அரசியலுக்கு வர விருப்பம் இல்லை என்றும், அதே சமயம் கடைசி வரை மக்கள் சேவை செய்ய ஆசைப்படுவதாகவும் நடிகர் கேபிஒய் பாலா தெரிவித்துள்ளார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர்கள் ஏராளம். நடிகர் சிவகார்த்திகேயன், புகழ், இந்த வரிசையில் கேபிஒய் பாலாவும் ஒருவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பாலா மற்றும் புகழ் இருவருமே மக்களின் கவனத்தை ஈர்த்தனர். குறிப்பாக டைமிங் மற்றும் ரைமிங்கில் நகைச்சுவை செய்யும் பாலாவுக்கு ரசிகர்கள் ஏராளம். இதைத் தொடர்ந்து தற்போது திரைப்படங்களிலும் அதிகம் நடித்து வருகிறார்.
சினிமாவைத் தாண்டி நடிகர் பாலா, பொதுமக்களுக்கு ஏராளமான உதவிகளும் செய்து வருகிறார். முதலில் ஈரோடு அருகே உள்ள மலைக்கிராம மக்கள் ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் அவதிப்படுவதை அறிந்த அவர், இலவசமாக அவர்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்கினார். அடுத்து சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது, கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்கினார். மேலும், செங்கல்பட்டு அருகே மேல்மருவத்தூர் பகுதி அருகே 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளை நன்கொடையாக வழங்கினார்.
இந்நிலையில், மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய பாலா, எநக்கு அரசியல் மற்றும் பதவி ஆசையெல்லாம் இல்லை. இது அன்பின் ஏக்கமே தவிர, அரசியல் நோக்கம் கிடையாது என்று தெரிவித்துள்ளார். மேலும், என்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து கொண்டே இருப்பேன். மக்களின் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.