Homeசெய்திகள்கட்டுரைவிஜயின் முட்டாள்தனமான முடிவும், ரஜினியின் ஆசியும், பாஜகவின் ஆதரவும் சீமானை கோரத்தாண்டவம் ஆட வைத்திருக்கிறது

விஜயின் முட்டாள்தனமான முடிவும், ரஜினியின் ஆசியும், பாஜகவின் ஆதரவும் சீமானை கோரத்தாண்டவம் ஆட வைத்திருக்கிறது

-

- Advertisement -

பொன்னேரி G. பாலகிருஷ்ணன்

தமிழகம் இன்று மிகவும் பதட்டமாகவும், பரபரப்பாகவும் இருந்து வருகிறது. இதற்கு காரணம் தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நிலவரத்தை உற்றுநோக்கினாலே அதன் காரணம் தெளிவாக புரிந்து விடும். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக கடந்த 2023 ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் கடந்த டிசம்பர் 14ம் தேதி காலமானார். அதனால் அந்த சட்டமன்ற தொகுதியில் புதிய சட்டமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுப்பதற்காக, கடந்த ஜனவரி மாதம் 7 ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில், பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அன்று தமிழகத்தில் துவங்கிய பரபரப்பும், பதட்டமும் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. மிக முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக இந்த இடைத் தேர்தலை புறக்கணித்து இருக்கிறது. அதேபோல் மற்ற பல முக்கிய கட்சிகளும் இந்த இடைத்தேர்தலை பலவிதமான காரணங்களை சுட்டிகாட்டி தேர்தலை புறக்கணித்ததால், ஆளும் கட்சியான திமுகவை எதிர்த்து, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த இடைத் தேர்தலை பொருத்தமட்டில் தன்னுடைய கட்சி வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்பதை நன்கு புரிந்து வைத்திருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பலவிதமான யுக்திகளை பயன்படுத்துவதாக நினைத்து கொண்டு, தெருவில் குரங்காட்டி வித்தை காட்டுவது போலவும், சாலையோரங்களில் லேகியம் விற்பவர்கள் தனது தயாரிப்பான லேகியத்தை விற்பனை செய்வதற்கு எத்தனை பொய்யை வேண்டுமானாலும், எவ்வளவு மணி நேரம் வேண்டுமானாலும் பேசியே கூட்டத்தை சேர்ப்பார்கள். அதே பாணியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் சீமான் தன்னுடைய கழுத்து நரம்பு புடைக்க வாய்க்கு வந்த பொய்யை எல்லாம் பேசிக்கொண்டு திரிகிறார். குறிப்பாக, இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிகளின் நிர்வாக குறைபாடுகளை சுட்டிக்காட்டியும், முதல்வர் உட்பட அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளின் செயல்பாடுகளை விமர்சனம் செய்தும் ஓட்டு கேட்பதை விட்டுவிட்டு, சீமான் முழுக்க, முழுக்க பெரியாரின் பெயரை தமிழகத்தில் கலங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் தரம் தாழ்ந்து வீர வேஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கும் சந்திரகுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் என்பதும், தன்னுடைய கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி பெரும் வாக்குகளை விட, சுயேச்சை வேட்பாளர்கள் அனைவருடைய வாக்குகளும் சேர்த்து பார்த்தால் கூடுதலாக இருக்கும் என்பதும் சீமானுக்கு நன்றாகவே தெரியும், அவருடைய நோக்கம் இந்த இடைத்தேர்தலில் தன்னுடைய கட்சி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பது அல்ல, தனக்கு தன்னுடைய முதலாளிகள் இட்ட கட்டளையை தெளிவாக செய்து முடிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய குறிக்கோள்,
மேலும், ஒரு முக்கிய தகவலை இந்த நேரத்தில் சொல்ல வேண்டியது உள்ளது. இந்த திராவிட கொள்கையை ஒழிக்க ஒரு காலத்தில் காங்கிரஸால் நியமிக்கப்பட்ட ஒரு நபர்தான் பெரியார். ஆனால், அவரே இந்த திராவிடக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு பின்னர் இந்த திராவிடக் கொள்கையின் ஒரு அடையாளமாக மாறினார். என்பது தான் வரலாறு, இதையும் சீமான் புரிந்து கொள்ள வேண்டும்.

