அமரன், மெய்யழகன், மகாராஜா, வாழை, விடுதலை-2 படங்களுக்கு விருதுகள் குவியுமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
இந்தியத் திரை உலகில் சிறந்து விளங்கும் சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக, ஒன்றிய அரசு ஆண்டுதோறும் மிக உயரிய தேசியத் திரைப்பட விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 72-ஆவது தேசியத் திரைப்பட விருதுகள் தலைநகர் டெல்லியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருதுப் பட்டியலில் தமிழ் சினிமா தனி முத்திரை பதித்து வரும் நிலையில், இந்த ஆண்டும் தங்களுக்குப் பிடித்தமான படங்களுக்கும் கலைஞர்களுக்கும் விருதுகள் கிடைக்கப் போவது யார் என்ற பெரும் எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்தத் திரை உலகினரும் ரசிகர்களும் காத்துக் கொண்டுள்ளனர்.
![]()
தமிழ் சினிமா ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு!
திரைத்துறை வட்டாரங்கள் மற்றும் சினிமா விமர்சகர்களின் கணிப்புப்படி, இந்த 72-ஆவது தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிப்பு விழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்படங்கள் அசுர ஆதிக்கம் செலுத்தும் எனப் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்திய அளவில் கவனம் ஈர்த்த பல தமிழ்த் திரைப்படங்கள் இந்த முறை இறுதிப் பட்டியலில் இடம்பிடிக்கப் போட்டிப் போடுகின்றன.
விருதுப் போட்டியில் முன்னணியில் இருக்கும் தமிழ்ப் படங்கள்
கதைக்களம், இயக்கம், நடிப்பு எனப் பல்வேறு பிரிவுகளில் தேசிய விருதுகளைக் அள்ள வாய்ப்புள்ள முக்கியத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் இதோ,
அமரன்: சிவகார்த்திகேயன் நடிப்பில் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறாக வெளியாகி, தேசபக்தியையும் உணர்வுகளையும் கடத்திய இத்திரைப்படத்திற்கு முக்கியப் பிரிவுகளில் விருது கிடைக்கப் பிரகாசமான வாய்ப்புள்ளது.
மெய்யழகன் & மகாராஜா: கார்த்தி – அரவிந்த்சாமி நடிப்பில் எளிய மனிதர்களின் உணர்வுகளைப் பேசிய ‘மெய்யழகன்’ திரைப்படமும், விஜய் சேதுபதியின் அசாத்திய நடிப்பில் வெளியான 50-ஆவது திரைப்படமான ‘மகாராஜா’வும் சிறந்த நடிகர் மற்றும் திரைக்கதை பிரிவுகளில் பலத்த போட்டியில் உள்ளன.
வாழை & விடுதலை 2: மாரி செல்வராஜின் உணர்வுப்பூர்வமான படைப்பான ‘வாழை’ மற்றும் இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியாகிப் பாராட்டுகளைப் பெற்ற ‘விடுதலை 2’ ஆகிய படங்கள் சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த திரைப்படப் பிரிவுகளில் நடுவர் குழுவின் கவனத்தை ஈர்க்கும் என நம்பப்படுகிறது.

தங்கலான் & ஜமா: விக்ரமின் மிரட்டலான நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கிய ‘தங்கலான்’ மற்றும் பாரி இளவழகனின் கைவண்ணத்தில் நாடகக் கலைஞர்களின் வாழ்வியலைப் பேசிய ‘ஜமா’ ஆகிய படங்களும் விருதுப் பட்டியலில் இடம்பிடிக்கக் கடுமையான போட்டியில் உள்ளன.
லப்பர் பந்து & நந்தன்: ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடிப்பில் கிரிக்கெட் மற்றும் வாழ்வியலை மையமாகக் கொண்டு பெரும் வரவேற்பைப் பெற்ற ‘லப்பர் பந்து’ மற்றும் சசிகுமாரின் மாறுபட்ட நடிப்பில் வெளியான ‘நந்தன்’ ஆகிய திரைப்படங்களும் இந்த ரேஸில் முன்னணியில் இருக்கின்றன.
ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள நடுவர் குழுவினர் (Jury Member), பல்வேறு மொழிகளில் இருந்து விண்ணப்பிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான திரைப்படங்களை முறைப்படி ஆய்வு செய்து இந்த இறுதிப் பட்டியலைத் தயார் செய்துள்ளனர்.இம்முறை தமிழ் சினிமா தேசிய அரங்கில் மாபெரும் சாதனை படைக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீ-என்ட்ரி: புதிய படத்துடன் களமிறங்கும் இயக்குநர் சுசி கணேசன்!
