பிரபல நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக 85 வயதில் இன்று காலமானார். தனது ஆசை என்னவென்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் இன்று அவர் இறந்துவிட்டதால் அவருடைய கடைசி ஆசை நிறைவேறாத ஆசையாகிவிட்டது. அது என்ன என்று பார்க்கலாம்.
சிவகங்கை அருகே உள்ள கொல்லங்குடியைச் சேர்ந்தவர் கருப்பாயி. நாட்டுப்புற பாடகியான இவர் சிறுவயது முதலே நாட்டுப்புற பாடல்களை பாடி பிரபலமானார். வயல் வேலைக்குச் செல்வது முதல் கிராமிய கலை நிகழ்ச்சிகளிலும் நாட்டுப்புற பாடல்களை பாடி வந்த இவரை, “ஆண்பாவம்” திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க வைத்தார் நடிகர் பாண்டியராஜன்.
ஆண்பாவம்” படத்தில், விகே ராமசாமிக்கு அம்மாவாக, பாண்டியராஜனுக்கு பாட்டியாக நடித்தார் கொல்லங்குடி கருப்பாயி. இந்தப் படம் ஹிட் அடிக்க, “கோபாலா கோபாலா”, “ஆயிசு நூறு” போன்ற பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்தாலும், மேடைகளில் பாடி வந்தார்.
1993ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கரங்களால் கலைமாமணி விருது வாங்கிய பாடகி கொல்லங்குடி கருப்பாயி,
ஜெயலலிதாவிடம் வைத்த கோரிக்கையால் கொல்லங்குடியில் உள்ள அரசு பள்ளிக்கு பட்டா கிடைத்தது.
காலப்போக்கில் பாடுவதற்கு கூட வாய்ப்புகள் கிடைக்காமல் போகவே, வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வந்தார். கருப்பாயி, கடைசியாக இயக்குநர் சசிக்குமார் இயக்கிய காரி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தனது கணவர், மகள் இறந்த நிலையில் கொல்லங்குடியில் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். சில ஆண்டுகள் முன், இடிந்து விழும் நிலையில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில், அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்குக் கூட சிரமப்படுவதாகத் தெரிவித்து, கருப்பாயி பாட்டி கொடுத்த பேட்டி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இதனை அறிந்த நடிகர் விஷால் அவருக்கு உதவினார்.
விஷால் உதவியால் பாடகி கருப்பாயி நடிகர் சங்கத்திலும் உறுப்பினரானார். இதனை ஒரு பேட்டியில் கூறியுள்ளார் கருப்பாயி. ஆண் பாவம் படத்திற்கு பிறகு நிறைய படங்களில் நடித்தேன். ஆனால் என் கையில் ஆயிரம் ரூபாயை கொடுத்து அனுப்பிவிடுவார்கள். சம்பளம் இல்லை மீதி சம்பளத்தை எனக்கு அனுப்புவதாகவும் சொல்வார்கள். நானும் சம்பளம் இன்னிக்கு வரும் , நாளைக்கு வரும் என எதிர்பார்த்து காத்திருப்பேன். ஆனால் அது வரவே வராது.
எனக்கு பிள்ளை இல்லை என்ற குறையை போக்கியது நடிகர் பாண்டியராஜன்தான். பாண்டியராஜன் என் மகன் நான் சென்னைக்கு போனால் என்னை பார்க்காமல் இருக்க மாட்டார். நான் சினிமாவில் நடித்தாலும் என்னை நடிகர் சங்கத்தில் சேர்த்துக்கவே இல்லை. பிறகு எனது பேரன் விஷால்தான் எனக்கு நடிகர் சங்க உறுப்பினராக்கி அடையாள அட்டையை கொடுத்தார்.
நான் சாப்பிடும் சாப்பாடு பேரன் விஷால் கொடுக்கும் பணம்தான். என்னை வாழ வைக்கும் சாமி அவர். விஷால் கல்யாணத்துக்கு போகணும், அதுவரை என் உசிரு இருக்கணும். அது போல் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு போகணும்னு ஆசை, அது நிறைவேறுமா என கருப்பாயி உருக்கமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
கடந்த 2021ம் ஆண்டு விபத்து ஒன்றில் சிக்கிப் படுகாயமடைந்த அவர், அதிலிருந்து மீண்டு வந்த நிலையில், இன்று வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். நடிகர் விஷால் கல்யாணம் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அதனை பார்க்காமலேயே போய் விட்டார் கொல்லங்குடி கருப்பாயி.