மனிதர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை அமைவதில்லை. ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் போல் இன்னொருவருக்கு அமைந்திடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக இருந்து, மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடிக்க தெரிந்தவருக்கு, மதுபோதையின் ஆபத்தைவிட அதிகாரப் போதையின் ஆபத்து கொடூரமானது என்பதை உணராதப் போனவர் தான் ஜெயலலிதா.
“ஜெ.ஜெயலலிதா எனும் நான்” இந்த வாசகத்தின் உச்சரிப்பை கேட்டு தாய் குலங்கள் துள்ளி எழுவார்கள்.
“மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற அவரின் சொல்லிற்கு ஏற்ப இறுதிநாள் வரை மக்களின் முதல்வராகவே வாழ்ந்து மறைந்தவர் செல்வி ஜெயலலிதா.
ஆரம்ப வாழ்க்கை
செல்வி ஜெயலலிதா, 1948 ம் ஆண்டு பிப்ரவரி 24 ந் தேதி கர்நாடகா மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மேல்கோட்டில், ஜெயராம் வேதவல்லி தம்பதியினருக்கு மகளாய் பிறந்தார். இவரின் இயற்பெயர் கோமளவல்லி. அவருக்கு ஒரு வயதான போது ஜெயலலிதா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1950-இல் தந்தை ஜெயராமன் மறைவிற்கு பிறகு குடும்பம் “நடுக்கடலில் பெட்ரோல் இல்லாமல் தவித்த படகைப்போல்” பல நெருக்கடிகளைச் சந்தித்தது.
கல்வி
கணவர் இல்லாமல் பெங்களூரில் அதிகநாள் வாழமுடியாமல் வேதவல்லி தனது மகள் ஜெயலலிதாவை அழைத்துக் கொண்டு 1958 இல் சென்னையில் குடியேறினார்.
மிகுந்த சிரமத்திற்கு இடையில் ஜெயலலிதாவை சர்ச் பார்க் கான்வென்ட்டில் சேர்த்துவிட்டார். பள்ளிப்படிப்பில் சிறப்பாக பயின்ற ஜெயலலிதாவிற்கு கல்லூரிப் படிப்பிற்கான உதவித்தொகையும் கிடைத்தது. ஆனால் குடும்பத்தின் நிதி நெருக்கடியைச் சமாளிக்க திரைப்படங்களில் நடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
திரைப்பட வாழ்க்கை
1961 ஆம் ஆண்டு ‘ஸ்ரீ ஷைல மஹாத்மே’ என்ற கன்னடப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஜெயலலிதா தனது 13 வயதில் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1965 ஆம் ஆண்டு ‘வெண்ணிற ஆடை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் என்று 140 படங்களுக்கு மேல் நடித்து திரையுலகில் அசைக்க முடியாத நட்சத்திரமாக திகழ்ந்தார்.
அரசியல் வாழ்க்கை
புரட்சித் தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரன் வழிகாட்டியாக இருந்து, செல்வி ஜெயலலிதாவை அரசியலில் அறிமுகப்படுத்தினார். 1982-இல் அ.தி.மு.க வில் இணைந்த ஜெயலலிதா, 1984-இல் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதனைதொடர்ந்து 1991-இல், தனது 43-ஆவது வயதில் தமிழக முதல்வராகப் பதவியேற்றார். சிறிய வயதில் முதலமைச்சரான பெண் இவர் மட்டுமே.
நின்றால் பொதுக் கூட்டம், நடந்தால் பேரணி, கை நீட்டினால் ஆயிரமாயிரம் கைத் தடிகள், பாதுகாப்பிற்கு காக்கிக்கள் என்று அதிகாரப் போதையில் மூழ்கத் தொடங்கினார்.
43 வயதில் 28 வயதுடைய சுதாகரன் என்ற வாலிபரை மகனாக தத்தெடுத்தார். இங்கிலாந்து இளவரசியின் திருமணத்தை மிஞ்சும் அளவிற்கு வளர்ப்பு மகனுக்கு திருமணத்தை நடத்தி மகிழ்ந்தார். தானும் தன் தோழியும் நடமாடும் நகைக்கடையாக மாறி உலகத்தின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்தார்.
ஆடிய ஆட்டம் என்ன, பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வம் என்ன, திரண்டதோர் சுற்றம் என்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன? என்ற பாடல் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ “ஜெயலலிதாவிற்கு அப்படியே பொருந்துகிறது”
அவர் ஆட்சிகாலத்தில் நல்லதே நடக்கவில்லையா என்று கேட்கலாம்.
இவர் இரண்டாவது முறையாக முதலமைச்சராக இருந்த சமயத்தில் லாட்டரி சீட்டுகள், மதுவிலக்கு, புகையிலை பொருட்களுக்கு தடையெனப் பலவிதமான நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி பலரின் வாழ்க்கையில் விளக்கேற்றினார்.

பெண்களை மையப்படுத்தி கொண்டு வந்த நலத்திட்டங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், அம்மா லேப்டாப், அம்மா குடிநீர், அம்மா குழந்தை பராமரிப்புப் பொருட்கள், அம்மா கிரைன்டர், மிக்ஸி, டேபிள் ஃபேன், அம்மா காப்பீடு, அம்மா பார்மஸி, தாய்ப்பாலூட்டுவதற்கு தனி அறை போன்ற எண்ணற்ற நல திட்டங்களைச் செயல்படுத்தியவர். இன்றும் அவர் தொடங்கிய அம்மா உணவகத் திட்டம் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
ஜெயலலிதாவின் மரணம்..
ஜெயலலிதா, செப்டம்பர் 22, 2016 அன்று, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்ததை தொடர்ந்து, மாரடைப்பு காரணமாக 2016 டிசம்பர் 5ஆம் தேதி காலமானதாக அப்போலோ மருத்துவமனை அறிவித்தது. அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஒ.பன்னிர்செல்வம் தர்ம யுத்தம் நடத்தினார். அதனை தொடர்ந்து ஓய்வுப்பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் இறுதியில் ஜெயலலிதாவின் மரணத்தில் பல சந்தேகங்கள் இருப்பதை தெளிவுப்படுத்தியுள்ளது. ஆணையத்தின் அறிவிப்பில் ஜெயலலிதா டிசம்பர் 4 ஆம் தேதி இறந்தார் என்று தெரிவித்துள்ளது. இதனால் அரசியல் வட்டாரத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பதவியில் இருந்த போதே இறந்த இந்தியாவின் முதல் பெண் முதல்வர் என்ற வரலாற்று சிறப்பை பெற்றார்.
செல்வி. ஜெயலலிதா, தற்போது உயிருடன் இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டு மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துச் சரித்திரம் படைத்துவிட்டார். உலகில் அவரை போல் அதிகார போதையில் மிதந்தவரும் இல்லை. அதே அதிகாரத்தில் இருந்த போதே பல அவமானங்களை சந்தித்தவரும் எவரும் இல்லை. அதிகார போதையில் மிதக்கும் அரசியல் வாதிகள் அனைவருக்கும் ஜெயலலிதா ஒரு பாடமாகவே இருக்கிறார். ஜெயலலிதாவின் வாழ்க்கையை பார்த்தும் திருந்தாதவர்கள் அரசியலுக்கே தகுதியற்றவர்கள் என்றே கூற வேண்டும்.
-என்.கே.மூர்த்தி