விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் போலியானது என தெரியவந்துள்ளதால் அவர் ஒட்டு மொத்தமாக அம்பலப்பட்டு போய் நிற்பதாக பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
சீமான் புகைப்பட சர்ச்சை தொடர்பாக பேராசிரியர் சுப.வீரபாண்டியன் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் சீமான் உள்ள புகைப்படம் போலியாக உருவாக்கப்பட்டது என்ற தகவல் எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. பிரபாகரனை நில நிமிடங்கள் அவர் பார்த்திருக்கலாம், ஆனால் அவர் சொல்வது போன்ற கதைகள் நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்று நினைத்தேன். இந்த படமே செயற்கையாக உருவாக்கப்பட்டது என்றால் திட்டமிட்டு ஒவ்வொன்றாக வெளியிடுவதற்கு பெயர் என்னவென்று சொல்வது. இந்த தகவலை அறிந்த பின்னர் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரை தொடர்பு கொண்டு பேசினேன். சத்யராஜ் நடித்துள்ள அவரது வெங்காயம் படத்தில் நான் ஒரு பாடல் எழுதியுள்ளேன்.
தமிழன் தொலைக்காட்சியில் இருந்த செங்கோட்டையன் என்பவர் இந்த புகைப்படங்களை கொடுத்து இணைக்க சொல்லியுள்ளார். ஆனால் அவருக்கு எந்த ஆண்டு என்ற நினைவு இல்லை. 2008 இறுதியில் இருக்கக்கூடும் என சொல்கிறார். அப்போது தான் சீமான் ஈழத்திற்கு சென்றார். எதற்காக என்றால், சர்ப்ரைஸ் பரிசாக வழங்க இந்த போட்டோவை உருவாக்கியதாகவும், ஆனால் இப்போது எனக்கே குற்ற உணர்ச்சியாக உள்ளதால் இதனை தெரிவித்ததாகவும் ராஜ்குமார் குறிப்பிட்டார். இவ்வளவு ஆபத்துகளுக்கு அந்த புகைப்படம் பயன்படும் என்று அவருக்கு தெரிந்திருக்கவில்லை. அந்த புகைப்படத்தில் சில பிழைகள் உள்ளதாக தெரிவித்தார். கொளத்தூர் மணி, விடுதலை ராஜேந்திரன் போன்றோர் இந்த படம் உண்மையான படம் போன்று தெரியவில்லை என சந்தேகம் எழுப்பியதாகவும், நான் அப்போது பேசிக்கொள்ளவில்லை. ஆனால் இப்போது உண்மையை சொல்லிக்கொள்கிறேன் அது உண்மையான படம் அல்ல. இரண்டு படங்களை ஒட்டி உருவாக்கப்பட்ட படம் அது என்று தெரிவித்தார்.
ஒரு விதத்தில் சீமான் தன் மீது தானே மண்ணை போட்டுக்கொண்டுள்ளார். பெரியாரை பற்றி அவர் பேச போய் இத்தனை செய்திகளும் வெளி வருகின்றன. ஒரு மனிதன் எவ்வளவு அடிப்படையிலேயே திட்டமிட்டு மோசமானவைகளை செய்துள்ளார் என்பதற்கு இது ஒரு சான்று. 2008 கால கட்டத்தில் சீமான் இலங்கை சென்றபோது என்னுடன் தொடர்பில் தான் இருந்தார். நடிகர் ராஜ்கிரண் சொல்வது போல இவர் மட்டும் தனியாக இலங்கை செல்லவில்லை. இயக்குநர்கள் பாரதிராஜா, ராஜ்கிரண், மகேந்திரன், அவரது மகன் ஆகியோருடன் தான் சென்றிருந்தார். அப்போது பார்த்ததாக சொன்னார். கொஞ்சம் கொஞ்சமாக கதைகளை சொல்ல தொடங்கினார். அப்போது சந்தேகம் ஏற்பட்டது. பழ.நெடுமாறன் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் தொடர்பில் இருந்தவர். ஆனால் அவர் இதுபோன்ற கதைகளை வெளியே சொன்னதில்லை. இதேபோல் கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், வைகோ போன்றவர்களும் வெளியே பேசியது கிடையாது. ஆனால் சீமான் கதைகளை சொன்னபோது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அங்கும் இங்குமாக பொய் இருக்கும் என்று கருதினோம். ஆனால் அதில் கூட உண்மை இல்லை.
