அருள்நிதி நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் கழுவேத்தி மூர்க்கன். இந்த படத்தை ராட்சசி படத்தை இயக்கிய கௌதம ராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் தயாரித்திருக்கிறது மற்றும் டி இமான் இசையமைத்திருக்கிறார்.
கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தில் அருள்நிதியுடன் துசாரா விஜயன், சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனிஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் கிராமத்தில் உள்ள சாதிகள் குறித்தும் சாதி அரசியல் குறித்தும் பேசியுள்ளது.
மூர்க்கசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அருள் நிதி பெயருக்கேற்ற வகையில் கடும் கோபக்காரனாகவும் பூமிநாதன் என்ற சந்தோஷ் பிரதாப் பொறுப்பானவனாகவும் நடித்துள்ளனர். இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக பழகி வருகின்றனர்.
அருள்நிதி எல்லா பிரச்சனைகளிலும் தனது நண்பன் சந்தோஷ் பிரதாப்பிற்கு உறுதுணையாக நிற்கிறார்.
சந்தோஷ் பிரதாப், சாதிகளை அடிப்படையாகக் கொண்டு ஆதாயம் தேடும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக நிற்கிறார். இவ்வாறாக நகர்ந்து கொண்டிருக்கும் இந்த படத்தின் ஒரு கட்டத்தில் சந்தோஷ் பிரதாப் கொல்லப்படுகிறார்.
இந்தக் கொலையில் அரசியல் கட்சிகள் திட்டமிட்டு அருள்நிதியை சிக்க வைக்கிறது.
அதன் பிறகு அருள்நிதி இந்த கொலையை செய்தாரா, இல்லையா அதன் பின் இருக்கும் சூழ்ச்சி என்ன என்பதுதான் மீதமுள்ள கதை.
அருள்நிதி இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார்.
சந்தோஷ் பிரதாப் மற்றும் மற்ற நடிகர்கள் அவரவர் கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளனர். டி இமானின் இசை இந்த படத்திற்கு பலமளித்துள்ளது. இந்தப் படத்தின் முதல் பாதியில் தேவையற்ற சில காட்சிகள் இருந்தாலும், இரண்டாம் பாதி ரசிகர்களிடைய சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்தில் கல்வியின் முக்கியத்துவத்தை இப்படம் எடுத்துரைக்கிறது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை அடிப்படையாக வைத்து இயக்குனர் இந்தப் படத்தைக் கொடுத்துள்ளார். ஒரு முறை கட்டாயம் பார்க்கலாம்!