Homeசெய்திகள்கட்டுரைகலைஞர், எம்ஜிஆர், வரிசையில் ஸ்டாலின்! இந்திய  கூட்டாட்சி பயணத்தில் மைல்கல்!

கலைஞர், எம்ஜிஆர், வரிசையில் ஸ்டாலின்! இந்திய  கூட்டாட்சி பயணத்தில் மைல்கல்!

-

- Advertisement -

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தை முன்னெடுத்தன் மூலம் மாநில சுயாட்சிக்கான போராட்டத்தில் கலைஞர், எம்ஜிஆர் வரிசையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைந்துள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் சமஸ் தெரிவித்துள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் சமஸ்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டு நடவடிக்கை குழுவின் அரசியல் முக்கியத்துவம் குறித்து பத்திரிகையாளர் சமஸ் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது: சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் சமகால அரசியல் மட்டுமின்றி, சுதந்திர இந்தியா வரலாற்று போக்கிலும் குறிப்பிடத்தக்க மிக முக்கியமான விஷயமாக இருக்கும். குறிப்பாக கூட்டாட்சி பயணத்தில் மிகவும் முக்கியமான மைல்கல் நடவடிக்கையாக இது அமையும். கூட்டு நடவடிக்கைக் குழுவை முன்னெடுத்ததன் வாயிலாக அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் வரிசையில் ஸ்டாலின் இடம்பெற்றுள்ளார்.  1963 பிரிவினைவாத தடுப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பின்னர்  திராவிட நாடு கோரிக்கையை திமுக முழுமையாக கைவிட்டது. 1950களில் அண்ணா ஆங்கில நாளிதழ்களுக்கு அளித்துள்ள பேட்டிகளில் மிகத் தெளிவாக கூட்டாட்சியாக தான் வலியுறுத்தினார்.

anna
anna

திராவிட நாடு என்று அண்ணா கேட்டது எல்லாம் கூட தனித்த ஒற்றை ஆட்சி நாடு அல்ல. கூட்டரசு என்று அண்ணா சொல்கிறார். அதன் மொழி விகாரங்கள் குறித்து 1950களில் வினோபா பாவே உடன் அண்ணா நடத்திய உரையாடல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.  அண்ணா என்ன சொன்னார் என்றால், அவரவர் பிராந்தியத்தில் அவரவர் மொழிதான் முதன்மையானதாக இருக்க வேண்டும். இவற்றுக்கெல்லாம் தொடர்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும். இந்த பிராந்தியங்களில் எல்லாவற்றிலும் அவரவர் தேர்ந்தெடுக்கிற மக்கள் பிரதிநிதிகள் தான் முதன்மையானவர்களாக இருப்பார்கள். முக்கியமான விஷயங்களை கூடி பேசி முடிவு எடுப்போம் என்றார். அதவாது பிற்பாடு இந்தியா எனும் அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று அண்ணா பேசினாரோ அப்படிதான் அவர் திராவிட நாடு என்கிற விஷயத்தை பேசும்போதும் அவர் பேசியுள்ளார். கூட்டாட்சி என்கிற இடத்தில் இருந்துதான் அவர் பேசுகிறார்.

சீட்டாட்டத்தில் கலைஞர் வாங்கிய முதல் கார் #கலைஞர்100
கலைஞர் கருணாநிதி

நாம் அந்த இடத்தில் ஆரம்பித்தோம் என்றால் அடுத்ததாக ஒரு பெரிய மாற்றம். அண்ணாவின் மறைவை தொடர்ந்து கலைஞர் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக டெல்லிக்கு சென்றிருந்தார். தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் சேலம் எஃகு ஆலை அறிவிக்க வேண்டும் என்று எச்சரிக்கும் தொணியில் அவர் பேசுகிறார். எந்த அளவுக்கு செல்கிறார் என்றால் 5 ஆண்டு திட்டங்களையே புறக்கணிப்பேன் என்றார். அவர் அந்த கூட்டத்திற்கு பங்கேற்று திரும்பிய சில நாட்களில் அந்த திட்டத்தை அறிவித்துவிட்டார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. அதில் தொடங்கிய கலைஞரின் பயணம் என்பது 1970களில் கூட்டாட்சி பயணத்தில் உத்வேகமான ஒரு பயணம் என்று சொல்லலாம். அதே காலகட்டத்தில்தான் இதுபோன்ற ஒரு மாநில சுயாட்சி மாநாடு நடைபெற்றது. தற்போதைய கூட்டத்திற்கு மேற்கு வங்கம் வரவில்லை. ஆனால் அந்த கூட்டத்தில் வங்கத்தினுடைய பிரதிநிதிதான் முதன்மையானவராக இருந்தார். மேற்குவங்க முதலமைச்சராக இருந்த அஜோய் முகர்ஜி மிக முக்கியமான விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு அடுத்தபடியாக வங்காள காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்த பிரனாப் முகர்ஜி கலந்துகொண்டார். எஸ்.எம்.கிருஷ்ணா போன்றோர் கலந்துகொண்டனர்.

