- Advertisement -
சென்னையில் உள்ள முக்கியக் கடற்கரைகளுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் இலவச ‘வை-பை’ வசதியை வழங்க சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் மற்றும் திருவொற்றியூர் ஆகிய கடற்கரைப் பகுதிகளில் மொத்தம் 107 புதிய வை-பை ‘ஸ்மார்ட் தூண்கள்’ நிறுவப்பட உள்ளன.

தினமும் 45 நிமிடங்கள் இலவச இணைய சேவை:
இந்த வசதி செயல்பாட்டிற்கு வந்த பிறகு, பொதுமக்கள் தினமும் 45 நிமிடங்கள் இலவசமாக இணைய சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். பல்வேறு நிறுவனங்களின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) நிதியின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
32 இடங்களில் பயன்பாட்டிற்கு வந்த வைஃபை:
அந்த வகையில் இன்று சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் ஆகிய கடற்கரைகளில் 32 இடங்களில் இலவச ‘வைஃபை’ வசதி மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. மெரினா கடற்கரையில் உழைப்பாளர்கள் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 27 இடங்களிலும், பெசன்ட் நகர் கடற்கரையில் 5 இடங்களிலும் இலவச ‘வைஃபை’ வசதி பயன்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
