அகமதாபாத் விமான விபத்திற்கு சதி செயலோ, பறவை மோதியதோ காரணம் இல்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விபத்து ஏற்பட்டிருக்கும் என்று அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பேர் கொல்லப்பட்ட நிலையில், விபத்து நேரிட்டதற்கான பல்வேறு சாத்தியக்கூறுகள் குறித்து அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், யூடியூப் சேனல் ஒன்றுக்கு நேர் காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:- அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியதில் 241 பேர் உயிரிழந்துள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமான விஷயமாகும். இயல்பாகவே விமானப் பயணங்கள் என்பது மிகவும் பாதுகாப்பான ஒன்றாகும். இந்தியாவில் மட்டும் 21 கோடி பேர் விமானத்தில் பயணம் செய்கிறார்கள். உலகம் முழுக்க நூறு கோடிக்கும் மேற்பட்டோர் விமானப் பயணம் மேற்கொள்கின்றனர். அதனால் இந்த விமான விபத்து என்பது அரிதினும் அரிதானது ஆகும். ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்து உள்ளனர். ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். அவர் கடைசி நேரத்தில் ரிஸ்க் எடுத்ததால் உயிர் தப்பியுள்ளார். மற்றவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் இல்லை. வரலாற்றிலேயே இது ஒரு மிகப்பெரிய விபத்து. ஏர்இந்தியா விமான விபத்தில், விமான போக்குவரத்து ஆணையம், மத்திய அரசு, பாதுகாப்பு அமைப்புகள் விரைவாக செயல்பட்டு, விபத்தில் பலியானவர்களின் உடல்களை மீட்டிருக்கிறார்கள். இந்த விபத்தில் எதற்காக உயிரிழந்தோம் என தெரியாதவர்கள் தான் மருத்துவக் கல்லூரி விடுதி மாணவர்கள். 5 மாணவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். 50 பேர் வரை காயம் அடைந்திருக்கிறார்கள்.
ஏர் இந்தியா விபத்துக்கு சதி செயல் காரணமா? என்பது விசாரணைக்கு பின்னர்தான் தெரிய வரும். பறவைகள் மோதியதால் ஒரு என்ஜின் பாதிக்கப்பட்டாலும், மற்றொரு என்ஜின் மூலம் அந்த விமானம் பறக்கும். அதனால் இந்த 2 வாய்ப்புகளும் விபத்திற்கு காரணமாக இருக்க வாய்ப்பு இல்லை. ஏர் இந்தியா விமான விபத்திற்கு தொழில்நுட்ப காரணமாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. போர் விமானத்தை வடிவமைக்கக் கூடிய துறையில் பணிபுரிந்த அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன். விமானத்தில் பெட்ரோல் நிரப்பும்போதும், பயணிகளின் உடைமைகளை ஏற்றுகிறபோதும் விமானம் எடை அதிகரிக்கும். உடைமைகளை ஏற்றும்போதும் சரியான முறையில் ஏற்ற வேண்டும். ஏனெனில் ஈர்ப்பு விசையின் மையம் பின்னால் சென்றால் விமானம் பறக்காது. ஒருவேளை பின்புற டேங்கில் பெட்ரோல் அதிகமாக நிரப்பப்பட்டிருந்தாலும் விமானம் பறக்காது. விமானத்தை மேலே பறக்க வைப்பதிலும் 3 வித வேகம் உள்ளன. V1 Speed என்பது ஓடுபாதையின் இறுதியில் சென்று உயரே பறக்கும் முறையாகும். அடுத்து VR Speed. இதுதான் விமானத்தை மேலே உயர்த்துவது. அதனை சரியான வேகத்தில் இயக்கினால் தான் அவ்வளவு எடையுடன் விமானம் சரியாக மேலே எழும்பும். அதனை வேகமாக எழுப்பினால் பிரச்சினையாகும்.
ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு 3 நிமிடங்களிலேயே கீழே விழுந்துவிட்டது. விபத்து காட்சிகளை பார்க்கும்போது விமானம் நன்றாக மேலே எழும்பி விட்டது. அதனால் V1 Speed-ஐ எட்டி, VR Speed நிலைக்கு விமானம் சென்றுவிட்டது. V2 Speed என்பது இதற்கு அடுத்த நிலையாகும். ஆனால் ஏர் இந்தியா விமானத்தால் அந்த நிலையை அடைய முடியவில்லை. என்ன பிரச்சினைக்கு வாய்ப்பு உள்ளது என்றால்? விமானம் புறப்பட்ட போது மேலே எழும்பவும் இல்லை. போதிய வேகமும் கிடைக்கவில்லை. அதனால் மேலே எழும்பிய விமானம் உயரே செல்லாமல் கீழே இறங்கிவிட்டது. அதற்கு காரணம் விமானத்தில் அதிக எடையிலான உடமைகள் ஏற்றப்பட்டிருக்கலாம். அல்லது விமானத்தின் 3 பெட்ரோல் டேங்கர்களில் சரிவிகித அளவில் பெட்ரோலை நிரப்பாமல் விட்டனரா?