மாநில சுயாட்சி மாநாடு என்பது மிக முக்கியமான முன்னெடுப்பாக அமைகிறது. இதன் வாயிலாக அதே காலகட்டத்தில்தான் வரலாற்று சிறப்பு மிக்க ராஜமன்னார் குழு அமைக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் உறவுகளை சீரமைக்க, கூட்டாட்சியை மையப்படுத்திய, மாநிலங்களை முதன்மைப்படுத்துகிற, இந்திய அரசமைப்பை சிந்திக்கின்ற ஒரு குழுவாக ராஜமன்னார் குழு அமைகிறது. நீதிபதி ராஜமன்னாரை தேர்வு செய்ததே மிகவும் முக்கியமான நடவடிக்கையாகும். அவர், சென்னை மாகாணத்தின் அட்வகேட் ஜெனரலாக மிக இளம் வயதில் பொறுப்பு வகித்த சிறப்புக்குரியவர். அவருக்கு முன்னதாக அந்த பொறுப்பில் இருந்தவர் புகழ்பெற்ற சட்ட வல்லுநர்களில் ஒருவராக இருந்த அல்லாடி கிருஷ்ணசாமி. அந்த பொறுப்புக்கு 43 வயதில் ராஜமன்னார் வந்தார். நீதித்துறை சார்ந்து ஒரு பெரிய வெளிச்சம் உண்டு. அந்த ராஜமன்னார் குழு அளித்த அறிக்கை என்பது இன்று வரை இந்திய கூட்டாட்சியை நாம் எப்படி அணுக வேண்டும் என்பதில் ஒரு மைல கல். அதுதான் பின்னாளில் வந்த சர்காரியா கமிஷனிலும் பிரதிபலிக்கிறார்கள். பூன்சி கமிஷனிலும் பிரதிபலிக்கிறார்கள். அந்த நடவடிக்கையை கலைஞர் எடுக்கிறார். அதே கால கட்டத்தில் தமிழ்நாட்டிற்கு என்று ஒரு கொடியை அறிமுகம் செய்கிறார். அது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. ஆனால் இப்போது வரை அதுபோன்ற சிந்தனையை நோக்கி இந்தியா திரும்பவில்லை. கர்நாடக அரசு அறிவித்த மாநில கொடிக்கு கூட அங்கீகாரம் கிடைக்கவில்லை. கலைஞர் முன்னெடுத்த மாநில சுயாட்சி மாநாடு என்பது தேசிய அளவில் கூட்டாட்சி சம்பந்தமான பார்வையில் பெரிய வெளிச்சம் உண்டாக்கிய நிகழ்வாகும்.

அள்ளிக் கொடுக்கும் வள்ளல் எம்.ஜி.ஆரின் நினைவு நாள் இன்று!

பின்னர் 1983 மார்ச் 20ஆம் தேதி எம்ஜிஆர் மூளையாக செயல்பட்டு, தென்னக மாநில முதல்வர்கள் மாநாட்டை பெங்களுருவில் ஏற்பாடு செய்தார். அன்றைய கர்நாடக முதல்வர் ராமச்சந்திர ஹெக்டே, ஆந்திர முதல்வர் ராமாராவ், புதுச்சேரி முதல்வர் டி.ராமச்சந்திரன். இதில் விடுபட்ட நபர் கேரள முதலமைச்சராக இருந்த கருணாகரன். இந்திரா காந்தியிடம் இருந்து வந்த அழுத்தம் காரணமாக அவர் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. இந்த மாநாடு தேசிய அளவில் ஒரு வெளிச்சம் பாய்ச்சிய நிகழ்வு ஆகும். அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கியமான விஷயம் நிதிப் பகிர்வுதான். அன்றைக்கு ரேஷன் அரிசி பெறுவது.

அதில் முன்வைக்கப்பட்ட மிகவும் முக்கியமான  கோரிக்கை என்ன என்றால் மத்திய – மாநில உறவுகளை மறுசீரமைப்பது தொடர்பாக ஒரு கமிஷனை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்பதுதான். அந்த கூட்டத்தில் பேசிய எம்ஜிஆர், இன்றைக்கு இது 4 பேராக இருக்கலாம். நாளைக்கே இது 22 ஆக மாறலாம். இந்த கூட்டத்தின் வாயிலாக இந்தியா முழுக்க ஒரு புதிய பாதயை நோக்கி அடி எடுத்து  வைக்கிறது. மாநிலங்கள் தங்களுக்குள்ளான முரண்பாடுகள், பகிர்வுகளை அவர்களுக்குள்ளாக பேசுவது என்கிற அகன்ற பார்வையை முன்வைத்தது. அடுத்த 4 நாட்களில் பிரதமர் இந்திரா காந்தி சர்காரியா கமிஷனை அறிவித்தார். இந்த அறிவிப்பை முதல்வர் எம்ஜிஆர், எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் ஆகியோர் வரவேற்றனர். அந்த வரிசையில் சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுவரையறை குறித்த கூட்டத்தை பார்க்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