திராவிடம் என்றால், திமுக, அதிமுக, மதிமுக தேமுதிக, தவெக போன்ற கட்சிகளையும், பெரியார், அண்ணா, கலைஞர், எம்ஜி ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களையும் அடையாளப்படுத்தக் கூடிய ஒரு வார்த்தை அல்ல, திராவிடக் கொள்கை என்பது ஒரு நூற்றாண்டுக்கு முன்பே அய்யா அயோத்திதாசரில் துவங்கி டாக்டர் நாயர், தியாகராயர், நடேசனார், ஆகியோரால் உருவாக்கப்பட்டு சுமந்து வந்து தற்போது புதியதாக கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய் கட்சியான தவெக வரை பயணிக்கக் கூடிய, ஒரு சுயநலம் இல்லாத சமதர்ம சமத்துவம் பேசும் ஒரு கோட்பாடு, இப்படிப்பட்ட திராவிட கொள்கையை திராவிடத்தில் பயணித்த சில தலைவர்களின் சில குறைகளை சுட்டிக்காட்டுவதாக கூறிக்கொண்டும், சில கட்சிகளின் ஆட்சிகளை விமர்சிப்பதாக கூறிக்கொண்டும், ஒட்டுமொத்த திராவிட கொள்கையை சிதைக்க நினைக்கும் இந்த சீமான், கிராமப்புறங்களில் யார் காசு கொடுத்து குடிப்பதற்கு வாங்கி கொடுத்தாலும், அதில் வாங்கி குடித்துவிட்டு, குறிப்பிட்ட நபர்களை குடிபோதையில், சாலையில் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டு தரக்குறைவாக பேசிக்கொண்டு இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களை தானே ரவுடி என்றும் சொல்லிக் கொள்வார்கள். இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது சீமான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

மேலும், திமுகவையும் அதன் கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களையும் நான் மட்டும் தான் மிரட்டி கொண்டிருக்கிறேன். அவர் என்னை பார்த்துத்தான் பயந்து கொண்டிருக்கிறார், கூட்டணியில் இருக்கக்கூடிய எனது அண்ணன் திருமாவளவன் அவர்கள் ஸ்டாலினிடம் மிகவும் பதுங்கி, பம்முகிறார் என்றும் அவர் கட்சிக் கொடிகளை காவல்துறையினர் பல இடங்களில் ஏற்ற விடுவதில்லை என்றும், அவர் ஏன் இப்படி பயந்து போய் இருக்கிறார் என்றும் வாய் சவடால் விடுகிறார். ஆனால் அந்த சீமானுக்கு தெரியாது , தரமான தலைவர்களின் செய்கைகளும் தரமாக இருக்கும் என்பது குடிகாரன் போல் குப்பாடு போடுவதெல்லாம் ஒரு தலைவனின் செயல் இல்லை, எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்கள் 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலேயே அவர் தன்னை யார் என்று அடையாளப்படுத்தி காட்டி இருக்கிறார். தற்போது கூட ஆதவ் அர்ஜுனாவை தனது அலுவலகம் வரவழைத்து தரமான சம்பவம் செய்திருக்கிறார். அதன் அர்த்தம் என்ன என்பது திமுக தலைமைக்கு மட்டுமல்ல, அரசியலை நன்கு புரிந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் புரியும். ஒரு கட்சியின் தலைவர் என்றால் கனிவு, பணிவு, துணிவு அனைத்தும் ஒருங்கே பெற்றிருக்க வேண்டும். இவை அனைத்தும் சீமானிடம் மருந்துக்கு கூட இல்லை என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே புரிந்து வருகிறது. ஆகவே, தமிழக மக்கள் மோடி வித்தை காட்டிக் கொண்டிருக்கும் சீமானை அடையாளம் கண்டு மிக விரைவில் விரட்டி அடிப்பார்கள் என்பது நிச்சயம்.

