொன்னார்கள். அதன்படி கடந்த 50 வருடங்களாக அப்படி உள்ளது.

பாஜகவினர் அமித் ஷா  சொன்னார் என்றும் மீண்டும் மீண்டும் பொய்களை சொல்கிறார்கள். அமித்ஷா தமிழ்நாட்டின் 39  தொகுதிகள் குறையாது என்றுதான் சொன்னார். உத்தர பிரதேசத்திற்கு தொகுதிகள் உயருமா இல்லையா என்று சொல்லவில்லை. எனக்கு தற்போதுள்ள தொகுதிகளை கொடுத்துவிட்டு உத்தர பிரதேசத்துக்கு 120 அல்லது 130 என்று உயர்த்த மாட்டீர்களா? அதை தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்கிறார். தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கான தொகுதி விகிதாச்சாரம் குறையாது வாக்குறுதியை வழங்கவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசு கள்ள மவுனம் சாதிக்கிறார்கள். இது நம்முடைய பிரச்சினை மட்டும் அல்ல. இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள பிரச்சினையாகும். கடைசி நேரத்தில் விழித்துக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுகிறார். ஆனால் இதுவரை நேரம் ஒதுக்கவில்லை. இதேபோல் காவிரி விவகாரத்தில் உள்துறை அமைச்சரை சந்திக்க தமிழக எம்.பி.க்கள் நேரம் கேட்டபோது, அவர்கள் நேரம் ஒதுக்கவில்லை.

தமிழ்நாட்டிற்கு போதிய நிதி வழங்கிவிட்டதாக பிரதமர் மோடி சொல்வது பொய். விலைவாசி இரண்டரை மடங்கு உயர்ந்துள்ளது. ஆண்டுதோறும் நிதி அதிகமாக வர வர அந்த அளவுக்கு மாநில அரசுகளுக்கு நிதியை அதிகமாக தருவோம் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சொல்கிறார். நிதிக்குழு 41 சதவீதம் நிதி வழங்கும்போது அந்த மாநிலத்தின் பரப்பளவு, மக்கள் தொகை, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கையை தான் அடிப்படையாக கொள்கிறது. இதன் அடிப்படையில் கொடுத்துக்கொண்டே இருந்தால் தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து நிதி குறைந்துகொண்டே இருக்கும். 2021-2022ல் தமிழ்நாடு, கர்நாடகா சேர்ந்த 2 லட்சம் கோடி ரூபாய் நிதி வழங்கினார்கள். அப்போது உ.பி.யும், பீகாரும் சேர்ந்து 30 ஆயிரரம் ரூபாய் கொடுத்தார்கள். உ.பி., பிகாரில் உள்ளவர்கள் நம்முடைய சகோதரர்கள். அவர்கள் முன்னுக்கு வர வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் 50 வருடங்களாக நிதி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்த பணத்தை வைத்து என்ன செய்கிறீர்கள் என்று கேட்போம் அல்லவா? இப்போது என்ன நடக்கிறது என்றால் சவலை பிள்ளைக்கு நான் கொடுத்துக்கொண்டே இருப்பேன். அதை சவலை பிள்ளை சாப்பிடுகிறதா? அல்லது அவர்களது பெயரில் வேறு சிலர் சாப்பிடுகிறார்களா? என்று நான் கேட்க மாட்டேன் என்கிறார்கள்.

போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

வேஷ்டி கட்டி பிரதமர் போனார் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தான். திருக்குறளை சொல்கிறார் என்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். அதை ஸ்டாலின் கண்டுபிடிக்கவில்லை தொல்லியல் துறையினர்தான் கண்டுபிடித்தார்கள். எதற்கு எடுத்தாலும் தமிழ்தான் உலகின் புராதானமான மொழி என்று நம்முடைய ரத்த கொதிப்பை சந்தோஷமாக மாற்றுகிறாரே பிரதமர் மோடி, தமிழகம் தான் இரும்பு நாகரிகத்திற்கு முன்னோடியாக இருக்கிறது என்ற விஷயத்தில் ஏன் மவுனம் சாதிக்கிறார். நாங்கள் 3 மடங்கு நிதி கொடுத்திருக்கிறோம் என்று சொல்லி தமிழர்களை தவறான பாதையில் இட்டு செல்வீர்கள். எங்கே எங்களுடைய உண்மையான சாதனை இருக்கிறதோ அங்கே கள்ள மவுனம் சாதிப்பீர்கள். தொகுதி மறுசீரமைப்பு செய்கிறபோது நல்ல காரியம் செய்ததற்காக எங்களை தண்டித்து விடாதீர்கள் என்று சொன்னால் அதை பற்றி பேச மாட்டீர்கள். உங்களுடைய ஆதரவாளர்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு இன்றைக்கு என்ன தேவை வந்தது என்று புரியாதது போல மக்களை குழப்புவார்கள். இதற்கு எல்லாம் ஒரே அர்த்தம் தான். தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்தவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந் கேள்விகளுக்கு விடை அளிக்காதவரை பிரதமர் மோடியின் எந்த பேச்சையும் தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