Homeசெய்திகள்கட்டுரைவெற்றி மட்டுமே நமது லட்சியம் - மாற்றம் முன்னேற்றம் - 11

வெற்றி மட்டுமே நமது லட்சியம் – மாற்றம் முன்னேற்றம் – 11

-

- Advertisement -

11. வெற்றி மட்டுமே நமது லட்சியம் – என்.கே.மூர்த்தி

மனிதரின் நாடித்துடிப்பைப் பார்த்து நோயை கண்டுபிடிக்கும் முறை பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு சீனாவில் தொடங்கியது.

மனிதரின் நாடித்துடிப்பைப் பார்த்து நோயை கண்டுபிடிக்கும் முறை

உடலில் 51 விதமான நாடிகளை 11 இடங்களில் பார்க்கும் கலையை அறிந்திருந்தார்கள். நான் நாடியை பார்த்து நோயறியும் மருத்துவன் அல்ல. கை ரேகையை பார்த்து சோதிடம் கணிப்பவனும் அல்ல. ஆனால் மனதின் நடைமுறை விதியை அறிந்தவன்.

ஆழ்மனதில் என்ன விதைக்கிறோமோ அதை கண்டிப்பாக அறுவடை செய்யலாம் என்பதை அறிந்தவன். அதை மட்டுமே அறுவடை செய்ய முடியும் என்பதில் தீர்க்கமான நம்பிக்கையுடையவன்.

ஆழ்மனதில் என்ன விதைக்கிறோமோ அதை கண்டிப்பாக அறுவடை செய்யலாம்

நமது மனம் கேமராவை போன்றது. அதில் வாழ்க்கைக்கு தேவையான முன்னேற்றத்திற்கு தேவையான காட்சிகளை படம் பிடிக்க வேண்டும். நமக்கு என்ன தேவையோ அதனை படமாக ஆழ்மனதில் பதிவு செய்யும் வேலையில் இறங்க வேண்டும்.

பணக்காரனாக வேண்டும் என்றால் அதன் தொடர்புடைய ரூபாய்  நோட்டுகள், காசு ஆகியவற்றை மனதில் படமாக பார்க்க வேண்டும். கார்கள், பங்களாக்கள், என்று விலை உயர்ந்த பொருட்களை மனதில் காட்சிப்படுத்துங்கள். நாம் அடிக்கடி பயன்படுத்தும் செல்போன், புத்தகம் போன்றவற்றில் பார்க்கும்படி வைத்துக்கொள்ளவும்.

ரூபாய் நோட்டுகள், காசு ஆகியவற்றை மனதில் படமாக பார்க்க வேண்டும்

வங்கியில் பணம் செலுத்துவதை போல் கற்பனை செய்யவும். நிதி தொடர்பான பத்திரிக்கையை தினமும் வாங்கி படிக்கவும். நமது நாட்டின் பெரிய பணக்காரர்களைப் பற்றி அறிந்து கொள்வது. அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள் என்பதை படித்து தெரிந்து கொள்வது அவசியம். அருகில் உள்ள தொழில் அதிபர்களை நேரில் சந்தித்து தொழில் தொடர்பான விவாதங்களில் பங்கேற்கலாம்.

இப்படி பணக்காரராக வேண்டும் என்றால் அது தொடர்பான சிந்தனை, அது தொடர்பான பேச்சு, அது தொடர்பான வேலை என்று நமது செயல் திட்டங்களை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். இது வெற்றிக்கான நடைமுறை விதி.

தன்னம்பிக்கை

”அதிக மதிப்பெண் எடுக்க விருப்பம் உள்ளவர்கள்” பள்ளி, கல்லூரிகளில் அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைக்க வேண்டும் என்றால் அதற்கு தேவையான தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். எதையும் எதிர்கொள்ள முடியும் என்கிற மன தைரியத்துடன் செயலில் இறங்க வேண்டும்.

பாடத்தில் எழும் சந்தேகங்களை அன்றாடம் ஆசிரியரிடம் கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் படிப்பது நமக்காக அல்ல. இந்த நாட்டிற்கு சேவை செய்ய என்ற புரிதலோடு படிக்க வேண்டும்.

நமக்காக படிப்பது ”பாஸ்” ஆனால் போதும் என்ற மனநிலையை ஏற்படுத்தும். நாட்டிற்காக என்றால், அதிக மதிப்பெண் எடுத்து மாவட்ட ஆட்சியராக வேண்டும். பெரிய நீதிபதியாக வேண்டும். மக்களுக்கு நிறைய சேவை செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தோடு கற்பனை செய்ய வேண்டும்.

ஒரு அம்மாவிற்கு மூன்று பிள்ளைகள் . மூன்று பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினாள். ஆனால் தன் பிள்ளைகளுக்கு வயிறாற சாப்பாடு கூட போட முடியாத வறுமையின் உச்சத்தில் வாழ்க்கை இருந்தது. அப்பொழுது இலவச பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிக்கவாவது வைக்கலாம் என்று நினைத்தாள். அதிலும் ஒரு சிக்கல், மூன்று பிள்ளைகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு கிழியாத சட்டை, டவுசர் தான் இருந்தது.

வறுமையின் உச்சத்தில் வாழ்க்கை

இருந்தாலும் அந்த தாய் சோர்ந்து போகவில்லை. இருக்கிற உடையை மாற்றி மாற்றி அணிவித்து ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு பிள்ளையை அனுப்புவாள். பள்ளிக்கூடம் சென்ற பிள்ளை வகுப்பு விட்டதும் வீட்டிற்கு வந்து, தான் கற்று வந்ததை வீட்டிலிருக்கும் மற்ற இரு சகோதரர்களுக்கும் சொல்லிக் கொடுப்பான். இப்படி மூன்று பேரும் ஒரே நேரத்தில் கல்வியை கற்றுக்கொண்டார்கள்.

அப்படி படித்தவர்களில் ஒருவன் கல்லூரி பேராசிரியர் ஆனான். இன்னொருவன் டாக்டர் ஆனான். அடுத்தவன் கிறிஸ்தவ பாதிரியார் ஆனான். மூன்று பேரும் அந்த தாய்க்கு பெருமை சேர்த்தார்கள்.

மனம் சோர்வடைந்து வேறு சிந்தனை வரும் போது எல்லாம் மீண்டும் மனதிற்கு கட்டளை பிறப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். தேர்வில் முதல் மாணவராக வந்தால் தொலைகாட்சியில் நம் புகைப்படம் வருவதை கற்பனை செய்து பாருங்கள். ஒட்டு மொத்த மீடியாவும் பேட்டி எடுக்கும. ஊரே கொண்டாடுவதை மனக்காட்சியில் பதிவு செய்யவும்.

வெற்றியை பெற்று தராமல் ஓய்வடையாது

இதனை தொடர்ந்து செய்து வந்தால் நமது ஆழ்மனம் தூங்க விடாது. வெற்றியை பெற்று தராமல் ஓய்வடையாது. வெற்றி மட்டுமே நமது லட்சியம். அதனால் வெற்றிப் பெற்ற மனிதர்களை சந்தியுங்கள். வெற்றி பெற்ற மனிதர்களிடம் உரையாடுங்கள். தொலைபேசி வாயிலாக பேசுங்கள். அவர்களுக்கு தபால் எழுதுங்கள். ஆலோசனையை பெறுங்கள்.

வெற்றியும், பரிசும் வீடு தேடி வரும் என்று காத்திருக்க வேண்டாம்.

தொடரும்…

MUST READ