நடிகர் ரவி மோகன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் லோகோவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரவி. இவரது நடிப்பில் கடைசியாக காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியானது. அதை தொடர்ந்து இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். மேலும் டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது தவிர டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார் ரவி. இந்த படத்தில் ரவியுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது இந்த படமானது டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் உருவாக இருப்பதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் நடிகர் ரவி இயக்குனராகவும் அறிமுகமாகி யோகி பாபுவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும் தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் நடிகர் ரவி, தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார். அதன்படி ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் தனது தயாரிப்பு நிறுவனத்தின் லோகோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ரவி.