ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 திவ்ய தேசங்களின் 99வது திவ்ய தேச வைணவ ஸ்தலமாக திகழ்கிறது. பன்னிரு ஆழ்வார்களில் இரண்டு ஆழ்வார்களான பெரியாழ்வாரும், ஆண்டாளும் ஒரே இடத்தில் வாழ்ந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் என கூறப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூரின் மற்றொரு அதிசயம், ஆடிப்பூரம் அன்று வடம் பிடித்து இழுக்கப்படும் அழகிய தேர்.

இந்த 108 திவ்ய தேசத் திருத்தலங்களுக்குச் சென்று, நம்பெருமானைச் சேவிக்கும் முன் அவனைப் போற்றி, சரணடைந்து, அவனே கதியென்று வாழ்ந்த பன்னிரண்டு ஆழ்வார்களைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. ஆழ்வார்கள் திருமாலின் சொருபமாகவே கருதப்படுகின்றனர். ஆழ்வார்கள் வெவ்வேறு காலகட்டத்தில் அவதரித்திருந்தாலும், அவர்கள் போற்றிப் பணிந்ததெல்லாம் பெருமாள் என்ற ஒரே பரமனையே.பெருமானைப் போற்றுவதும், மங்களாசாஸனம் செய்வதுமே அவர்களின் வாழ்க்கையாகவே கொண்டிருந்தனர்..

தென்பாண்டி நாட்டில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பெரியாழ்வார் வீட்டு நந்தவனத்தில் நள ஆண்டு ஆடிப்பூரத்தன்று அவதரித்தவர் கோதை நாச்சியார்(இவரே ஆண்டாள் என போற்றப்படுகிறார்).

அரங்கனையே மனத்தில் மணாளனாக எண்ணி, அவருக்கு அணிவிக்கும் மாலையை தன் தந்தை பெரியாழ்வாருக்குத் தெரியாமல் முதலில் தான் சூடிக் கொண்ட பிறகு கோயிலுக்கு எடுத்துச் செல்வார். இதனால் இவர் சூடிக்கொடுத்த சுடர் மங்கை என போற்றப்பட்டார். இந்த சூடிக்கொடுத்த சுடர்கொடியை (மாலையை) பற்றி ஒரு நாள் உண்மை தெரியவர, தந்தையின் கோபத்திற்கு ஆளானார் ஆண்டாள்.

ரங்க மன்னாரோ சூடியவளின் அன்பையுணர்ந்தவர். அவள் அணிந்த மாலையே தனக்கு வேண்டுமென்று பணித்து, “அவள் ஆண்டாள்” என்று அறிவித்து ஊரறியக் கைப்பிடித்துத் தன்னவளாக்கிக் கொண்டார். பரந்தாமனை கைப்பிடித்த ஆண்டாள் அவனில் ஐக்கியமானதால் ஸ்ரீ பூதேவியின் அம்சமாகக் கருதப்படுகிறார்.

1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்.இந்தக் கோவில் இரண்டு பகுதிகளைக் கொண்டது. கோவிலின் முதல் பகுதியில் வடபத்ரசாயி பெருமாள் கோவில் உள்ளது, கோவிலின் இரண்டாம் பகுதி ஆண்டாள் சந்நிதி உள்ளது.
‘சூடிக்கொடுத்த நாச்சியார் கோவில்’ என்று பெரியாழ்வார் பாடிய வரி இக்கோவில் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது. இந்த கோவிலில் உற்சவர் ஆண்டாளுக்கு சாத்தப்படும் மாலையில் கிளி அணிவிக்கப்படுகிறது. இக்கிளியை உருவாக்குவதற்கு ஒரு வம்சா வழியினர் உள்ளனர்.
தினம்தோறும் ஆண்டாளுக்கு கிளியை செய்வதற்காக மரவள்ளிக்கிழங்கு இலைகள், மாதுளம் பூக்கள் இவற்றைக் கொண்டு செய்யப்படுகிறது.

இன்று உண்டியலாக பயன்படுத்தப்படுகிற இடமே, ஆண்டாள் மாலையை அணிந்து அழகு பார்த்ததாக கூறப்படும் கண்ணாடி கிணறு.

இங்கு உள்ள ஆண்டாள் சூடிய மாலையை எடுத்து சென்று திருப்பதியில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு புரட்டாசியின் பிரம்ம உற்சவத்தின் உச்ச நாளான கருட சேவையின் போது அணிவிக்கின்றனர்.

அதை போன்று திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் இருந்து பட்டுப்புடவை ஆண்டாலுக்கு வருகிறது.
தினந்தோறும் ஆண்டாளுக்கு சாத்தப்படும் மாலை மறுநாள் காலையில் வடபுரம் கோவிலில் உள்ள பெருமாளுக்கு சாத்தப்படுகிறது.
108 திவ்யதேச பெருமாளின் உருவங்கள் ஓவியமாக ஆண்டாள் கோயில் கருவறையைச் சுற்றி முதல் பிரகார சுவர்களில் வரையப் பட்டுள்ளது.
இந்த ஓவியத்தில் திருப்பாற்கடல், வைகுண்டம் பெருமாள் உட்பட்ட அனைத்து பெருமாளையும் தரிசிக்கலாம்.

திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும் ஆண்டாள் நமக்களித்த நான்முத்துக்கள்.
அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம்- இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே! தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய்! நாடிநீ
வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
நாம்கடவா வண்ணமே நல்கு.
இந்த வெண்பாக்களை திருப்பாவை சொல்வதற்கு முன்னே வைணவர்கள் சொல்வது வழக்கம். இவை ஆண்டாளின் ஏற்றத்தைச் சொல்லும் வெண்பாக்கள்.
வாழ்வில் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், கல்வியறிவு, வியாபாரத்தில் முன்னேற்றம் என அனைத்து செல்வ வளங்களையும் பெற இத்திருத்தலத்திற்கு வந்து வேண்டிக் கொள்கிறார்கள்.
அவ்வாறே நாமும் சேவிப்போமே !!
ஆண்டாள் வாழி திருநாமம்!
திருவாடிப் பூரத்து செகத்து உதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!
ஒருநூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே!
உயர் அரங்கர்க்கே கண்ணி உகந்து அளித்தாள் வாழியே!
மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே!
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே!

ஆழ்வார் திருவடிகளே சரணம்! எம்பெருமான் திருவடிகளே சரணம்!