Homeசெய்திகள்கட்டுரைகைதை தவிர்க்க முயற்சி! டெல்லியில் லாபி செய்யும் சீமான்! 

கைதை தவிர்க்க முயற்சி! டெல்லியில் லாபி செய்யும் சீமான்! 

-

- Advertisement -

நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு கொண்டுவரவும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை பெறவும் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் அணி தீவிரமாக முயற்சித்து வருவதாக டெல்லியை சேர்ந்த தமிழ் பத்திரிகையாளர் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

நடிகை பாலியல் வழக்கு தொடர்பாக சீமான் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு குறித்த முழுமையான விவரங்களை விளக்கி பத்திரிகையாளர் நிரஞ்சன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: நாம் தமிழர் கட்சியின் ஒரருங்கிணைப்பாளர் சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். பொதுவாக உச்சநீதிமன்றம் மரண தண்டனை, கைது நடவடிக்கை, கட்டிடங்களை இடிப்பது போன்ற மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை மட்டுமே அவசர வழக்காக எடுத்துக்கொண்டு விசாரிக்கும். குறிப்பாக கைது நடவடிக்கைகளை பொறுத்தவரை குற்றத்தின் பின்னணி, அதன் தீவிரம் ஆகியவற்றை அலசி ஆராய்வார்கள். அரசியல் பழிவாங்கல் தொடர்பான அவதூறு வழக்குகளில் உடனடியாக தடை உத்தரவு பிறப்பிக்கவும் வாய்ப்பு உள்ளது. அதேவேளையில் பாலியல் வன்கொடுமை சார்ந்த விஷயங்களில் எடுத்த உடன் நிவாரணம் கொடுக்க மாட்டார்கள். சம்பந்தப்பட்ட நபர் விசாரணைக்கு சரிவர ஆஜராகவில்லை. ஒத்துழைப்பு அளிக்கவில்லை. வழக்கை நீர்த்துப்போக செய்கிற வேலையை பார்ப்பாரா என்பதை எல்லாம் நீதிபதிகள் ஆய்வு செய்வார்கள். சீமான் மனுவுக்கு எதிராக தமிழக அரசு இதுவரை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்யவில்லை. அதனால் இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு மற்றும் எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்பார்கள். அந்த குறிப்பிட்ட நேரத்தில் நிவாரணம் கிடைக்கின்றதா என்பதுதான் விஷயம்.

உச்சநீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமை இந்த வழக்கை எப்படியாவது விசாரணைக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் சீமான் தரப்பு உறுதியாக உள்ளது. ஏனென்றால் காவல்துறை ஒட்டிய சம்மனை கிழித்தது, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது ஆகியவற்றை காவல்துறை தரப்பில் எடுத்து வைக்கப்படும். விஜயலட்சுமி வெளியிடக்கூடிய வீடியோக்களும் நீதிபதிகளின் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளது. சீமான் இதற்கு முன்பாக இந்த விஷயத்தை எப்படி அணுகினார். உயர்நீதிமன்ற உத்தரவு வந்ததற்கு பின்னர் பத்திரிகையாளர் சந்திப்புகளில் அவர் பேசக்கூடிய வார்த்தைகள் எல்லாம் மிகவும் முக்கியமானது. நிறைய வழக்குகளில் இதுபோன்று பார்த்துள்ளனர். நீதிமன்றத்திற்கு வெளியே குறிப்பிட்ட விவகாரத்தை எப்படி அணுகுகிறார்கள் என்றும் நீதிபதிகள் பார்ப்பார்கள். திங்கட்கிழமை மேல்முறையீட்டு மனுவை எப்படியாவது விசாரணைக்கு கொண்டுவந்துவிட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை பெற்றுவிட வேண்டும் என்பதில் சீமான் தரப்பினர் மிகத்தீவிரமாக உள்ளனர்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றால் உச்சநீதிமன்ற பதிவாளரிடம் மனுவை பதிவு செய்து, வழக்கமான முறையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்வார்கள். அப்போது, மனுவில் உள்ள பிழைகளை சரிசெய்ய கால அவகாசம் வழங்கப்படும். அந்த பிழைகள் சரிசெய்யப்பட்டால் தான் வழக்கிற்கு எண் என்பது கொடுக்கப்படும். அதற்கு டைரி நெம்பர் என்று பெயர். அதன் பிறகு அந்த பெயரில் தான் அழைக்கப்படும். சீமான் வழக்கில் தற்போது வரை டைரி நெம்பர் வழங்கப்படவில்லை. மேல்முறையீட்டு மனுவில் உள்ள பிழைகளை சரிசெய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதனிடையே உச்சநீதிமன்ற பதிவாளரிடம் சீமான் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பிழைகள் சரிசெய்யப்படாவிட்டால் பதிவாளர் வழக்கை திங்கட்கிழமை அன்று விசாரணைக்கு பட்டியலிட மாட்டார். ஒருவேளை பிழைகள் நீக்கப்பட்டு டைரி நெம்பர் வழங்கப்பட்டால், சீமான் தரப்பில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் சென்று வழக்கை அவசரம் கருதி விரைந்து விசாரணைக்கு எடுக்க முறையிடுவார்கள். அப்போது வழக்கின் முக்கியத்துவம் கருதி மனுவை விசாரணைக்கு ஏற்பது குறித்து நீதிபதிகள் முடிவு எடுப்பார்கள். அது நீதிபதிகளின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும். அதுவும் ஆட்சிக்கவிழ்ப்பு, மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுகிறதா என்று நீதிபதிகள் பார்ப்பார்கள். ஆனால் சீமான் விவகாரத்திற்கு அத்தகைய முக்கியத்துவம் அளிப்பார்களா? என்பது குறித்து சந்தேகம்தான். குறிப்பாக மூத்த வழக்கறிஞர்கள் சென்று முறையிட்டால் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதில் முக்கியமான விஷயம் எந்த நீதிபதி அமர்வு முன்பு மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரப்போகிறது என்பதை கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.

