நடிகரும், அரசியல் தலைவருமான விஜயகாந்த் உயிரிழந்துள்ள நிலையில், அவரது கொலைக்கு காரணமான நபர்களை கண்டுபிடியுங்கள் என்று பிரபல இயக்குநர் உதயநிதிக்கு வேண்டுகோள் விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தேமுதிக நிறுவனத் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகாந்த் இல்லத்திலும், அலுவலகத்திலும் உள்ள தேமுதிக கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “நிமோனியா (நுரையீரல் அழற்சி) காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந் காலமானார்” என்று தெரிவிக்கப்பட்டது. விஜயகாந்த் சில நாட்களுக்கு உடல் நல பிரச்சனைகள் காரணமாக அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், அவருக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும். மேலும், அவருக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் தொடர்ந்து இருந்து வந்தன.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் திடீரென காலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் அல்போன்ஸ் புத்ரனின் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், விஜயகாந்த்தை கொலை செய்தவர்களையும், ஜெயலலிதாவை கொலை செய்தவர்களையும் உதயநிதி கண்டுபிடிக்க வேண்டும் என அவர் பதிவிட்டிருந்தார். இந்த கொலையாளிகளை கண்டுபிடிக்காவிட்டால், அடுத்த குறி உங்களுக்குதான் வைப்பர்கள் என சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இப்பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் அவரை வசைபாடி கமெண்ட் செய்து வருகின்றனர்.