தமிழக பாஜக தலைவராக யார் வருவார் என்பதை விட யார் வந்துவிடக்கூடாது என்பதில் அனைவரும் உறுதியாக உள்ளதாக டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் தேர்வு செய்ய நடைபெறும் பணிகள் குறித்தும், அண்ணாலையின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும் பத்திரிகையாளர் நிரஞ்சன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர் காணலில் கூறி இருப்பதாவது:- நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய மசோதா நேற்று அதிகாலை நிறைவேறியது. வழக்கமாக முதலில் செய்தியாளர்களிடம் என்ன செய்ய போகிறோம் என்று அதிமுக எம்.பி-க்கள் சொல்லிவிடுவார்கள். ஆனால் இம்முறை சொல்லவில்லை. வாக்கெடுப்புக்கு பின்னர் பேசிய அதிமுக எம்.பி.க்கள் கடைசி நேரத்தில் டிவிஸ்ட் செய்தோம் பார்த்தீர்களா? என்று சொன்னார்கள். இதை வைத்து பார்க்கும் அண்ணாமலையால் ஏற்பட்ட காயங்கள் இன்னும் ஆறவில்லையோ என்று தோன்றுகிறது. ஏனென்றால் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. இதற்கு முன்பாக அண்ணாமலையை நீக்க வேண்டாம், அவர் அதிமுகவையும், அதிமுக தலைவர்களையும் விமர்சிக்கக்கூடாது என்று அமித்ஷா உடனான சந்திப்பின்போது வலியுறுத்தி இருந்தனர். மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் குறித்து புகழ்ந்து பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்த விஷயத்தில் சி.வி.சண்முகம் மிகவும் ஆணித்தரமாக இருந்தார்.
பாஜக தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி விவகாரத்தில் திடீரென கவனம் செலுத்துவது ஏன் என்று பார்க்க வேண்டும். பாஜக மூத்த தலைவர்களிடம் பேசும்போது அவர்கள் சொல்வது என்ன என்றால் தமிழ்நாட்டில் இந்த முறை எக்காரணத்தை கொண்டும் பூஜியம் வாங்கிவிடக்கூடாது. கேரளாவில் அவர்களுக்கு ஒரு எம்.பி இருக்கிறார். மற்ற மாநிலங்களில் அவர்களுக்கு பிரதிநிதிகள் உள்ளனர். பாஜகவுக்கு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவமே இல்லை என்று பார்த்தால் அது தமிழ்நாடு மட்டும் தான். இதனை பாஜக மிகவும் அவமானகரமானதாக பார்க்கிறது. ஒரு வேளை சட்டப்பேரவை தேர்தலில் தற்போதுள்ள 4 இடங்களும் போய்விட்டால் அதனை தாங்கிக் கொள்ளும் நிலையில் தற்போதுள்ள பாஜக முன்னணி நிர்வாகிகள் இல்லை. பாஜக தமிழ்நாட்டில் ஒரு கணிசமான இடங்களை பெற வேண்டும் என்று உறுதியுடன் உள்ளனர்.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய தயாராக உள்ளனர். அதனுடைய அடுத்தக்கட்ட நகர்வுகளில் ஒன்றுதான் அண்ணாமலையின் பதவி மாற்றம் வரை சென்றிருக்கிறது. நாளை நிர்மலா சீதாராமன் சென்னைக்கு வர உள்ளார். அதற்கு அடுத்த நாள் தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வர உள்ளார். தற்போதைய நிலையில் பிரதமர் மோடி மட்டும்தான் அண்ணாமலையை நம்புகிறார். அதனால் அவருடை முடிவுக்காக காத்திருக்கிறார்கள். அதனால் பாஜக மாநில தலைவர் விகாரம் 6ஆம் தேதி முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம்.
தமிழக பாஜக தலைவர் பதவிக்கான போட்டியில் யார் வருவார்கள் என்பதை விட யார் வந்துவிடக்கூடாது என்பதில் தான் அதிக கவனமுடன் உள்ளனர். நயினார் நாகேந்திரன் வந்தால், அதிமுகவை அரவணைத்து செல்வார் திமுக தரப்பிலும் பெரிய அளவில் எதிர்ப்பு இருக்காது. ஆனால் எதிர்ப்பு என்ன என்றால் அவர் மாற்று கட்சியில் இருந்து வந்தவர். அவருக்கு பொறுப்பு வழங்கினால், மற்றவர்கள் ஏற்க மாட்டார்கள் என வாதம் வைக்கப்படுகிறது. மற்றொருவர் பேராசியர் ராம சீனிவாசன். தமிழிசை சொல்கிறபோது அவருக்கு ஏற்கனவே பதவி வழங்கிவிட்டது என்று எதிர்க்கிறார்கள். வானதி சீனிவாசனுக்கு தேசிய மகளிர் அணி பதவியே வழங்கிவிட்டது என்கிறார்கள். கருப்பு முருகானந்தம் பெயரை சொல்லும்போது, அவர் இன்னும் பெரிய அளவில் ஊடக வெளிச்சம் இல்லாமல் உள்ளார் என்கிறார்கள். எல். முருகனுக்கு கேட்கும்போது அவர் ஏற்கனவே இருந்துவிட்டார் என்று சொல்கிறார்கள். பொன்னார் பெயரும் அடிபடுகிறது.
அதிமுகவை பொறுத்தவரை அண்ணாமலை வேண்டாம் என்பதில் உறுதியாக உள்ளார். மீண்டும் வந்தாலும் எந்த அளவுக்கு ஒருங்கிணைந்து போக முடியும் என் சந்தேகம். அப்படி அதற்கும் அதிமுக தயாராக உள்ளது. ஆனால் அண்ணாமலைக்கு, எடப்பாடியை அதிமுக தலைவர்களுடன் மேடையை பகிர்ந்து கொள்வதிலும், அவர்களை புகழ்ந்து பேசுவதிலும் உடன்பாடு கிடையாது. அதனால்தான் அவரது பதவியும் போகிறது. ஆனால் ஒருவேளை பிரதமர் கூப்பிட்டு வலியுறுத்தும் பட்சத்தில் அண்ணாமலை தட்டமுடியாத நிலை ஏற்படலாம். பாஜகவை பொறுத்தவரை அவர்கள் ஆச்சரியப்படும் விதமாகதான் செய்வார்கள். எல். முருகன், திடீரென தலைவராக ஆக்கப்பட்டது ஆச்சரியம் அளித்தது. கே.டி.ராகவனை கூட மீண்டும் பாஜக தலைவராக நிறுத்தலாம். அவர்களுக்கு தேவை வெற்றி. அதற்காக எதையும் செய்யவும் தயாராக உள்ளனர். யாரையும் பலி கொடுக்கவும் தயாராக உள்ளனர்.