உச்சநீதிமன்றத்தில் பொதுவாக பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் யாரும் கருத்து சொல்ல முன்வர மாட்டார்கள். இது நீதிமன்றத்தில் உள்ளதால் கருத்து சொல்லக் கூடாது என்று தவிர்த்து விடுவார்கள். இந்நிலையில், சீமான் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் பெயரை குறிப்பிடாமல் சொன்ன விஷயங்கள், விஜயலெட்சுமி குறித்து அவர் சொன்ன கருத்துக்கள் மற்றும் சீமான் வீட்டில் நடைபெற்ற விஷயங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் பட்டியலிட்டு உச்சநீதிமன்றத்தில் முன்வைப்பார்கள். சீமான் தனது பேட்டியில் நான் என்ன கல்லுரி மாணவியையா பாலியல் வன்கொடுமை செய்தேன் என்று அவர் சொல்லிவற்றை பார்க்கும்போது, அவர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டது போலத்தான் பேசியுள்ளார். இதைதான் நீதிமன்றத்தில் காவல்துறை சொல்வார்கள். இப்படி கொச்சைப்படுத்தும் வார்த்தைகளை நீதிமன்றம் எந்த காலத்திலும் எடுத்துக் கொள்ளாது. அதற்கு என்ன விளக்கம் அளித்தாலும் ஏற்க மாட்டார்கள். ரன்வீர் அல்லபாடியா என்ற யூடியூபர் அவதூறாக பேசிய வழக்கை விசாரித்த நீதிபதி சூரியகாந்த் அமர்வு மிகவும் ஆத்திரப்பட்டது. கிட்டத்தட்ட அதேபோன்று சீமான் தமிழில் பேசியுள்ளது குறித்து தமிழ்நாடு அரசு எடுத்து வைக்கும்போது, அதனுடைய தீவிரத்தன்மை நீதிபதிகளுக்கு புரியவரும்பட்சத்தில் ரன்வீர் அல்லபாடியா வழக்கை போன்றே மீண்டும் நீதிபதிகள் கோபத்தை வெளிப்படுத்த வாய்ப்பு உள்ளது.

பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக வழக்கு வந்தது என்றால், இந்த விவகாரம் நீதிமன்றத்தில உள்ளது. அதனால் கருத்து தெரிவிக்க முடியாது என்று ஒதுங்கி விடுவார்கள். ஆனால் சீமான் வெளிப்படுத்தியுள்ள கடுமையான வார்த்தைகள், குறிப்பாக புகார் அளித்துள்ள நடிகை குறித்து சீமான் மற்றும் அவரது குடும்பத்தினர் சொல்லியுள்ள கடுமையான வார்த்தைகள் வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். உயர்நீதிமன்றம் 12 வாரங்களில் விசாரணையை முடிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இது முழுக்க முழுக்க நீதித்துறை சார்ந்த விஷயமாக இருக்கும்போது புகார் அளித்தவர்களை இப்படி அவதூறாக பேசுவதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது.

இந்த வழக்கில் சீமான் தரப்பில் முக்கியமாக கூறுவது 14 ஆண்டுகள் பழைய வழக்கு. இதில் தன்னை மீண்டும் மீண்டும் இழுக்கிறார்கள் என்று உச்சநீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. ஆனால் அதற்கு முன்னாலே அவரை குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்கிறார். நீதிபதிகள் என்ன சொல்வார்கள் என்றால் கால தாமதாமதம் ஆகிவிட்டது. இவர்களுக்கு எதிராக நீங்கள் ஏன் அவதூறு வழக்கை தாக்கல் செய்யவில்லை என கேட்பார்கள். அதற்கு சீமானிடம் என்ன பதில் உள்ளது?  வழக்குகளை ஒருநபர் எப்படி அணுகுகிறார் என்பதை பொறுத்துதான் நீதிமன்றங்கள் அந்த நபருக்கு நிவாரணம் வழங்குவார்கள். சீமான் இந்த விஷயத்தை இன்னும் சிக்கலாக்கியுள்ளார். ஒருவேளை சீமான் தரப்பு வழக்கறிஞர் திறமையான வாதங்களை முன்வைத்தோ, அரசியல் பழிவாங்கலாக விஷயமாக இதை கொடுத்து, அதை நீதிமன்றம் ஏற்கும்பட்சத்தில் தான் சீமானுக்கு நிவாரணம் கிடைக்கும். இப்போது இருக்கும் சூழலில் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. குறைந்தபட்சம் சீமானின் பேச்சுக்கு கண்டமாவது தெரிவிப்பார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்

MUST READ