2026 கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்குதல் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டிக்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த இவர், 2019-இல் ஏற்பட்ட கடுமையான முழங்கை தசைநார் காயம் மற்றும் அறுவை சிகிச்சைகளைக் கடந்து, இந்த உலகளாவிய மேடையில் மீண்டு வந்து பதக்கம் வென்று சாதனையைப் படைத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து:
இது தொடர்பாகத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி:
“பளுதூக்குதலில் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் கிடைத்துள்ளது. கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு எனது வாழ்த்துகள். அவரது வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. அவரது வருங்கால முயற்சிகளுக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து:
இதனிடையே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது எக்ஸ் தளப் பதிவில்:
“2026-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், 65 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் சாதனையை எண்ணித் தேசமே பெருமை கொள்கிறது. உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்” எனக் கூறி வாழ்த்தியுள்ளார்.
“நற்பெயர் வாங்க நாடகமா?” – தவெக அரசு மீது நயினார் நாகேந்திரன் சரமாரி குற்றச்சாட்டு!
