சட்டமன்றக் கூட்டத்தொடரை எதிர்கொள்ளத் திராணியின்றி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை இரவோடு இரவாகக் கைது செய்திருப்பது ஜனநாயகப் படுகொலை என்றும், இது தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு ‘காட்டாட்சித் தர்பாரை’ நிறுவும் முயற்சி என்றும் தி.மு.க தொண்டரணிச் செயலாளர் தமிழன் பிரசன்னா கடும் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்,.


சமீபத்திய ஊடக நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், ஆளுங்கட்சியின் மக்கள் விரோதப் போக்குகளையும், கைது நடவடிக்கைக்குப் பின்னால் உள்ள அரசியல் சதிகளையும் விரிவாகப் புட்டுப் பொளந்துள்ளார்.
காவிரிப் பிரச்சனையிலிருந்து திசைதிருப்பும் சதி!
தஞ்சையில் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கோரியும், மேகதாது விவகாரத்தில் மௌனம் காக்கும் அரசை அம்பலப்படுத்தியும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயலும்போது, அதைத் தட்டிக் கேட்க வக்கற்ற இந்த அரசு, விவசாயிகள் பிரச்சினைகளிலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே உதயநிதி மீது அவசர அவசரமாகப் பொய் வழக்குகளைப் பாய்ச்சியுள்ளது,.
உச்சநீதிமன்ற விதிகளை மீறும் காவல்துறை!
மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகளுக்குட்பட்ட சிறைத் தண்டனைக்குரிய வழக்குகளில் உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி முறையான நோட்டீஸ் (41/35 BNSS) வழங்கப்பட வேண்டும். ஆனால், இதைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, விடியற்காலையிலேயே காவல்துறையை ஏவி எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்திருப்பது சர்வாதிகாரத்தின் உச்சக்கட்டம் என்று தமிழன் பிரசன்னா குற்றம் சாட்டியுள்ளார்.
ஆளுங்கட்சியின் தரமற்ற அரசியலும் இரட்டை வேடமும்!
எதிர்க்கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்புபவர்கள், முதலமைச்சர் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பொதுவெளியில் நாகரிகமின்றிப் பேசிய வார்த்தைகளை மறந்துவிட்டதாக அவர் சாடினார்,. சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, மின்சாரப் பிரச்சனை, விலைவாசி உயர்வு மற்றும் மாநிலத்தின் பொருளாதாரச் சரிவு ஆகியவற்றிலிருந்து மக்களை மீட்கத் தவறிய இந்த ‘கோமாளி அரசு’, மிரட்டல் அரசியலால் தி.மு.க-வை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது என்று எச்சரித்துள்ளார்.
நீதிமன்றத்தின் தலையீடும் தி.மு.க-வின் அடுத்த கட்டப் போராட்டமும்!
கைது நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றம் உடனடியாகத் தலையிட்டுத் தீர்ப்பளித்துள்ளதுடன், தி.மு.க எத்தகைய அடக்குமுறைகளையும் சட்ட ரீதியாகவும் மக்கள் மன்றத்திலும் எதிர்கொண்டு வென்று காட்டும் என்று தமிழன் பிரசன்னா திட்டவட்டமாகத் தெரிவித்தார்,.
