விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT (the greatest of all time) படத்தில் நடித்துவருகிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இப்படத்தில் சினேகா, லைலா, பிரபுதேவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் 90களில் தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருந்த பிரசாந்த் இப்படத்தில் நடிக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்த இவர் தன் நடிப்பால் பல ரசிகர்களைக் கவர்ந்து முன்னணி நடிகராக மாறினார். இவருடைய படங்களில் பாடல்கள் பெரிதும் பேசப்படும். அந்த வகையில் பிரசாந்த் நடித்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைப் பெற்று தியேட்டருக்கு நல்ல கூட்டத்தை இழுத்தது.2000ம் ஆண்டு வரை தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்து வந்தவர் அதற்கு பின்னர் வெகுவாக படங்கள் நடிப்பதை குறைத்துக் கொண்டார். மேலும் சில தெலுங்குப் படங்களில் ஹீரோவுக்கு அண்ணனாக, துணைக் கதாபாத்திரத்தில் நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவரது நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள “அந்தகன்” திரைப்படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அடுத்ததாக இவரை GOAT படத்தில் தான் நாம் திரையரங்குகளில் பார்க்க உள்ளோம். இந்நிலையில் நடிகர் விஜய், டி ராஜேந்தர் ஆகியோர் சில நாட்களுக்கு முன்னால் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள். தற்போது அதைத்தொடர்ந்து நடிகர் பிரசாந்தும் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 1000 குடும்பத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார். ராமநாதபுரம் பரமக்குடி பகுதியைச் சார்ந்த தன்னுடைய ரசிகர் மன்ற உறுப்பினர்களின் உதவியுடன் இந்த நிவாரண உதவிகளை பிரசாந்த் வழங்கி இருக்கிறார்.
- Advertisement -