போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை குறைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, இலங்கை அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் தவறிய ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்ற ஜாகீர் உசேன், இந்தியாவில் 2022-ஆம் ஆண்டு வரை சிறையில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், தந்தை விடுவிக்கப்படாமல் தொடர்ந்து சிறையில் வைக்கப்பட்டதாகக் கூறி, அவரது மகன் சமீர் ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையின்போது, ஜாகீர் உசேன் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டபோது, அதுதொடர்பாக இலங்கை அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களின் விவரங்களை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றி தேவையான விவரங்களை சமர்ப்பிக்காத ஒன்றிய உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலில் கடத்தப்பட்ட சிறுமி மீட்பு: ஆட்டோ ஓட்டுநரின் சாதுரியத்திற்கு டிஜிபி பாராட்டு
