தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் நான்கு மாதங்கள் கழித்து வாடகை தாயின் மூலம் இரட்டை ஆண் மகன்களை பெற்றெடுத்தனர். இதற்கிடையில் தான் மிக பிரம்மாண்டமாகவும் கோலாகலமாகவும் நடைபெற்ற இவர்களின் திருமண வீடியோவை ஆவணப்படமாக வெளியிட திட்டமிட்ட நிலையில் அதனை நெட்பிளிக்ஸ் நிறுவனமும் கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கியதாக சொல்லப்படுகிறது. எனவே வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி நயன்தாராவின் திருமண ஆவணப்படம் NAYANTHARA : BEYOND THE FAIRY TALE என்ற தலைப்பில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது. இதற்கான அறிவிப்பும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி ட்ரைலரும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நடிகை நயன்தாரா, நடிகர் தனுஷ் மீது குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளார். அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான நானும் ரெளடி தான் என்ற படத்தின் படப்பிடிப்பின் போது தான் நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. எனவே அந்த படம் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவருக்கும் புது வாழ்க்கையை தந்ததாக இருவருமே கூறி வருகின்றனர். எனவே விரைவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ள நயன்தாராவின் ஆவணப்படத்தில் நானும் ரெளடி தான் படப்பிடிப்பு தொடர்பான காட்சிகளை தனது ஆவணப்படத்தில் இணைக்க வேண்டும் என்பதற்காக நானும் ரெளடி தான் படத்தின் தயாரிப்பாளரான தனுஷிடம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே அனுமதி கேட்டிருந்தார் நயன்தாரா.
#SpreadLove and Only Love 🫶🏻 pic.twitter.com/6I1rrPXyOg
— Nayanthara✨ (@NayantharaU) November 16, 2024
ஆனால் தனுஷ் இதுவரை அதற்கு அனுமதி தரவில்லை எனவும் அவரது பழிவாங்கும் நடவடிக்கையால், தானும் தன் கணவர் விக்னேஷ் சிவனும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனுஷ் மீது குற்றம் சாட்டியுள்ளார். தனுஷின் இந்த செயலால் நானும் ரெளடி தான் பட காட்சிகள் இல்லாமலேயே ஆவணப்படம் வெளியாகப் போகிறது எனவும் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார் நயன்தாரா. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் NAYANTHARA : BEYOND THE FAIRY TALE ட்ரெய்லரில் நானும் ரெளடி தான் பாடல் வரிகள் 3 வினாடிகள் பயன்படுத்தப்பட்டிருந்த காரணத்தால் 10 கோடி ரூபாய் வரை அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பியதனால் அதனை சுட்டிக்காட்டி நடிகை நயன்தாரா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.