இட்லி கடை படத்தின் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனுஷின் 52 வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘இட்லி கடை’. இந்த படம் இன்று (அக்டோபர் 1) ஆயுத பூஜையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகிறது. இதனை தனுஷ் தானே இயக்கி, நடித்துள்ளார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருக்கிறார். கிரண் கௌசிக் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிக்க நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் ராஜ்கிரண், சத்யராஜ், சமுத்திரகனி, பார்த்திபன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இதன் ட்ரெய்லரை பார்க்கும்போது இந்த படம் ‘ராயன்’ படத்தை போல் இல்லாமல் நல்ல ஒரு பீல் குட் படமாக உருவாகியிருக்கும் போல் தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் படத்தை பார்த்த சிலர் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் மற்றும் ஆந்திராவில் காலை 7 மணி முதல் திரையிடப்பட இருந்த இப்படத்தின் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இதன் முதல் காட்சி காலை 9 மணி முதல் தொடங்குகிறது. இந்த படத்தைக் காண ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு 7 மணி காட்சி ரத்து செய்யப்பட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் 9 மணிக்கு இந்த படத்தை கொண்டாட ரசிகர்கள் தயாராகிவிட்டனர்.