விபத்திற்குள்ளான போயிங் விமானம் தானியங்கி கட்டுப்பாட்டு முறையில் இயங்கக் கூடியதாகும். ஒருவேளை விமானத்தில் கருவிகள் சரியாக இயங்கா விட்டாலும், தானியங்கி முறையில் செயல்பட்டு விமானம் போதிய வேகத்தை எட்டும் வரை உயரே பறக்கவிடாது. போதிய வேகம், உயரே எழும்பிய பின்னரே விமானத்தை பறக்க அனுமதிக்கும். என்ஜின் பழுதாகியது என்றால் அதற்கு பறவை மோதியது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது சுத்திகரிக்கப்படாத எரிபொருளை பயன் படுத்துகிறபோது சரிவர எரிபொருள் செல்லாவிட்டால் என்ஜினில் பழுது ஏற்படலாம். இவை எல்லாம் பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஆகும். இதனை தாண்டி ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கடைசியாக mayday mayday mayday என்று மூன்று முறை சொல்வார்கள். இவர்கள் mayday என்று 625 அடி உயரத்தில் பறக்கும்போது சொல்கிறார். ஆனால் விமானம் 800 மீட்டர் உயரம் வரை பறந்துவிட்டுதான் கீழே இறங்க தொடங்கியுள்ளது.
விமானம் பறக்கிறபோது திடீரென சத்தம் கேட்டதாக சொல்கிறார்கள். அது என்ன சத்தம்? என்ஜின் நின்றுவிட்டதா? என்ஜின் திடீரென நின்றுவிட்டால் என்ஜின் பழுது என்று அர்த்தமாகும். என்ஜின் பழுதாகிவிட்டது வேறு வழியில்லை என்கிறபோது தான் mayday mayday mayday என்று சொல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. என்ஜின் பழுதுக்கு விமானியின் தவறு காரணமாக இருக்கலாம். அல்லது மனிதத் தவறாக இருக்கலாம். அல்லது தவறான கணிப்பாக இருக்கலாம். டேக்ஆஃப் செய்போது வேகத்தில் தவறாக இருக்கலாம். அனுபவம் மிக்க விமானியாக இருந்தாலும் வேலைப்பளு, அல்லது வேறு ஏதேனும் மனிதத் தவறுகள் காரணமாக இருக்கலாம். ஆனால் எது என்று நமக்கு தற்போது தெரியாது. கறுப்பு பெட்டி, பிளைட் டேட்டா ரெக்கார்டர், சி.பி.ஆர், காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் போன்றவை வந்தால்தான் குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து அம்சங்களும் எப்படி இருந்தன என்கிற விவரம் தெரியவரும். ஏர் இந்தியா விமான விபத்துக்கு சதி செயல்தான் காரணம் என்று தற்போதைக்கு உறுதியாக செல்ல முடியாது. பறவை மோதியதால் தான் விபத்து ஏற்பட்டது என்றும் சொல்ல முடியாது. தொழில்நுட்ப கோளாறு. அதற்கு காரணம் என்ன? மேற்சொன்ன காரணங்களில் எது என்று வந்தால் தெரியவரும்.
அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக விசாரிக்க பிரிட்டன், அமெரிக்கா போன்று உலக நாடுகளும் விசாரணைக் குழுக்களை அமைத்துள்ளனர். இது நமக்கு நெருக்கடி அளிப்பது அல்ல. நமக்கு உதவக்கூடியது தான். இந்திய விமான போக்குவரத்து ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் விமான விபத்து குறித்து விசாரணையை தொடங்கிவிட்டன. போயிங் நிறுவனம், பிரிட்டன், அமெரிக்கா போன்ற சர்வதேச அமைப்புகள் வந்து ஆய்வு மேற்கொள்வது என்பது, இனிமேலும் இதுபோன்ற விபத்துக்கள் நடந்துவிடக்கூடாது. அதற்கு காரணம் என்ன கண்டறிவார்கள். அப்போது தான் விபத்து எதனால் நிகழ்ந்தது என்பது தெரியும். விபத்திற்குள்ளான போயிங் விமானத்தில் கடந்த வாரம் நான் டெல்லியில் இருந்து சென்னை வந்தேன். போதிய வசதிகளுடனே அந்த விமானம் இருந்தது. மத்திய அரசுக்கு சொந்தமான ஏர்இந்தியா நிறுவனம், டாடா நிறுவனத்திடம் தான் வழங்கப்பட்டு உள்ளது. டாடா நிறுவனம் விமான சேவைகளை சிறப்பாகவே வழங்கி வருகிறது. ஆனால் விமான நிலையங்களில் சரக்குகளை கையாளுவதில் பிரச்சினை ஏற்பட்டிருந்தால், அதை விமான போக்குவரத்து ஆணையம், ஏர் இந்தியா நிறுவனம் போன்ற எல்லோரும் சரி செய்யத்தான் வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.