தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.12 லட்சமாக உயர்த்தி மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் 2025 – 2026ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அப்போது பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கவும், மக்களி வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும் தாக்கல் செய்யப்படுவதாக கூறினார். நடுத்தர குடும்ப நலனுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 2026-ம் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3 – 6.8 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
பட்ஜெட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் செய்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி, வருமான வரி உச்சவரம்பானது ரூ.7 லட்சம் என்ற அளவில் இருந்து ரூ.12 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்கள் இனி வரி செலுத்த தேவை இருக்காது. புதிய வருமான வரி சலுகை மூலம் நடுத்தர மக்கள் பயன்பெறுவார்கள்.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய வரி முறையின் கீழ் திருத்தப்பட்ட வரி அடுக்குகள் மற்றும் வரி விகிதங்கள் வருமாறு: ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரையுள்ளவர்களுக்கு 5% முதல் 10% வரை வரி பிடித்தாலும் கழிவுகள் போக வரி இருக்காது. ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி கிடையாது. ஆண்டு வருமானம் ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 5% வருமான வரி பிடித்தாலும் கழிவுகள் போக வரி இருக்காது. இதேபோல், ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 10% வருமான வரி பிடித்தாலும் கழிவுகள் போக வரி இருக்காது. அதேவேளையில் ஆண்டு வருமானம் ரூ.11 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 15% வருமான வரி, ஆண்டு வருமானம் ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை 20% வருமான வரியும் விதிக்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை 25% வருமான வரி விதிக்கப்படும்.