spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா"மணிரத்னம்" தமிழ் சினிமாவின் சகாப்தம்... பிறந்தநாள் ஸ்பெஷல்...

“மணிரத்னம்” தமிழ் சினிமாவின் சகாப்தம்… பிறந்தநாள் ஸ்பெஷல்…

-

- Advertisement -
மணிரத்னம்… தமிழ் சினிமாவின் தனி சகாப்தம் என்றால் அது மிகையல்ல. மணிரத்னம் என்ற பெயரை கேட்டதும் நம் நினைவுக்கு வருவது, நச்சென்ற ஒரு வரி வசனமும், புதுமையான காதல் களமும், நடுத்தர வர்க்கத்தை பின்னணியாக கொண்ட கதைக்களமும் தான். இதய கோயில் படத்தில் தொடங்கிய மணிரத்னத்தின் காதல் அலை, தென்னிந்திய சினிமாவில் இன்று வரை ஓயாமல் அடித்துக் கொண்டே இருக்கிறது.கன்னட இயக்குநர் ரவி சங்கரிடம் பணியாற்றிய மணிரத்னம், 1983-ல் பல்லவி அனு பல்லவி என்ற முதல் கன்னட படத்தை இயக்கினார். அடுத்த ஆண்டே, மலையாளத்தில், உணரு என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். 1985-ல் பகல் நிலவு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். அதே ஆண்டில் மோகன், ராதா, அம்பிகா நடிப்பில் இதய கோயில் படத்தையும் அவர் இயக்கினார்.

1986-ல் மணிரத்னம் எழுதி இயக்கிய மௌனராகம் திரைப்படம், பெரும் வரவேற்புடன், அவருக்கு பெயரையும் பெற்றுத்தந்தது. புதுமையான காதல் களத்தோடு இயக்கப்பட்ட மௌனராகம் தான் மணிரத்னம் என்ற சகாப்தத்தின் அடித்தளம். மௌனராகம் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதை பெற்றது. 1987 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த நாயகன் திரைப்படம் மணிரத்னம் எனும் இயக்குநரை தேசிய அளவை தாண்டி, சர்வேச அளவில் தூக்கிச் சென்றது. சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த கலை இயக்குனர் என மூன்று தேசிய விருதுகளை தட்டி சென்றது. அதோடு, சிறந்த வேற்றுமொழி படத்துக்கான ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது நாயகன் திரைப்படம்.

we-r-hiring
அடுத்து வெளியான அக்னி நட்சத்திரம் திரைப்படம் 200 நாட்களை தாண்டி ஓடி, வசூலை வாரிக்குவித்தது. 1989ஆம் ஆண்டில் கீதாஞ்சலி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைத்த மணிரத்னம், 1990-ல் குழந்தையை வைத்து “அஞ்சலி” என்ற புது கதைக்களத்தில் படம் கொடுத்தார். வசனங்களைக் குறைத்து காட்சிகளில் கச்சிதமாக கதை சொல்லும் மணிரத்னம், இசையால் கதை சொல்லும் இளையராஜா என இருவரும் சேர்ந்து கொடுத்த கொடையின் பிரம்மாண்டம் `தளபதி.

பல்லவி அனு பல்லவி முதல் தளபதி வரை மணிரத்னம் படங்களில் இளையராஜாவின் இசை மட்டுமே ஒலித்த நிலையில், ரோஜா படத்திலிருந்து ஏ.ஆர்.ரஹ்மானின் இசை ஒலிக்கத் தொடங்கியது. பல்வேறு பிரச்னைகளை இப்படம் சந்தித்தாலும், ரோஜா, மணிரத்னத்தின் திரைப்பயணத்தில் ஒரு பென்ச்மார்க். 1993 ஆம் ஆண்டு ராம் கோபால் வர்மா எழுதிய திருடா திருடா கதையை இயக்கினார் மணி. அடுத்து, 1995ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளிவந்த “பாம்பே” திரைப்படம், சாதாரண மக்களின் வாழ்வில், தீவிரவாதம் ஏற்படுத்தும் தாக்கத்தை இருவரின் காதலின் ஊடே சொல்லியிருப்பார் மணி.

1997 ஆம் ஆண்டு வெளியான இருவர் திரைப்படம், தமிழக அரசியலில் இரு பெரும் ஆளுமைகள் வலம் வந்ததை படம்பிடித்து காட்சியது. இப்படம் எடுக்கும்போது எதிப்புகள் கிளம்பினாலும், படம் என்னவோ வெற்றியை மட்டுமே ஈட்டித் தந்தது. தில் சே என்ற படத்தின் மூலம் இந்திக்கு சென்ற மணிரத்னம், தமிழ் சினிமாவை தாண்டி இந்திய சினிமாவின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டார். 2000-த்தில் வெளியான அலைபாயுதே திரைப்படம், காதலர்களால் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, ஸ்ரீலங்கா உள்நாட்டு போர் பின்னணியில் எடுக்கப்பட்ட கன்னத்தில் முத்தமிட்டாள் திரைப்படம், ஆறு தேசிய விருதுகளை அள்ளியது.

ஆயுத எழுத்து, குரு, ராவணன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மணிரத்னம், நடிகர் கார்த்திக் மற்றும் ராதாவின் வாரிசுகளை, கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் கைபிடித்து அழைத்து வந்தார். தொடர்ந்து மலையாள பிரபலங்களை வைத்து ஓ காதல் கண்மணி என்ற படத்தை இயக்கினார். மணிரத்னம், கார்த்தி, காஷ்மீர், காதல் என்ற கூட்டணியில் திரையில் மேஜிக் நிகழ்த்தியது காற்று வெளியிடை. இதனை தொடர்ந்து, செக்கச் சிவந்த வானம் திரைப்படம் வெளியானது.

ரயிலின் ஓசை, சூரியனின் அந்திமம், ஏக்கப்பார்வை, மழை துளி, காதலின் பிரிவு என்று மணிரத்னம் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் தனி கதை சொல்லும். மணிரத்னம், வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் இந்த கூட்டணியில் உருவான அனைத்து பாடல்களும் ரசிகர்களை வேறொரு உலகத்திற்கே தூக்கிச் சென்றது. பல்வேறு திரைப்படங்களை எழுதி இயக்கியுள்ள அவர், மெட்ராஸ் டாக்கீஸ் என்ற பெயரில் சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, ஆசை, நேருக்கு நேர், வானம் கொட்டட்டும் உள்ளிட்ட படங்களை தயாரித்தும் உள்ளார். எம்.ஜி.ஆர்., உள்பட தமிழ் சினிமாவில் பலரது கனவாக இருந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை, கையிலெடுத்து அதை வௌியிட்டு வெற்றியும் கண்டார். இதையடுத்து கமல்ஹாசனை வைத்து, தக் லைஃப் எனும் மீண்டும் ஒரு படைப்பை உருவாக்கி வருகிறார்.

இதுவரை 6 தேசிய விருதுகள், 6 ஃபிலிம் ஃபேர் விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளை பெற்று தமது திரைப்பயணத்தை அலங்கரித்து வருகிறார் மணிரத்னம். பல விமர்சனங்கள் அவரை பின் தொடர்ந்து வந்தாலும், மணிரத்தினமோ புகழுக்கும், விமர்சனத்துக்கும் இடையே ஒரு தனி பாதை அமைத்து, இந்திய சினிமாவின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவராக தன் கலைப்பயணத்தை தொடர்ந்து கொண்டே செல்கிறார். இத்தனை பெருமைக்குரிய இயக்குநர் மணிரத்னம் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்.

MUST READ