அமரன் திரைவிமர்சனம்.
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் இன்று (அக்டோபர் 31) தீபாவளி தினத்தன்று திரையரங்கில் வெளியாகியுள்ள திரைப்படம் அமரன். இத்திரைப்படம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் என்பது நம் அனைவருக்குமே தெரியும். ட்ரெய்லரில் காண்பிக்கப்பட்டது போலவே படம் ஆக்சன், காதல், எமோஷன்ஸ் எல்லாம் கலந்து உருவாகியுள்ளது. அதன்படி சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவருக்கும் இடையான காதல் காட்சிகள் படத்தின் மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது. இருவரும் அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர். இதுவரை பார்க்காத சிவகார்த்திகேயனை நிச்சயம் நம்மால் திரையில் உணர முடியும். அந்த அளவுக்கு நடிப்பில் தன்னை மெருகேற்றி அமரனுக்காக முழு வீச்சில் இறங்கி அடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
அவருக்கு மிகப்பெரிய போட்டியாக சாய் பல்லவியின் நடிப்பும் அமைந்துள்ளது. நிச்சயம் இந்த கதாபாத்திரத்திற்காக அவர் பல விருதுகளை வெல்லப் போகிறார் என்றே கூறலாம். அந்த அளவுக்கு மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் முதல் பாதியில் காதல் காட்சிகள் மற்றும் எமோஷன் காட்சிகளுடன் ஃபீல் குட் படமாக நகர்ந்து இடைவேளையில் 20 நிமிட ஆக்சன் காட்சிகளால் அனல் பறக்கிறது. படத்தின் இரண்டாம் பாதியில் பெரும்பாலும் ராணுவத்தினரின் துப்பாக்கி சண்டைக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
படத்தின் நம்பகத்தன்மையான மேக்கிங் அசத்தலாக இருக்கிறது. பல இடங்களில் எமோஷனலாக உணர வைத்து, கிளைமாக்ஸ் வரை சோகமான காட்சிகளில் நம்மை கண்கலங்க வைத்து வெற்றி வாகை சூடுகிறார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. அது மட்டுமில்லாமல் கிளைமாக்ஸ் காட்சிகளை தனது நடிப்பினால் தாங்கிப் பிடித்துள்ளார் நடிகை சாய் பல்லவி. மேலும் ஒவ்வொரு காட்சியும் கண்களை கவரும் வண்ணம் ஒளிப்பதிவில் சிறப்பான பங்கை ஆற்றியுள்ளார் CH சாய்.
ஜி.வி. பிரகாஷின் இசையும் படத்திற்கு பலமாக அமைந்து ரசிக்க வைக்கிறது. இது ஒரு பயோபிக் என்பதால் ஒரு சில இடங்களில் திரைக்கதை சற்று மெதுவாக நகர்ந்தது போன்ற உணர்வையும் கொடுத்தது. இருப்பினும் திரையரங்கை விட்டு வெளியே வரும் பொழுது முழுமையாக ஒரு நிறைவான படத்தை பார்த்த அனுபவத்தை இப்படம் நிச்சயம் அனைவருக்கும் ஏற்படுத்தும்.