தமிழ்நாட்டில் மதக்கலவரம் எங்கே நடந்தாலும் நான் முதல் ஆளாக வந்து நிற்பேன். அதை நடக்க விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது என்று திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

மதுரையில் இன்று முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ள நிலையில், இந்த மாநாட்டின் பின்னணியில் பாஜக மேற்கொள்ளும் அரசியல் குறித்து இயக்குநர் அமீர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:- மதுரையில் கிட்டத்தட்ட அரை நுற்றாண்டு காலம் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இந்த கால கட்டத்தில் நான் எந்த ஒரு மதக் கலவரத்தையும் பார்த்தது கிடையாது. இங்கே எல்லா மக்களும் பாண்டியர் காலம் முதல் நாயக்கர் காலம் என எல்லா காலத்திலும் மாமன் – மச்சான் உறவோடு தான் வாழ்ந்திருக்கிறார்கள். மதுரையை நாயக்கர் மன்னர்கள் ஆண்டார்கள். ஆனால் நாயக்கர்களும், இஸ்லாமியர்களும் மாமன் – மச்சான்கள் தான். மதுரையை சுற்றியிருக்கும் கள்ளர்களும், மறவர்களும் மாமன் – மச்சான் உறவுதான். இங்கே ஒவ்வொருவருக்கும் மத நம்பிக்கைகள் இருந்தாலும் பொதுவெளியில் ஒருபோதும் மத மாச்சரியங்களுடன் நடந்துகொண்டது கிடையாது. அப்படிபட்ட பூமி இந்த மதுரை மண். திருப்பரங்குன்றம் மலைக்கு எனக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. சிறு வயதில் இருந்து நான் சிக்கந்தர் தர்காவுக்கு சென்றுள்ளேன். திருப்பரங்குன்றம் மலைக்கும் வடநாட்டு உள்துறை அமைச்சருக்கும் என்ன தொடர்பு உள்ளது. சிறு வயதில் வீட்டில் இருந்து அரசி, பருப்பு, ஆடு, கோழிகளை எடுத்துச்சென்று மலை மீது பலியிட்டு வழிபாடு நடத்தி வந்தோம். இதுபோன்ற நிகழ்வுகள் ஒருபோதும் மதுரை மண்ணில் நடைபெற்றதே கிடையாது. முதன் முறையாக காவல்துறை அதிகாரி ஒருவர்தான் ஆடு, கோழிகளை பலியிடக் கூடாது என்று சொன்னார். திருப்பரங்குன்றத்தின் வரலாறு தெரிந்திருந்தால் அவர் அவ்வாறு செய்திருக்க மாட்டார்.
சிக்கந்தர் தர்கா தொடர்பாக திருப்பரங்குன்றம் மக்கள் எங்காவது புகார் அளித்தார்களா? எங்கிருந்தோ வந்த இந்து முன்னணி தான் திடீரென பிரச்சினையை கிளப்பினார்கள். ஸ்ரீகந்தர் மலையை, சிக்கந்தர் மலையாக மாற்றிவிட்டதாக சொல்கிறார்கள். அப்படி மாற்றியபோது அங்கிருக்கும் இந்துக்களுக்கு தெரியாதா? அவர்கள் எதிர்த்து போராடி இருக்க மாட்டார்களா? எப்படி மலையின் பெயரை மாற்ற முடியுமா? மத நல்லிணக்கத்தோடு இருக்கின்ற மதுரையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையில் எடுத்தது மிகப்பெரிய தவறு ஆகும். வடநாட்டில் இருக்கின்ற சூழலை தமிழ்நாட்டில் கொண்டுவர பார்க்கிறார்கள். மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் கோவில் தான். அந்த கோவிலுக்கு அருகாமையிலேயே மசூதியும், தேவாலயங்களும் அமைந்திருக்கின்றன. அப்படி என்றால் மதுரை மக்கள் எப்படி வாழ்ந்திருக்கிறார்கள்.
ஆன்மிகம் என்கிற பெயரில் அரசியல் செய்ய முயற்சிப்பதால் தமிழக அரசு அனுமதி மறுத்தது. ஆன்மிக மாநாடு நடத்துவதற்கு நீதிமன்றம் இத்தனை வழிகாட்டு நெறிமுறைகளை விதிக்க வேண்டியது இல்லையே? நீங்கள் ஏற்கனவே வேல் யாத்திரை என்ற ஒன்றை தொடங்கி தோற்றுவிட்டீர்கள். நயினார் நாகேந்திரன், பவன் கல்யாண் போன்றவர்கள் விரதம் இருப்பதாக சொல்கிறார்கள். நயினார் என்பவர் தனி மனிதர் அல்ல. அவர் பாஜகவின் மாநிலத் தலைவர் என்பதை உணர வேண்டும். அமித்ஷா என்பவர் பாஜகவின் தேசிய அளவிலான தலைவர் என்பதை உணர வேண்டும். முருக பக்தர்கள் மாநாட்டை ஏற்பாடு செய்வது முழுவதும் பாஜகவினர் தான். நயினார் நாகேந்திரன் நாங்கள் இப்போது முருகனை கையில் எடுத்திருக்கிறோம். 2026ல் தமிழ்நாட்டை கையில் எடுப்போம் என்று சொல்லியுள்ளார். இது அரசியல் இல்லையா? இதை எப்படி ஆன்மிக மாநாடு என்று சொல்கிறீர்கள். தமிழ்நாட்டை வெல்ல வேண்டும் என்றால், மத்தியில் 3வது முறையாக ஆட்சியில் இருக்கின்ற பாஜக மக்களுக்கு வளர்ச்சி திட்டங்களை செய்து வெல்ல வேண்டும். இவர்கள் முருகனிடம் போய் முறையிட்டால், முருகன் அவர்களிடம் ஆட்சியை கொடுத்து விடுவாரா?