சீமானின் நோக்கம் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது இல்லை, இதை அந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் வாக்காளர்கள் மட்டுமல்ல, தமிழக மக்களுக்கும் தெளிவாக புரிகிறது. மேலும், அவர் இந்த இடைத்தேர்தலை பயன்படுத்தி பாஜகவினரின் கை பார்வையாக செயல்பட்டு, தமிழகத்தில் இருக்கும் இளைஞர்களை மூளை சலவை செய்து தவறான வழியில் பயணிக்க முயற்சி செய்கிறார் என்பதும் மக்களுக்கு தெரிகிறது. அதற்கு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை ஒரு பகடைக்காயாக பயன்படுத்திக் கொள்கிறார் அவ்வளவு தான்.

தமிழகத்தில், 2008 ம் ஆண்டு சட்டமன்றத் தொகுதிகளை வரையறை செய்த போது புதிதாக உருவாக்கப்பட்டது தான் இந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி, இந்த தொகுதியில் 2011 ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாத நாம் தமிழர் கட்சி, 2016 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மிக குறைந்த வாக்குகளைப் பெற்றது. அதேபோன்று 2021 ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 10 ஆயிரம் வாக்குகளும், 2013 ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் 11 ஆயிரம் வாக்குகளும் பெற்றிருந்தார். இந்த சூழலில் தற்போது நடைபெறக்கூடிய இடைத்தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உட்பட தற்போது புதியதாக கட்சி துவக்கிய நடிகர் விஜயின் கட்சியான த.வெ.க கூட வேட்பாளர்களை நிறுத்தாத சூழலில் சீமான் கட்சி போட்டியிடுவது தன்னுடைய சதூர்யம் என கூறிக்கொண்டு, இந்த தேர்தலுக்கு சிறிதும் சம்பந்தமில்லாத பல செயல்களை அவர் செய்து கொண்டிருக்கிறார். அவருடைய செயல்கள் அவர் ஒரு கூலிப்படை என்ற எண்ணத்தை மக்களுக்கு பிரதிபலிக்கிறது.

இந்த இடைத்தேர்தலை பொருத்தமட்டில், இந்த தொகுதியில் 2016 ல் தனித்துப் போட்டியிட்ட பாஜக 5 ஆயிரம் ஓட்டுகள் வரை பெற்றிருந்தது. அந்த கட்சியின்னுடைய ஓட்டுகள் மட்டும் இல்லாமல், பலவிதமான வகையில் ஆதரவுகளும் நாம் தமிழர் கட்சிக்கு போய் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த கட்சியின் சார்பில் யாரும் போட்டியிடவில்லை. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலில் போட்டியிடாதது தவறு, அதைவிட பெரிய தவறான முடிவை எடுத்திருப்பது நடிகர் விஜய் தான், அவர் கட்சி இந்த தேர்தலில் போட்டியிட்டு இருந்தால், திமுகவின் எதிர்ப்பு ஓட்டுகளான அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் ஓட்டுகளான கிட்டத்தட்ட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை விஜய் பெற்றிருப்பார். அவர் கட்சி இந்த வாக்குகளை பெறுவதால் வெற்றி பெற முடியாது என்றாலும், விஜய் கட்சிக்கு ஒரு சட்டமன்றத் தொகுதியில் இவ்வளவு வாக்குகள் உள்ளது என்று தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கட்சியினரும், பொதுமக்களும் அதிர்ச்சியுடன் பார்த்திருப்பார்கள். மேலும், தமிழகம் முழுவதும் விஜய் கட்சிக்கு பரவலாக ஒரு கூடுதல் பலம் உருவாகியிருக்கும். ஆனால், விஜய் தனது கட்சியின் சார்பில் இந்த இடைத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தாதது, சீமானுக்கு பெருத்த மகிழ்ச்சியாகவே உள்ளது. அந்த இருமாப்பில் தான் சீமான், ரஜினியின் ஆசியுடனும், பாஜகவின் ஆதரவுடன் ஆனந்த கூத்து ஆடுவதாக நினைத்துக் கொண்டு, கோரத்தாண்டவம் ஆடி கொண்டிருக்கிறார். சீமானின் இந்த தரம் தாழ்ந்த செயல்கள் தமிழக மக்களுக்கு புரியாமல் இல்லை, என்பதை சீமான் புரிந்து கொள்ள வேண்டும்.

MUST READ