தன் மரணத்தை முன்பே அறிந்த மருத்துவர்
நுரையீரல் புற்றுநோயால் தான் இறக்கபோவதை முன்கூட்டிய அறிந்து மரணத்தை தைரியத்துடன் எதிர்கொண்ட இளம் மருத்துவரின் செயல்பாடு அனைவரையும் உருக வைத்துள்ளது.
தெலுங்கானாவில் உள்ள கம்மம் நகரைச் சேர்ந்தவர் ஹர்ஷவர்தன். 34 வயதான ஹர்ஷவர்த்தன் எம்.பி.பி.எஸ் முடித்து ஆஸ்திரேலியாவில் டாக்டராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி அவருக்கும் கம்மம் நகரில் உறவினரின் பெண் ஹேமா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து அதே மாதம் 29ஆம் தேதி அவர் மட்டும் மீண்டும் ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றார். விரைவில் தன் மனைவியை விசா உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்த பின் அழைத்து செல்கிறேன் என்று ஹர்ஷவர்தன் கூறி சென்று இருந்தார்.
இந்த நிலையில், அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த போது அவர் ரத்த வாந்தி எடுத்தார். அதனை தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
தொழில் ரீதியாக டாக்டர் ஆன அவருக்கு இரண்டு ஆண்டுகளில் மரணம் அடைந்து விடுவேன் என்று அப்போதே அவருக்கு தெரிந்து விட்டது. எனவே இது பற்றி தொலைபேசியில் தன்னுடைய பெற்றோருக்கு தகவல் தெரிவித்த ஹர்ஷவர்தன், இப்போது இங்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் அவருடைய பெற்றோர்கள் இந்தியாவுக்கு வந்து விட்டால் இங்கு சிகிச்சை எடுத்து கொள்ளலாம் என்று அவரை வற்புறுத்தியுள்ளனர்.
ஆனால் ஆஸ்திரேலியாவில் தரமான சிகிச்சை கிடைக்கிறது என்று பெற்றோரிடம் ஆறுதலாக கூறியிருந்தார்.
இந்நிலையில் தன்னுடைய மரணம் நெருங்கி கொண்டிருப்பதை உணர்ந்த ஹர்ஷவர்த்தனுக்கு, தான் இறந்து விட்டால் தன் இளம் மனைவி விதவை ஆகிவிடுவாரே என்ற கவலை ஏற்பட்டது. இளம் மனைவி விதவை ஆகிவிட்டால் அவருடைய மொத்த வாழ்க்கையும் பாதிக்கப்படுமே என்று கவலைப்பட்டார்.
இந்நிலையில் எதிர்பாராமல் ஏற்பட்ட சூழ்நிலை பற்றி அவர் மனைவியுடன் பேசி புரிய வைத்தார். பின்னர் இருவரின் சம்மதத்துடன் விவாகரத்து செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து மனைவி வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக இடையூறுகளை சந்திக்காத வகையில் அவருக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தார் ஹர்ஷவர்தன்.
இது தவிர தன்னுடைய உடல்நிலை பற்றி வக்கீல் ஒருவர் மூலம் ஆஸ்திரேலியா நாட்டு அதிகாரிகளிடம் தெரிவித்த அவர், நான் இறந்த பின் என்னுடைய உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறி அதற்குரிய விமான கட்டணம் முழுவதையும் செலுத்தியுள்ளார்.
இது தவிர தன்னுடைய உடலை எடுத்துச் செல்ல பயன்படுத்தக்கூடிய சவப்பெட்டி ஒன்றையும் ₹3.5 லட்சம் செலவு செய்து தயார் செய்தார். அவ்வப்போது இடை இடையே குடும்பத்தாருடன் வீடியோ கால் மூலம் பேசி பெற்றோர், உறவினர்களை ஆறுதல்படுத்தி வந்துள்ளார்.
கடந்த மாதம் 24 ஆம் தேதி ஹர்ஷவர்த்தன் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்த தன்னுடைய நண்பர்களிடம் நான் இன்னும் இரண்டு மணி நேரங்களில் இறந்து விடுவேன் என்று கூறி எல்லோரையும் ஹர்ஷவர்த்தன் துயரத்தில் ஆழத்தியுள்ளார்.
அவர் கூறியது போலவே அன்றே ஆஸ்திரேலியாவில் மரணம் அடைந்தார்.
ஏற்கனவே அவர் செய்து வைத்திருந்த ஏற்பாடுகளின் அடிப்படையில் ஹர்ஷவர்த்தன் உடல் அவருக்காக தயார் நிலையில் வைத்திருந்த சவப்பெட்டியில் வைத்து விமான மூலம் ஹைதராபாத்தில் உள்ள பேகம் பேட் விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டனர். அங்கிருந்து சொந்த ஊரில் 8 ஆம் தேதி இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.
மரணத்தை தைரியமாக எதிர்கொண்ட டாக்டர் ஹர்ஷவர்த்தனின் மரண போராட்டத்தில் தன்னை சார்ந்தவர்கள் பாதிக்ககூடாது என அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தனக்கான சவப்பெட்டி, விமான டிக்கெட் உள்ளிட்ட அனைத்து முன் ஏற்பாடுகளையும் கேட்கும் ஒவ்வொருவரின் கண்களிலும் கண்ணீர் வரவழைக்கிறது.