பிரபல நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமாருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
நடிகை வரலட்சுமி சரத்குமார் கடந்த 2012 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்த தாரை தப்பட்டை உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். அதே சமயம் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் வில்லியாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக வெளியான ஹனுமான் படத்திலும் வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள ராயன் திரைப்படத்திலும் நடிகை வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதற்கிடையில் நடிகர் சிம்புவுக்கும் வரலட்சுமி சரத்குமாருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக பல செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இருப்பினும் இருவரும் நண்பர்களாக பழகி வருவதாகவே தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தான் வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிகேலாய் சச்தேவ் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடந்து முடிந்த இவர்களின் நிச்சயதார்த்தத்திற்கு ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இது சம்பந்தமான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இவர்களின் திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.