ராமரை பயன்படுத்தியது போல 2026 தேர்தலுக்காக முருகர் பயன்படுத்தப்படுகிறார். அது குறித்து நாம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். ஹெச்.ராஜாவுக்கு முருகன் மீது உண்மையான பக்தி இருந்தால் ஒரு நாளாவது அலகு குத்தி, காவடி தூக்கியுள்ளாரா? நான் செய்ய தயாராக இருக்கிறேன். ஹெச்.ராஜா செய்வாரா? நான் ஒரு இஸ்லாமியர் தான். நான் மத நல்லிணக்கத்தை விரும்புகிறேன். நானும் அலகு குத்துகிறேன். காவடி தூக்குகிறேன். என்னுடைய மதம் ஏற்கிறது. ஏற்கவில்லை என்பது தனிப்பட்ட விவகாரம். அமைதியாக இருக்கிற இந்த மதுரை மண்ணில் உங்களுடைய காவி சிந்தனை பரவ வேண்டாம் என நான் நினைக்கிறேன். இந்த மண்ணுக்கு பெயரே ஆன்மிக மண்தான். இந்த மக்களை பிளவு படுத்திவிடுவார்கள் என்கிற பதற்றம் உள்ளது. மதக்கலவரம் இல்லாத இந்த மதுரை மண்ணை மதக் கலவரம் தூண்டி விடுவார்களோ என்கிற பதற்றம் உள்ளது. இந்த மாநாட்டிற்கு நீதிமன்றம் ஏன் இத்தனை கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். ஏன்னென்றால் இதில் அரசியல் உள்ளது என்று நீதிமன்றத்திற்கும் தெரியும்.
திமுக இந்து விரோத அரசு என்று வாக்களித்த மக்களுக்கு தெரியதா? திமுகவுக்கு வாக்களித்தவர்கள் எல்லாம் பெரும்பான்மை இந்துக்கள் தான். இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக பேசிய பொன்முடியை கட்சியில் இருந்து திமுக நீக்கியதே. அப்போது ஆன்மிகம் சார்ந்த மக்களின் மனது புண்படக்கூடாது என்கிற மனநிலையில் தானே திமுகவும் உள்ளது. சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் மக்கள் திமுகவுக்கு தான வாக்களிக்கிறார்கள். அது எப்படி இந்து விரோத கட்சியாக இருக்க முடியும். எனக்கு அதிமுக திமுக என இரண்டு கட்சிகளுமே தேவை என்று நினைப்பவன் நான். இவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுகிற நாதக, கம்யூனிஸ்ட்டுகள் தேவை. இவர்கள் எல்லாம் மாநிலத்தின் நலனுக்காக குரல் கொடுப்பவர்கள். ஆனால் வடநாட்டில் இருந்து வருகிற ஒரு கட்சி, 50 ஆண்டு காலமாக பொதுவாழ்வில் இருந்த, 5 – 6 முறை ஆட்சிக்கட்டிலில் இருந்த ஒரு கட்சியை தனக்கு கீழே கட்டுப்பாட்டில் வைப்பது என்பது ஏற்புடையதா? எனக்கான கட்சியை, திடீரென எங்கே இருந்து வந்த ஒரு கட்சி ஆக்டோபஸ் போல கபளீகரம் செய்வதை எப்படி நான் விரும்புவேன்.
மதுரையில் நடைபெறுவது முருகனுக்கான மாநாடு கிடையாது. இது முழுக்க முழுக்க அரசியல் பேச போகிற மாநாடு. பாஜக மாநாடு. அமித்ஷா, யோகி ஆதித்தயநாத், வருகிறார் என்றால் மக்கள் திரள மாட்டார்கள் என்பதால் முருகன் பெயரை சொல்லி மக்களை மாநாட்டிற்கு அழைக்கிறார்கள். அறுபடைவீடுகளுக்கு ஏதோ அச்சுறுத்தல் இருப்பது போல பொய்யை சொல்லி அவர்களை எல்லாம் அழைத்து, 2026ல் திமுகவை தோற்கடிக்கணும் என்றுதான் பேச போகிறார்கள். அதற்கு ஆன்மிகத்தை பயன்படுத்துகிறார்கள். அதைதான் நாங்கள் தவறு என்று சொல்கிறோம். நீங்கள் தவறாக பயன்படுத்தினாலும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மனித சங்கிலியாக நிற்கிறோம். அதற்காக தான் பிரச்சாரம் செய்கிறோம்.
ஒரு இஸ்லாமியராக இருந்துகொண்டு மனிதசங்கிலியில் பங்கேற்பதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. நான் இந்த மதுரை மண்ணிற்கு சொந்தக்காரன். நான் பிறப்பால் தமிழன். ஏற்றுக்கொள்ளப்பட்ட மார்கம் தான் இஸ்லாம். தமிழ்நாட்டில் இதுபோன்ற மதக்கலவரம் எங்கே நடந்தாலும் நான் முதல் ஆளாக வந்து நிற்பேன். அதை நடக்க விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு உள்ளது. போராட்டத்தில் என் பக்கத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லாம் இந்துக்கள் தான். இதில் எல்லோரும் கலந்துகொள்வது அவசியமாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.