‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் வெளியான இரண்டு நாட்களிலே 100 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வரலாற்று புதினமான பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்கள் கொண்ட படமாக மணிரத்னம் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில அமோக வரவேற்பைப் பெற்றது. உலகெங்கிலும் சுமார் 500 கோடி வரை வசூல் செய்தது.
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது. இந்தப் பாகத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. முதல் நாளில் உலகம் முழுவதும் இந்தப் படம் 60 கோடி வசூல் செய்தது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படமும் நல்ல வசூலைக் குவித்து வருவதால் வெளியான இரண்டே நாளிலே உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்துள்ளது. வரும் நாட்களிலும் அதிக வசூல் படைத்து இந்தப் பாகமும் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் மணிரத்னம் பல மாற்றங்களைச் செய்துள்ளதால் புத்தகம் படித்த பல ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிகிறது.