ஜெயிலர் 2 படத்தில் பிரபல வில்லி நடிகை இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இமாலய வெற்றி பெற்றது. அதேசமயம் நெல்சன் – ரஜினி- அனிருத் காம்போ பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. அதன்பிறகு இந்த கூட்டணி மீண்டும் ஜெயிலர் 2 படத்தில் இணைந்திருக்கிறது. இந்த படத்தை முதல் பாகத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் எனவும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இப்படம் திரைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் பல நட்சத்திரங்கள் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ஏற்கனவே மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் ‘ஜெயிலர்’ முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகத்திலும் நடிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இது தவிர சுராஜ் வெஞ்சரமூடு இப்படத்தில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் கசிந்தது. அதன் பின்னர் ஜெயிலர் 2 படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா இணைவார் எனவும் பேச்சுகள் அடிபடுகிறது. இந்நிலையில் பிரபல நடிகை பூர்ணா (ஷாம்னா) ‘ஜெயிலர் 2’ படத்தில் இணைந்திருப்பதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே நடிகை பூர்ணா, தகராறு, கொடிவீரன், தசரா போன்ற படங்களில் வில்லியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையினால் ‘ஜெயிலர் 2’ படத்தில் இவருடைய கதாபாத்திரம் என்ன மாதிரியான கதாபாத்திரமாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.