கடந்த 2007 இல் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பின் போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கும் அமீருக்கும் இடையே ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருந்தது. ஞானவேல் ராஜா அமீர் பொய் கணக்குகள் காட்டி மோசடி செய்து விட்டார் என்று கூறிவந்த நிலையில் இதற்கு அமீர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஞானவேல் ராஜா பேட்டி ஒன்றில் இயக்குனர் அமீரை அவமானப்படுத்துவது போல் பேசி இருக்கிறார். இதனால் மனமுடைந்த அமீர் தன் தரப்பில் இருக்கும் நியாயத்தை எடுத்துக் கூறினார். இவருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன், கரு. பழனியப்பன், பாரதிராஜா உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்து வந்தனர். ஆனாலும் அமீரை ஓயாது துரத்தி வருகின்ற இந்த பருத்திவீரன் சர்ச்சை தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளரான தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனுக்கு அமீர் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் அவர்
“சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்ட மக்கள் துயரத்தில் இருந்து மீள முடியாத இந்த சமயத்தில் பருத்தி வீரன் தொடர்பான இது போன்ற கடிதத்தை வெளியிடுவதில் நான் மிகவும் வருந்துகிறேன். 17 ஆண்டுகளுக்குப் பிறகு பருத்திவீரன் வெளியீட்டில் நடந்த உண்மைகளை இன்றைய சூழலில் சொல்லாமல் கடந்து விட்டால் நான் உண்மைகளை மறைப்பதாக ஆகிவிடும். அதனால் ஊடக நண்பர்களுக்கும் எனக்கு ஆதரவளித்தவர்களுக்கும் சிவசக்தி பாண்டியனாகிய உங்களுக்கும் உண்மை நிலைகளை தெரிவிக்க மட்டுமே இந்த கடிதம். வேறு எந்த நோக்கத்திற்காகவும் இல்லை.
17 ஆண்டுகளுக்குப் பிறகு தாங்கள் பொதுவெளியில் பருத்திவீரன் திரைப்பட வெளியீட்டு தொடர்பான பிரச்சனையில் தாங்கள் தலைமை ஏற்றீர்கள் என்பதை ஒப்புக் கொண்டதை நான் மனமார வரவேற்கிறேன். என் மீதும் என் தொழில் மீதும் நீங்கள் வைத்திருக்கும் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் நன்றி கூறுகிறேன். சமீபத்தில் தான் தங்களின் நேர்காணலை பார்த்தேன் தங்கள் பேசி இருந்த விஷயங்களில் உள்ள முரண்பாடுகளை அல்லது சொல்ல மறந்த சில உண்மைகளை தங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். திரைப்படங்களில் விவகாரம் ஏதேனும் ஏற்பட்டால் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்தால் சுமூகமாக பேசி முடித்து விடுவோம் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். அந்த வகையில் TEAMWORK PRODUCTION HOUSE என்ற நிறுவனத்தின் சார்பில் சென்சார் செய்யப்பட்ட பருத்திவீரன் திரைப்படத்தை இன்னொருவரின் பெயருக்கு மாற்றிக் கொடுக்கக்கூடிய சூழ்நிலை தங்களுக்கு உருவானதா? அல்லது உருவாக்கப்பட்டதா? என்பதை அந்த நேர்காணலில் நீங்கள் தெளிவாக விளக்கவில்லை.
TEAMWORK PRODUCTION HOUSE நிறுவனத்தின் பெயரில் தணிக்கை செய்யப்பட்ட பருத்திவீரன் படத்தை அரசியல் அழுத்தம் காரணத்தினால் மட்டுமே ஞானவேல் ராஜா அவர்களுக்கு மாற்றிக் கொடுக்கக்கூடிய சூழல் ஏற்பட்டதாக அன்றைய காலகட்டத்தில் என்னிடம் கூறினீர்கள். நீங்கள் சொல்வது உண்மையா?பொய்யா? என்பதை அறிய முடியாத சூழல் எனக்கு அப்போது இருந்தது.
