மூத்த சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ கே.கே. ரத்தினம் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 1,500 திரைப்படங்களுக்கு மேலாக ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல் ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் என்று அனைத்து ஹீரோக்களின் படங்களிலும் சண்டை இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.
1959 ஆம் ஆண்டில் தாமரைகுளம் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார்.
அதன் பின்னர் 1966 ஆம் ஆண்டில் வல்லவன் ஒருவன் திரைப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமானார். அதன் பின்னர் 1500 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்.
இறுதியாக தலைநகரம் திரைப்படத்தில் நடிகராக நடித்து இருந்தார். இவரது சிஷ்யர்களாக சூப்பர் சுப்பராயன், ராம்போ ராஜ்குமார், எஃப்இஎஃப்எஸ்ஐ விஜயன், தளபதி தினேஷ் , ஜாகுவார் தங்கம் , பொன்னம்பலம் , ஜூடோ. கே.கே.ராமு, இந்தியன் பாஸ்கர், ராஜசேகர், அம்பூர். ஆர்.எஸ். பாபு மற்றும் எம். ஷாஹுல் ஹமீத் அகியோர் உதவியாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர்.
அவரது மகன் ஜூடோ. கே.கே.ராமுவும் ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் ஆவார். அவரது பேரன்கள் ஜூடோ லெனின் மற்றும் ஜான் பிரின்ஸ் ஆகியோரும் ஸ்டண்ட் கலைஞர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் ஜூடோ ரத்தினம் உடல் சென்னை வடபழனியில் உள்ள தென்னிந்திய திரைப்பட ஸ்டண்ட் இயக்குனர்கள் யூனியன் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் திரை உலகினர் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது.
காலை 11மணி அளவில் அவரது உடல் அவரின் சொந்த ஊரான குடியாத்தத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
நாளை அவரது உடல் அங்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. ஜூடோ ரத்தினம் உடலுக்கு அஞ்சலி செலுத்தி பின் பேட்டியளித்த ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், அவரது இழப்பு ஸ்டண்ட் யூனியனுக்கு ஒரு பேரிழப்பு என்றும் அவரது இழப்பை யாராலும் ஸ்டண்ட் யூனியனில் ஈடுசெய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.