டெல்லிக்கு சென்று வந்த எடப்பாடி பழனிசாமி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகச் சொல்கிறார்கள். காரணம், தனது கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பைல்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என பாஜக தலைமை உறுதியாக சொல்லி அனுப்பி அனுப்பி இருக்கிறார்கள். அதோடு அதிமுகவுக்கு இன்னும் சில மாதங்களில் ரெண்டு எம்.பி., பதவி வரப்போகிறது.
இதில் ஒன்றை தனது மகன் மிதுனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுக்கப் போவதாக அதிமுகவினர் கூறுகின்றனர். டெல்லியை பொறுத்தவரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விசுவாசமான ஆட்கள் இல்லை என்று நினைப்பதாகச் சொல்கிறார்கள். இதனால், டெல்லியில் என்ன நடக்கிறது என தெரியாமல் அவ்வப்போது தவித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
தனது மகனை எம்.பி ஆக்குவதன் மூலம், டெல்லியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என திட்டம் வைத்திருக்கிறார். இதற்கு டெல்லியின் சம்மதத்தையும் வாங்கிவிட்டு வந்துள்ளதாகச் சொல்கிறார்கள். அப்படி என்றால் இன்னொரு எம்.பி., பதவி யாருக்கு? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கும் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் துண்டு போட்டு வைத்ருக்கிறார் எனக் கூறப்படுகிறது.
கட்சியின் சீனியரான அவர், பார்க்காத பதவியே இல்லை என்கிறார்கள். என்றாலும் அந்த பதவி தனக்கு கிடைத்தால் நாடாளுமன்றத்தில் அதிமுகவை தூக்கிப்பிடிப்பேன் என்று கூறி வருகிறார். தான் எம்பியாக இருந்தபோது, செய்த சாதனைகள் என்று பட்டியலிட்டுக்கிட்டே அவரது அடிப்பொடிகளின் காதினில் தேனை பாய்ச்சி வருகிறார் செம்மலை. அவர்களும் உங்களை விட்டால் வேறுயாரும் அந்த பதவிக்கு பொருத்தமாக இருக்கமாட்டார்கள் என அவரை உசுப்பேற்றி வருகிறார்கள். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நன்கு அறிந்தவர்கள் இதெல்லாம் நடக்காது என்று சொல்கிறார்கள். என்றாலும் இம்முறை தனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் எனக் காத்திருக்கிறார் செம்மலை என்கிறார்கள்.