சங்க நிர்வாகிகள் சொன்னதை நம்பியே பருத்திவீரன் திரைப்படத்தை இன்னொருவரின் நிறுவனத்திற்கு உரிமை மாற்றம் செய்ய ஒப்புக்கொண்டேன். அதைத் தொடர்ந்து பின் ஒரு நாளில் அன்றைய முதல்வர் அவர்களை சந்தித்து இது தொடர்பான பிரச்சனையை எடுத்துக் கூறும் போது தனக்கும் இந்த நிகழ்விற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கூறிய பின் தான் நான் திட்டமிடப்பட்டு ஏமாற்றப்பட்டு இருப்பதை உணர்ந்தேன் என்பதை இந்த சமயத்தில் நான் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் பருத்திவீரன் திரைப்படம் சம்பந்தமாக அமீர் நீதிமன்றத்தை நாடி இருப்பது தேவையில்லாதது .குடும்பமாக இருக்க வேண்டிய நாம் தயாரிப்பாளர் சங்கத்திலேயே இதனை தீர்த்திருக்கலாம் என்று நீங்கள் அந்த நேர்காணலில் கூறியிருந்தது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் 2006 முதல் 2008 காலகட்டத்தில் செயலாளராக இருந்த திரு. சிவசக்தி பாண்டியன் ஆகிய உங்களுக்கு மீண்டும் ஒரு விஷயத்தை நினைவு படுத்த விரும்புகிறேன். அப்போது உள்ள காலகட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் கையெழுத்து போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தை STUDIO GREEN நிறுவனம் மீறி விட்டது, இனிமேல் எங்களால் எதுவும் செய்ய முடியாது, ஞானவேல் எங்களுக்கு கட்டுப்பட மறுக்கிறார் என்று நீங்களும் அப்போதைய தலைவர் மறைந்த திரு. ராமையா நாராயணன் அவர்களும் பலமுறை என்னிடம் சொன்னதை நீங்கள் மறந்து விட்டீர்கள் என நினைக்கிறேன்.
பருத்திவீரன் திரைப்படம் வெளியான பின் உங்களின் முன்னிலையில் போடப்பட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொடுங்கள் என்று நான் தினமும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு அலைந்தது உங்களுக்கு நினைவில் இல்லையா? தங்களின் மீதும் தயாரிப்பாளர் சங்கத்தின் மீதும் நான் வைத்திருந்த நம்பிக்கை பொய்யான பின்பு தான் நான் நீதிமன்றத்தை நோக்கி தள்ளப்பட்டேன் என்பது மறுக்க முடியாத உண்மை. தாங்கள் அந்த நேர்காணலில் அமீருக்கு கொடுக்கப்பட வேண்டிய தொகை எவ்வளவு என்பது உறுதி செய்யப்படவில்லை என்று கூறி இருக்கிறீர்கள். இதே கருத்து தான் நீதிமன்றத்திலும் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள Affidavit-ல் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் நான் இப்போது நினைவுபடுத்துகிறேன்.
இந்த பிரச்சனை தொடர்பாக நான் நீதிமன்றம் சென்ற போது தயாரிப்பாளர் சங்கத்தை அணுகவே இல்லை என்று கூறி இருக்கிறீர்கள். மேலும் தங்கள் கணக்கு வழக்கு இப்போது எடுத்து வாருங்கள் அதை வைத்து சரி பார்த்துக் கொள்ளலாம் என்று நேர்காணலில் ஒரு இடத்தில் குறிப்பிட்டீர்கள். 17 வருடங்களுக்கு முன்பாகவே கணக்கு வழக்கு அனைத்தையும் தயாரிப்பாளர் திரு கஃபார் அவர்கள் மூலமாக சங்கத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதை ஞானவேல் ராஜா அவர்களிடம் தயாரிப்பாளர் சங்கம் கொடுத்து விட்டது என்பதை மறந்து விட்டீர்கள் என நினைக்கிறேன். பருத்திவீரன் திரைப்பட வெளியீட்டிற்கு பிறகு சூர்யா அவர்களும் கார்த்தி அவர்களும் எனக்கு தேதி தருவதாக சொன்னதாகவும் அதற்கு அவர்கள் என்னை பலமுறை தொடர்பு கொண்டதாகவும் அவர்களை வைத்து படம் தயாரித்து நான் லாபம் சம்பாதிக்கலாம் என திரு சிவகுமார் அவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டதாகவும் ஒரு தகவலை கூறி இருக்கிறீர்கள். யாரும் என்னை தொடர்பு கொள்ளவும் இல்லை யாரும் என்னை சந்திக்கவும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
மேலும் ஞானவேல் ராஜா அவர்களே பல நேர்காணலில் பருத்திவீரன் திரைப்படத்திற்காக 4 கோடி 85 லட்சம் செலவளித்ததாக கூறிய போது தாங்கள் ஆறு கோடி ரூபாய் செலவானதாக தவறான தகவலை கொடுத்திருக்கிறீர்கள். குறிப்பாக Team work Production house தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் இருந்த தனது பருத்திவீரன் திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின் யார் யார் எந்தெந்த ஏரியாக்களில் விநியோக உரிமையை கைப்பற்றினார்கள் என்ற விபரத்தையும் பேச்சுவார்த்தையின் போது யார் யார் உடன் இருந்தார்கள் என்பதையும் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். இறுதியாக அந்த நேர்காணலில் படம் வெற்றி பெற்றுவிட்டது .அதனால் ஸ்டூடியோகிரீன் நிறுவனத்தார் ஞானவேல் ராஜா அமீருக்கு அவர்கள் ஏதேனும் பணம் தர வேண்டும் என்று கூறியிருந்தீர்கள்.
நான் பெற விரும்புவது “யாசகம் அல்ல என்னுடைய உரிமையை” என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கும் இந்த பிரச்சனை சார்ந்தவர்களுக்கும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மிக நீண்ட கடிதத்தை எழுதியுள்ளார்.