தெலுங்கில் உச்ச நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா. நடிகை ராஷ்மிகா அறிமுகமானது கன்னட சினிமாவாக இருந்தாலும், அவர் முன்னணி நடிகையாக வலம் வருவது தெலுங்கு சினிமாவில்தான். தற்போது இந்தியில் அனிமல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் இந்தியிலும் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
இப்படம் தான் ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் அறிமுகமான முதல் படமாகும். இத்திரைப்படம் தெலுங்கில் மாபெரும் ஹிட் அடித்தது. தெலுங்கு மட்டுமன்றி தமிழிலும் படம் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து டியர் காம்ரேட் திரைப்படத்திலும் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இதன்பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை. ஆனால், இருவரும் ஒன்றாக வெளிநாடுகளுக்கு செல்வது என அடிக்கடி சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டனர். அண்மையில் இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை இருவருமே மறுத்தனர்.
இந்நிலையில், விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியிருக்கும் பேமிலி ஸ்டார் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 5-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. நடிகை ராஷ்மிகாவின் பிறந்தநாளும் அதே நாள் தான். இதனால், காதலியின் பிறந்தநாள் பரிசாக தனது படத்தை விஜய் தேவரகொண்டா வெளியிடுகிறார் என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.