சீமான் அனைத்து விஷயங்களையும் மிகவும் திட்டமிட்டு செய்துள்ளார். புலிகளை பற்றிக்கொண்டு நாம் மேலே வந்துவிடலாம் என நினைக்கிறார். இவர் புலிகளுக்காக உழைத்தவர் அல்ல, அவர்களை வைத்து பிழைத்தவர். 1983 -1987 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சிகளும் விடுதலைப்புலிகளை ஆதரித்தனர். 1987 அமைப்படை இலங்கை சென்ற பின்னர் காங்கிரஸ் எதிராக மாறியது. 1991 ராஜிவ்காந்தி படுகொலையை தொடர்ந்து பலர் வெளியே வந்தனர். 1991 முதல் 1996 வரை புலிகள் என்று சொன்னாலே கடுமையான தண்டனை. ஜெயலலித ஆட்சிக்காலத்தில் தடா சட்டம் கொண்டுவந்தார். பின்னர் 2001 – 2006ல் பொடா சட்டம் வருகிறது. 2002 முதல் நான் சிறையில் ஒன்றரை ஆண்டுகள் இருந்தேன். வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் சிறையில் இருந்தனர். அந்த நேரத்தில் எல்லாம் சீமான் எங்கே இருந்தார் என யாருக்கும் தெரியாது.
1994ல் இயக்குநர் மணிவண்ணனின் அமைப்படை திரைப்படத்தில் உதவி இயக்குநராக சீமான் சேருகிறார். கவிஞர் செல்வபாரதி வாயிலாக எனக்கு அறிமுகமாகினார். அப்போது இருந்தே அவர் இவற்றை எல்லாம் அறிந்தவர்தான். எந்த இடத்திலும் தன்னை ஒரு ஈழ ஆதரவாளராக காட்டிக்கொள்ளவில்லை. திரைத்துறைக்கு புதிதாக வந்தவர். தனது வாழ்வுக்காக அப்படி காட்டிக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் இன்று பிரபாகரனுக்கு பின்னர் அவர்தான் ஈழப்போராட்டத்தை நடத்தியவர் போன்று பேசி கொண்டிருக்கிறார். நான் பொதுக்கூட்டத்திலேயே கேட்டேன். நீங்கள் 2008ல் ஈழத்திற்கு சென்றீர்கள் என்பது உண்மை. ஆனால் 1983 முதல் 2008 வரையிலான கால கட்டத்தில் தமிழ்நாட்டில் உங்களது பங்களிப்பு என்ன என்று கேள்வி எழுப்பினேன்.
சீமான் 2006ல் ஜெயலலிதா ஆட்சி முடிந்தவுடன் பாதுகாப்பாக போராட்டக் களத்திற்கு வருகிறார். கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் பேசுகிறார். அப்போது முழுக்க முழுக்க திமுகவை, பெரியாரியத்தை ஆதரித்து பேசுகிறார். 2009ல் நான், கவிஞர் அறிவுமதி, சீமான் ஆகியோர் இணைந்து திமுகவை ஆதரித்து ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டோம். தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் திமுக கூட்டங்களில் பேசுகிறோம். திடீரென 2008 பிரபாகரனை சந்தித்த பின்னர் தனக்கு மனமாற்றம் ஏற்பட்டதாக சீமான் கூறுகிறார். அப்போது தான் திமுக திருட்டு கூட்டம் என்று தெரிந்து கொண்டாராம். ஆனால் அவர் 2017ல் பெரியாரை ஆதரித்து ஒட்டி போஸ்டர்கள் எல்லாம் இன்றும் இணையத்தில் உள்ளன. ரங்கராஜ் பாண்டே சீமானின் மாற்றம் இயல்புதான் என்கிறார்.
2008க்கு பின்னர் சீமான் மாறிவிட்டார் என்றால், எதற்கு போஸ்டர் ஒட்டினார், எதற்கு நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி மாநாட்டு மலரில் பெரியாரின் புகைப்படத்தை, கட்டுரை வெளியிட்டீர்கள். எம்.ஜி.அர் ஆட்சிக்கு வந்தவுடன் பெரியாரை மேடைக்கு அழைத்து வந்தார் என்கிறார் சீமான். எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தது 1977. பெரியார் மறைந்தது 1973. இப்படி அனைத்தும் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. இப்போது ஒட்டுமொத்தமாக அம்பலட்டு போய் நிற்கிறார். எந்த படத்தை வைத்து சீமான் மேலே வந்தாரோ, அந்த படமே அவரது கடைசி சீரழிவுக்கு காரணமாக அமைந்துள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.