ஆவின் நெய்க்கான சில்லறை விற்பனை விலையில் (MRP) மாற்றமின்றி, பால் முகவர்கள், சில்லறை வணிகர்கள் மற்றும் மொத்த விநியோகஸ்தர்களுக்கான வாங்குதலை உயர்த்தியிருக்கும் ஆவின் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து அச்சங்கத்தின் நிறுவனரும், மாநிலத் தலைவருமான சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் ஆவின் பாலின் விற்பனை விலையை நேரடியாக உயர்த்தாமல், பாலின் கொழுப்புச் சத்தை (4.5%-லிருந்து 3.5%-ஆக) குறைத்தும், அளவைக் (500 மிலி-லிருந்து 450 மிலி-ஆக) குறைத்தும் மறைமுகமாக பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வந்தனர். இந்நிலையில், தற்போது ஆட்சி மாறிய போதிலும் ஆவின் அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்வது மிகுந்த வேதனையளிக்கிறது.
விலை உயர்வு விவரங்கள்:
பொதுமக்களுக்கான அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில் எந்த மாற்றமும் செய்யாமல், கடந்த ஜூலை 15 முதல் அமலுக்கு வரும் வகையில் மொத்த விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்களுக்கான விலையை ஆவின் நிர்வாக இயக்குநர் அஜய் யாதவ் ஐ.ஏ.எஸ் உத்தரவின்பேரில் உயர்த்தியுள்ளனர்:
மொத்த விநியோகஸ்தர்கள்:
500 மிலி நெய்: ₹327.17-லிருந்து ₹332.42 ஆக உயர்வு (₹5.25 உயர்வு).
1 லிட்டர் நெய்: ₹627.62-லிருந்து ₹650.72 ஆக உயர்வு (₹23.10 உயர்வு).
பால் முகவர்கள் & சில்லறை வணிகர்கள்:
500 மிலி நெய்: ₹339.45-லிருந்து ₹342.60 ஆக உயர்வு (₹3.15 உயர்வு).
1 லிட்டர் நெய்: ₹651.13-லிருந்து ₹664.78 ஆக உயர்வு (₹13.65 உயர்வு).
வாழ்வாதாரம் பாதிப்பு:
ஆவின் பால் விற்பனை மூலம் ஏற்கனவே சொற்ப அளவே வருமானம் கிடைத்து வரும் சூழலில், நெய் விற்பனை மூலமே முகவர்கள் தங்களது கடை வாடகை, மின்கட்டணம் மற்றும் பணியாளர்களுக்கான ஊதியச் செலவுகளை ஈடுசெய்து வந்தனர். தற்போதைய இந்த திடீர் விலை உயர்வு பால் முகவர்கள் மற்றும் சில்லறை வணிகர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பறிக்கும் செயலாக அமைந்துள்ளது.
புறக்கணிப்பு எச்சரிக்கை:
எனவே, பால் முகவர்கள் மற்றும் வணிகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆவின் நிர்வாக இயக்குநர் பிறப்பித்த இந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அவ்வாறு திரும்பப் பெறத் தவறினால், தமிழ்நாடு முழுவதும் ஆவின் நெய் விற்பனையை முழுமையாகப் புறக்கணிப்போம் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.
